290 மீட்டர் உயரத்தில் அமைந்திருக்கும் மலைகளின் தொகுப்பான இந்த எழிமலா தன் மரகதப்பச்சை போன்ற ரம்மியமான இயற்கை வனப்பால் சுற்றுலாப்பயணிகளை வசியப்படுத்துகிறது.
பண்டைக்காலத்தில் மூஷிகா ராஜவம்சத்தின் தலைநகராக விளங்கிய வரலாற்றுப்பின்னணியையும் இது கொண்டுள்ளது. பழமை வாய்ந்த துறைமுகமாவும் விளங்கிய இந்த மலைப்பகுதிக்கு புத்த பஹவான் விஜயம் செய்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த மலைப்பகுதியின் தோற்றமானது ராமாயண காவியத்தில் விவரிக்கப்ப்டும் சில சம்பவங்களுடன் தொடர்புகொண்டுள்ளதாக ஐதீக நம்பிக்கைகள் நிலவுகின்றன.
இப்பகுதியில் பிரசித்தமான ஒரு அனுமான் கோயிலும், மவுண்ட் டெலி எனப்படும் ஒரு கலங்கரை விளக்கமும் முக்கியமான சுற்றுலா அம்சங்களாக அறியப்படுகின்றன. இந்தியக்கடற்படையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த எழிமலா பிரதேசம் 2009ம் ஆண்டில் இந்திய கடற்படை கல்வி மையம் இங்கு துவங்கப்பட்டதிலிருந்து பாதுகாக்கப்பட்ட வளாகமாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கண்ணூர் நகரத்திலிருந்து 55 கி.மீ தூரத்தில் உள்ள இந்த எழிமலா பகுதியின் பாதுகாக்கப்பட்ட பகுதிகளை விஜயம் செய்ய உரிய அதிகாரிகளிடம் முன் அனுமதி பெறுவது அவசியமாகும்.
இங்குள்ள கடற்கரை அமைதியான சூழல் மற்றும் இயற்கை அழகோடு காட்சியளிப்பது குறிப்பிடத்தக்கது. எட்டிக்குளம் வளைகுடாப்பகுதியும் இப்பகுதிக்கு அருகிலேயே அமைந்துள்ளது. இந்த வளைகுடாப்பகுதியில் பயணிகளுக்கு டால்பின்களை பார்த்து ரசிப்பதற்கான வாய்ப்பும் காத்திருக்கிறது.