நெடுஞ்சாலைகளில் பயணம் செய்பவர்களுக்கான உணவகங்கள் மோட்டல் எனப்படுகின்றன. மோட்டல் என்பது கூடுதல் மகிழ்வைத் தரக்கூடியதாக இருக்க வேண்டும். பயணத்துக்கிடையே, சற்று இளைப்பாறி, வயிற்றுக்கும் மனதுக்கும் நிறைவை ஏற்படுத்தக்கூடிய இடங்கள் அவை. ஆனால், தமிழகத்தில் உள்ள பயணவழி உணவகங்கள் யாவும் தரமான, ருசியான உணவை வழங்குகின்றன என்பதற்கு எந்த உத்திரவாதமும் இல்லை! அதனால் தான் தமிழக அரசு ஒரு முக்கிய முடிவு எடுத்துள்ளது!

பேருந்துகளில் பயணிக்கும் போது ஏற்படும் அவலநிலை
நல்ல உணவு சாப்பிட வேண்டும் என்று தான் நாம் பேருந்தை விட்டு இறங்கி வருகிறோம். ஆனால், உண்மை நிலை அப்படி இல்லை என்பது சாலை வழி பயணம் மேற்கொள்ளும் அனைவருக்கும் தெரியும் - குறிப்பாக அரசு பேருந்துகளில் பயணிப்போருக்கு. பெரும்பாலும் மதியம் அல்லது இரவு நேரத்தில், ஊருக்கு வெளியில் வரிசைகட்டி நிற்கும் நான்கைந்து மோட்டல்களில் ஒன்றில் அரசு பேருந்து நிற்கும். பசித்தீயுடன் மோட்டல்களுக்குள் நுழையும் பயணிகளான நாம், வயிற்றெரிச்சல் தீயுடன் வெளியே வருகிறோம்.

அதிக விலைக்கு விற்கப்படும் உணவு பொருட்கள்
தமிழக அரசுப் பேருந்துகளில் நெடுந்தூரம்பயணிக்கும் பயணிகள், பேருந்து நிறுத்தப் படும் பயண வழி உணவகங்களில் தான் சாப்பிட வேண்டும் என்ற நிலை இருந்து வருகிறது. அதோடு தரமற்ற உணவுகளையும், குளிர்பானங் களையும் மும்மடங்கு அதிக விலை கொடுத்து வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர். இயற்கை உபாதை கழிப்பதற்கான கட்டணத்தை ரூ.10 வரை வசூலிப்பது மட்டுமின்றி, அதற்கான இடம் சுகாதாரமற்ற முறையில் இருப்பது போன்ற துயரங்களை பயணிகள் சந்திப்பது பல ஆண்டுகளாக தொடர்ந்து நடைபெற்று வந்தது. இதற்கு அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் உடந்தையாக இருப்பது தொடர் பாக விமர்சனங்கள் எழுந்தன.
தரமில்லாத உணவுகளுக்கு வைக்கப்படும் முற்றுபுள்ளி
நெடுஞ்சாலைகளில் இருக்கும் சில தனியார் உணவகங்களில் தரமற்ற உணவுகள் மற்றும் கூடுதல் விலைக்கு உணவு பொருட்கள் விற்பதாக பயணிகள் புகார் தெரிவித்து வந்தனர். குறிப்பாக மாமண்டூரில் உள்ள பயணவழி உணவகத்திலும், விக்கிரவாண்டி அருகே செயல்பட்டு வரும் 5 உணவகங்கள் சுகாதாரமற்ற உணவுப் பொருட்களை அதிக விலைக்கு விற்பதாக புகார் எழுந்த வண்ணம் இருக்கிறது. இது ஒரு பக்கம் இருக்க, அரசு சார்பில் கூறப்படாத ஹோட்டல்களிலும் பேருந்துகள் நிற்கப்படுவதாக கூறப்படுகிறது.

அங்கீகரிக்கப்பட்ட உணவகங்களின் பட்டியலை வெளியிட்ட தமிழக அரசு
ஒப்பந்த அடிப்படையில் இந்த மோட்டல்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு வரும் நிலையில், ஒவ்வொரு மாதமும் தங்கள் ஹோட்டல்களில் நின்று சென்ற அரசுப் பேருந்துகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப குறிப்பிட்ட தொகையை, ஜிஎஸ்டியுடன் சேர்த்து போக்குவரத்து கழகத்திற்கு ஹோட்டல் நிர்வாகங்கள் செலுத்தி வருகின்றன. ஆனால், ஒப்பந்தம் பெறாத உணவகங்களில் அரசு பேருந்துகள் நிறுத்தப்படுவதாக பயணிகள் தரப்பில் தொடர் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. இதையடுத்து, அங்கீகரிக்கப்பட்ட உணவகங்களின் பட்டியலை வெளியிட வேண்டும் என பொதுமக்கள், பயணிகள் கோரிக்கை வைத்தனர்.

தெரியாத உணவகத்தில் நின்றால் புகார் தெரிவிக்கலாம்
இதையடுத்து 52 அங்கீகரிக்கப்பட்ட உணவகங்களின் பட்டியல் https://www.arasubus.tn.gov.in/motel.php என்னும் போக்குவரத்துத் துறை இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதன் மூலம், பேருந்துகள் நிறுத்தப்பட வேண்டிய ஹோட்டல்களின் விவரங்களை பொதுமக்களும், பயணிகளும் தெரிந்துக் கொள்ளலாம் என தமிழக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இதில் குறிப்பிடப்படாத ஹோட்டல்களில் அரசு பேருந்து நின்றால் நீங்கள் தமிழக அரசு போக்குவரத்து கழகத்திற்கு புகார் அளிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது!



Click it and Unblock the Notifications





