தென்மாவட்ட பயணிகள் வசதிக்காக வண்டலூர் அருகே கிளாம்பாக்கத்தில் ரூ.393 கோடியே 74 லட்சத்தில் 88.52 ஏக்கரில் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் டிசம்பர் 31 அன்று திறந்து வைத்தார். கோயம்பேடு மற்றும் புறநகர் பகுதிகளில் நிலவும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையிலும், தென் மாவட்டங்களுக்கு செல்லும் மக்கள் எளிதாக பயணத்தை எளிதாக்குவதோடு இது சென்னையின் போக்குவரத்து நெரிசலையும் இப்போது குறைத்துள்ளது!
இந்தியாவின் மிகப்பெரிய பேருந்து நிலையம் - கிளாம்பாக்கம்
செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் அருகே சென்னை மற்றும் திருச்சிராப்பள்ளியை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கிளம்பாக்கத்தில் 88.52 ஏக்கர் நிலப்பரப்பில் 393.74 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையம் (KCBT) முதல்வர் மு.க.ஸ்டாலினால் திறந்து வைக்கப்பட்டது. இந்தியாவின் மிகப்பெரிய பேருந்து நிலையமாக விளங்கும் இது, நகருக்குள் இருக்கும் போக்குவரத்து நெரிசலை நிவர்த்தி செய்யும்.

நெரிசலை குறைத்த புதிய பேருந்து நிலையம்
பொதுவாக புத்தாண்டு முடிந்து சென்னை திரும்பும் மக்களால், செங்கல்பட்டிலிருந்து கோயம்பேடு வரை போக்குவரத்து நெரிசல் ஏற்படும். ஆனால் இப்போது கடந்த வருடங்களை போல அல்லாமல் இந்த ஆண்டு டிராபிக் குறைவாக காணப்பட்டது. தென் மாவட்ட பயணிகள் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இறங்கி அங்கிருந்து மாறிச் சென்றதால் சென்னை நகருக்குள் போக்குவரத்து நெரிசல் குறைந்தது என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
என்னென்ன பேருந்துகள் செயல்படுகின்றன
சென்னை பெருநகர வளர்ச்சி ஆணையம் (CMDA) வெளியிட்டுள்ள பயண ஆலோசனையின்படி, தென் மாவட்டங்களுக்கு செல்லும் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தின் பேருந்துகள் (SETC) மற்றும் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் (TNSTC) கோயம்பேட்டில் உள்ள சென்னை மொஃபுசில் பேருந்து நிலையத்திலிருந்து (CMBT) கிளம்பாக்கத்தில் உள்ள புதிய பேருந்து நிலையத்துக்கு மாற்றப்பட்டுள்ளது. பைபாஸ் வழியாக செல்லும் புதுச்சேரி சாலைப் போக்குவரத்துக் கழகம் (PRTC) மற்றும் ஆம்னி பேருந்துகள் (தனியார் ஆபரேட்டர்கள்) சேவைகளும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து மட்டுமே செயல்படும்.

தினமும் 2,310 பேருந்துகள் இயக்கப்படும்
சென்னைக்கு அருகே புதிதாக திறக்கப்பட்டுள்ள கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் ஒரு லட்சம் பயணிகளுக்கு சேவை செய்யும் என்றும், தினமும் 2,310 பேருந்துகள் இயக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பெருநகரப் போக்குவரத்துக் கழகம் (MTC) சென்னையின் பல்வேறு நிறுத்தங்களில் இருந்து முனையத்திற்கு பயணிகளின் போக்குவரத்து நெரிசலை எளிதாக்கும் வகையில் தொடர்ந்து ஷட்டில் சேவைகளை இயக்கும்.
ஒவ்வொரு 3 நிமிடத்திற்கும் பேருந்து சேவை
KCBT-ல் இருந்து CMBT, தாம்பரம் மற்றும் கிண்டி செல்லும் பேருந்துகள் ஒவ்வொரு 3-15 நிமிடங்களுக்கு ஒரு பேருந்து என்ற நேர இடைவெளியில் இயக்கப்படும். இரவு 10 மணிக்குப் பிறகு அனைத்து சேவைகளும் 8-15 நிமிடங்கள் நேர இடைவெளியில் செயல்படும். MTC பேருந்துகள் பிராட்வே, திருவான்மியூர், தி நகர், பூந்தமல்லி, ஐயப்பன்தாங்கல் போன்ற பிற வழித்தடங்களுக்கு இயக்கப்பட உள்ளன. ஏழு ஏக்கர் நிலப்பரப்பில் ஒரே நேரத்தில் 60 பேருந்துகள் செல்லும் வகையில் இங்கு நிழற்குடை கட்டப்பட்டுள்ளது.

