இண்டியன் நேவல் மரிடைம் மியூசியம் என்று அழைக்கப்படும் இந்த இந்திய கப்பற்படைப்பிரிவு அருங்காட்சியகம் இந்திய கப்பற்படைக்கு சொந்தமானதாகும். இந்தியாவின் போர்ப்படை வலிமையை எடுத்துக்காட்டும் விதத்தில் அமைந்துள்ள இந்த அருங்காட்சியகம் இந்தியச் சுற்றுலாப்பயணிகளை பெருமைப்பட வைக்கும் இயல்பைக் கொண்டுள்ளது.
இந்தியக் கப்பற்படை தன் சாதனைகளுக்காக பெற்றுள்ள பல பதக்கங்களை இங்கு காணலாம். நமது படைவலிமையின் கடந்த கால வெற்றிகள் குறித்தும், எதிர்கால வல்லமை பற்றியும் தெளிவாக தெரிந்து கொள்ள உதவும் ஒரு மையமாகவே இந்த அருங்காட்சியகம் திகழ்கிறது.
1965 மற்றும் 1971ம் ஆண்டுகளில் நடந்த பாகிஸ்தான் நாட்டுடனான போர்களில் இந்திய கப்பற்படையின் பங்கு குறித்த தகவல்கள் இங்கு சித்தரிக்கப்பட்டுள்ளன. மற்ற இரண்டு போர்ப்படைகளான ராணுவம் மற்றும் விமானப்படை ஆகிய இரண்டும் எந்த அளவுக்கு கப்பற்படையால் வழி நடத்தப்பட்டது எனும் தகவல் நம்மில் பலருக்கு அவ்வளவாக தெரியாது.
இந்த கப்பற்படை அருங்காட்சியகத்துக்கு ஒரு முறை விஜயம் செய்வதன் மூலம் நமது படை வலிமை மற்றும் கடந்த கால தேசப்பாதுகாப்பு செயல்பாடுகளை நன்கு அறிந்துகொள்ளலாம்.