வார இறுதிகளிலும், நீண்ட விடுமுறை நாட்களிலும் புதுச்சேரி நோக்கி படையெடுக்கும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே போகிறது. இதனால் புதுவையை பேருந்து, ரயில், விமானம் மூலம் இணைப்பது மிகவும் அவசியமாகும். இந்நிலையில் 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தின் கீழ் புதுச்சேரி புதிய பேருந்து நிலையத்தை புதுப்பித்து வருகின்றனர். புதுவை பேருந்து நிலையம் முழுமையாக தயாரான நிலையில், AFT மைதானத்தில் தற்காலிகமாக இயங்கி வந்த புதுவை பேருந்து நிலையம் வழக்கம் போல் புதுவை பேருந்து நிலையத்திற்கு மாற்றப்படவுள்ளன!
அதிகரித்து வரும் புதுச்சேரி சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை
வார இறுதிகளிலும், விடுமுறை நாட்களிலும் புதுச்சேரிக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது. எத்தனை பேருந்துகள் இயக்கப்பட்டாலும் புதுச்சேரி பேருந்து நிலையம் மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழிகிறது. இதற்கிடையில் 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தின் கீழ் புதுச்சேரி புதிய பேருந்து நிலையத்தை புதுப்பித்து வருகின்றனர். புதுச்சேரி மறைமலை அடிகள் சாலையில் இயங்கி வந்த புதுவை பேருந்து நிலையம் பராமரிப்பு பணிகளால் ஜூன் 2024 முதல் மூடப்பட்டிருந்தது.

சீரமைக்கப்படும் புதுவை பேருந்து நிலையம்
புதுச்சேரியில் 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தின் கீழ் பல்வேறு திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக புதுச்சேரி புதிய பேருந்து நிலையம் ரூ.30 கோடியில் கட்ட திட்டமிடப்பட்டு, பூமிபூஜை போடப்பட்டது. இதில் முதல்கட்டமாக பேருந்து நிலையத்தின் மைய பகுதியில் கட்டிடம் கட்ட முடிவு செய்யப்பட்டது. இதற்காக மைய பகுதியைச் சுற்றிலும் தடுப்புகள் அமைக்கும் பணி தொடங்கி, புதுச்சேரி புதிய பேருந்து நிலையத்தில் பொலிவுறு நகரத் திட்டப் பணிகள் நடைபெற்று வந்தன. இதனால் கடந்த ஜூன் மாதம் முதல் AFT மைதானம் புதுவை பேருந்து நிலையமாக செயல்பட்டு வந்தது.
புதிய பேருந்து நிலையத்தில் உள்ள வசதிகள்
4 ஏக்கர் பரப்பளவு கொண்ட பேருந்து நிலையத்தின் மையப்பகுதியில் உணவகம், டிக்கெட் புக்கிங் ஆபீஸ், போக்குவரத்து அலுவலகம், விசாரணை அலுவலகம், சிசிடிவி கண்காணிப்பு அறை, டைமிங் அலுவலகம், நிர்வாக அலுவலகம், பாலூட்டும் தாய்மார் அறை, மூன்று வெயிட்டிங் ஹால், ஏசி காத்திருப்பு அறை மற்றும் மின்சார அறை உள்ளிட்ட 31 கடைகள் அமைக்கப்பட்டுள்ளது.

பேருந்து நிலையத்தில் செய்யப்பட்டு வரும் மேம்பாடுகள்
புதிதாக கட்டப்பட்டு வரும் பேருந்து நிலையத்தில் ஒரே நேரத்தில் 46 பேருந்துகள் நிறுத்த முடியும் எனவும் அதற்கான அனைத்து வசதிகளையும் செய்துள்ளனர் ஆனால் பழைய பேருந்து நிலையத்தில் 32 பேருந்துகள் வரை மட்டுமே நிறுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. அதே போல, பேருந்து நிலையத்தின் இடது புறத்தில் இருசக்கர கார் பார்க்கிங் ஆம்னி பேருந்துகள் நிற்கும் இடம் ஆகியவை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றது. பேருந்து நிலையத்தை சுற்றிலும் 33 மின் விளக்குகளும் உயரமானமின் கம்பம் நடும் பணியும் தற்போது நிறைவடைந்துள்ளது.
பேருந்து நிலையத்தை சுற்றி பார்க்கிங் வசதி
பேருந்து நிலைய வளாகத்தைச் சுற்றி 300 க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள், 25 நான்கு சக்கர வாகனங்கள், 18 ஆட்டோக்கள் மற்றும் 10 டாக்சிகள் நிறுத்த இடவசதி செய்யப்பட்டுள்ளது. இறுதிகட்ட பணிகள் மும்முரமாக நடந்து வரும் நிலையில், 'புதுச்சேரி நகராட்சி ராஜீவ் காந்தி ஒருங்கிணைந்த பொலிவுறு போக்குவரத்து முனையம்' என்று தமிழிலும், ஆங்கிலத்திலும் பெயர் பலகையும் வைக்கப்பட்டு தற்போது மிக அழகாக காட்சியளிக்கிறது.
பிப்ரவரி 2025 க்குள் திறப்பு
பேருந்துகள் எப்படி வந்து, எப்படி செல்ல வேண்டும் என்று கடந்த டிசம்பர் மாதமே சோதனை ஓட்டம் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. கடந்தாண்டு அக்டோபர் மாதமே திறக்கப்படும் என்று முதலில் தெரிவிக்கப்பட்டது. பிறகு டிசம்பரில் திறப்பு விழா என்று கூறப்பட்டது. ஆனாலும் திறக்கப்படவில்லை. பணிகளை முடிப்பதில் சற்று தாமதம் ஆனதால் திறப்பு தேதி தள்ளிப் போனது. இப்பணிகளை மேற்கொண்டு வந்த தேசிய கட்டுமான கழகம் தனது தரப்பு பணியை முடித்து, பேருந்து நிலையத்தை சமீபத்தில் புதுச்சேரி நகராட்சியிடம் ஒப்படைத்துள்ளது. புதுவை முதல்வர் அலுவலகத்திற்கு செய்தி அனுப்பி தேதியும் தற்போது கேட்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இன்னும் ஓரிரு வாரங்களில் அதாவது பிப்ரவரி மாதம் முடியும் முன்னரே பேருந்து நிலையம் திறக்கப்படும் என்று அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளிவந்துள்ளன.



Click it and Unblock the Notifications