உலகத்தர வசதிகளுடன் நவீன பேருந்து நிலையம்
1. டெர்மினஸில் ஆண்கள், பெண்கள், திருநங்கைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான பிரத்யேக கழிவறைகள் உள்ளன.
2. இங்கு பிரத்யேக டிக்கெட் கவுன்டர்கள், சக்கர நாற்காலி வசதிகள், தொட்டுணரக்கூடிய தரை தளம், பேட்டரியில் இயங்கும் வாகனங்கள், மாற்றுத்திறனாளிகளுக்கான தனி கழிவறைகள் உள்ளன.
3. மேலும் பாலூட்டும் தாய்மார்களுக்கான உணவு அறைகள் மற்றும் இலவச மருத்துவ மையம் ஆகியவையும் இங்கு உள்ளது.
4. டெர்மினஸில் தரை தளத்தில் 53 கடைகள் மற்றும் இரண்டு உணவகங்கள், முதல் தளத்தில் 47 கடைகள் மற்றும் இரண்டு உணவகங்கள் உள்ளன.
5. ஏடிஎம்கள், எஸ்கலேட்டர்கள், லிஃப்ட் மற்றும் குடிநீர் வசதிகளும் உள்ளன.
6. டெர்மினஸில் 100 ஆண்கள், 40 பெண்கள் மற்றும் 340 ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள் தங்குவதற்கு தங்குமிடங்கள் உள்ளன.
7. பார்க்கிங் பகுதியில் 2,769 இரு சக்கர வாகனங்கள் மற்றும் 324 இலகுரக வாகனங்கள் நிறுத்த முடியும்.
8. டெர்மினஸின் சுவர்கள் நவீன கலை மற்றும் நிலம் மற்றும் மக்களின் பாரம்பரியத்தை சித்தரிக்கும் சிற்பங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளன.
ரயில் நிலையம் மற்றும் பேருந்து நிலையத்தை இணைக்கும் ஸ்கைவாக் பாலம்
பேருந்து சேவைகள் காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் இருக்க சாலைகளை விரிவுபடுத்தவும் அரசு திட்டமிட்டுள்ளது. புறநகர் ரயில் நிலையம் மற்றும் ரயில் நிலையம் மற்றும் பேருந்து நிலையத்தை இணைக்கும் ஸ்கைவாக் பாலம் கட்டுவதற்கான ஆயத்தப் பணிகள் நடைபெற்று வருகின்றன. 16 ஏக்கர் நிலப்பரப்பில் தொல்லியல் விளக்க மையம் மற்றும் காலநிலை பூங்கா அமைக்கவும் அரசு செயல்பட்டு வருகிறது.
பொங்கலுக்கு பிறகு முழு வீச்சில் செயல்படும்
SETC மற்றும் MTC சேவைகள் முனையத்திலிருந்து முழுமையாக செயல்படத் தொடங்கியுள்ள நிலையில், விழுப்புரம், கும்பகோணம், சேலம், கோயம்புத்தூர், மதுரை மற்றும் திருநெல்வேலி போக்குவரத்துக் கழகங்கள் மற்றும் ஆம்னி பேருந்துகளின் சேவைகள் பொங்கலுக்குப் பிறகு ஜனவரி மூன்றாவது வாரத்தில் முழுமையாகத் தொடங்கும்.
சென்னை பஸ் செயலி பயன்படுத்துங்கள்
பேருந்து வழித்தடங்கள் மற்றும் நேரங்கள் குறித்த கூடுதல் விவரங்களுக்கு 'சென்னை பஸ்' செயலியைப் பயன்படுத்துமாறு அதிகாரிகள் பயணிகளை கேட்டுக் கொண்டுள்ளனர்.



Click it and Unblock the Notifications





