ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் இருக்கும் கார்கில் மாவட்டத்தில் அமைந்திருக்கும் த்ராஸ், 'லடாக்கின் நுழைவாயில்' என்றும் அழைக்கப்படுகிறது. கடல் மட்டத்தில் இருந்து 3280 அடி உயரத்தில் இருக்கும் இப்பகுதி உலகின் இரண்டாவது மிகக் குளிரான மக்கள் வாழும் பகுதியாக, சைபீரியாவுக்கு அடுத்து அறியப்படுகிறது. 1999ல் இந்தியா பாகிஸ்தானுக்கு இடையில் நடைபெற்ற கார்கில் யுத்தம் நடந்த பகுதியில் இருந்து 62கிமீ தொலைவில் அமைந்திருக்கும் இப்பகுதி புகழ்பெற்ற சுற்றுலாப் பகுதியாகவும் உள்ளது.
லடாக் மட்டுமல்லாது ஜம்மு காஷ்மீரின் பல மலைப்பிரதேசங்களுக்கும், ஊர்களுக்கும் நுழைவாயிலாக திகழ்கிறது. இப்பகுதி கரடுமுரடாக இருப்பதால் சாகச விளையாட்டுகளுக்காக இதனை சுற்றுலா பயணிகள் விரும்புகிறார்கள்.
த்ராஸ் நகரத்தை சுற்றிப்பார்க்க விரும்பும் பயணிகள் நகரத்தின் உள்ளேயே அமைந்திருக்கும் சுரு பள்ளத்தாக்கில் இருந்து மலைப் பயணத்தைத் தொடங்கலாம். மேலும் இங்கிருந்து அமர்நாத் குகைக்கு செல்லும் வழியிலும் பயணம் செல்லலாம். ஆனால் அமர்நாத் குகையை அடைய 5200மீ நீளமுள்ள உயரமான பாதையில் பயணம் செய்யவேண்டும்.
கார்கில் போரில் உயிர்நீத்த வீரர்களுக்காக எழுப்பப்பட்டுள்ள போர் நினைவுச் சின்னம் த்ராஸ் பகுதியில் கண்டிப்பாக பார்க்கவேண்டிய இடமாகும். அறிக்கைகளின் படி இருபக்கமும் உயிர்நீத்த வீரர்கள் எண்ணிக்கை 1200ஆக அறியப்படுகிறது.
போர் நினைவுச் சின்னத்திற்கு அருகில் போர் நினைவுப் பொருட்கள் அடங்கிய அருங்காட்சியகமும் அமைக்கப்பட்டுள்ளது. த்ராஸ்க்கு அருகிலேயே அமைந்திருக்கும் திரெளபதி குண்டத்தை பார்வையிடமும் சுற்றுலாப் பயணிகளுக்கு அறிவுறுத்தப்படுகிறது.
த்ராஸ் செல்ல விரும்பும் சுற்றுலாப் பயணிகள் ரயில், விமானம் மற்றும் தரைவழி போக்குவரத்தின் மூலமும் பயணிக்கலாம். ஜூன் முதல் செப்டம்பர் வரை நிலவும் கோடை காலமே த்ராஸ் செல்ல சிறந்த பருவமாகும்.