திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு உட்பட்ட கீழ் திருப்பதியில் அமைந்துள்ள ஸ்ரீ கோவிந்தராஜ சுவாமி கோவிலில் ஜூன் 1 (வியாழன்) அன்று மாலை 300 ஆண்டு கால பழமையான மரம் விழுந்ததில், ஒரு பக்தர் பரிதாபமாக உயிரிழந்தார். ஆனால் பிரமோற்சவம் நடைபெற்று வரும் சமயத்தில், திரளான கூட்டம் கூடியிருந்த நிலையும் பெரும் உயிர் சேதம் எதுவுமில்லாமல் அங்கு கூடியிருந்த மக்களின் உயிரை காப்பாற்றியது அந்த கோவில் யானை என்று கூறப்படுகிறது. மரம் விழப் போவதை முன் கூட்டியே உணர்ந்த கோவில் யானை அதிகமாக பிளிறி கொண்டிருந்ததாகவும், அதனால் பயந்த பக்தர்கள் அந்த இடத்திலிருந்து நகர்ந்ததால் கோர விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது என்பது இப்போது தெரிய வந்துள்ளது.

கோவிந்தராஜ சுவாமி வளாகத்தில் விபத்து
கீழ் திருப்பதியில் ஜூன் 1 ஆம் தேதி மாலை 4.45 மணியளவில் திடிரென்று 1௦ நிமிடங்களுக்கு பலத்த சூறாவளி காற்றுடன் மழை பெய்துள்ளது. இதனால் ஸ்ரீ கோவிந்தராஜ சுவாமி வளாகத்தில் இருந்த சுமார் 3௦௦ ஆண்டுகள் பழமையான ஆல மரம் ஒன்று இரண்டாக பிளந்து கீழே விழுந்துள்ளது. அப்பொழுது அந்த மரத்தின் கீழ் ஒதுங்கி நின்றிருந்த பக்தர்கள் மீது மரம் விழுந்ததால் அதில் ஒரு ஒரு பக்தர் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் 3 பக்தர்கள் ஆபத்தான காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பக்தர்களில் ஒருவர் உயரிழப்பு
இந்த விபத்தில் பலியானவர் கடப்பாவைச் சேர்ந்த 65 வயதான ஒரு ஓய்வு பெற்ற டாக்டர் என்பதும் திருப்பதியில் டாக்டருக்கு படித்து வந்த தனது மகளை பார்க்க வந்திருந்த போது இந்த விபத்தில் பலியானது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
எதிர்பாராத நேரத்தில் விபத்து
கோவிந்தராஜ சுவாமி கோவிலில் தற்போது வருடாந்திர பிரமோற்சவ திருவிழா நடைபெற்று வருவதால் கோவிலில் பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளது. திடீரென்று சூறாவளி காற்றுடன் மழை பெய்ய தொடங்கியதால் கோவில் குளத்திற்கு அருகே இருந்த பெரிய ஆலமரத்தின் அடியில் பக்தர்கள் மழைக்காக ஒதுங்கி நின்றனர். யாரும் எதிர்பாராத நேரத்தில் இந்த விபத்து நடந்து முடிந்து விட்டது.

பக்தர்களின் உயிரை காப்பாற்றிய கோவில் யானை
விபத்து நடப்பதற்கு முன்பு அந்த மரத்தின் கீழே கட்டப்பட்டிருந்த கோவில் யானை ஒன்று மரம் முறிந்து கீழே விழப்போவதை முன் கூட்டியே அறிந்தது போல சத்தம் எழுப்பிக் கொண்டிருந்தது. யானையின் பிளிறல் சத்தத்தை கேட்டு பயந்த பக்தர்கள், என்ன நடக்கிறது என்று தெரியாத குழப்பத்தில் அந்த இடத்தை விட்டு வேறு இடத்திற்கு சென்று விட்டனர். பெரும் கூட்டம் மரத்தின் கீழ் நின்றிருந்த நிலையில் யானையின் சத்தத்தால் அவர்கள் வேறு இடத்திற்கு சென்றதால் பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது.

பெரும் சேதம் தவிர்ப்பு
அதுமட்டுமில்லாமல் பிரமோற்சவ திருவிழாவில் கலந்துக்கொள்ள பெரும் திரளான பக்தர்கள் கூட்டம் கோவிந்தராஜ சுவாமி கோவிலில் இருந்த இந்த நேரத்தில், பெரும் உயிர் சேதம் ஏற்படவில்லை என்பது மகிழ்ச்சியான செய்தியாகும். யானை மட்டும் சத்தம் எழுப்பாமல் இருந்திருந்தால் என்ன ஆகி இருக்கும் என்றே கூற முடியாது.

அதிர்ச்சியில் கோவில் ஊழியர்கள்
கோவிலின் பல ஆண்டுகளாக நிமிர்ந்து நின்று நிழலையும் காற்றையும் தந்து வந்த பழைய மரம் முறிந்து விழுந்ததைக் கண்ட கோவில் ஊழியர்கள் அதிர்ச்சியடைந்தனர். பல் நூற்றாண்டுகளாக பற்பல புயலையும், மழையையும் தாங்கி நின்ற பெரிய மரம் இப்போது விழுந்துள்ளது. திருமலை திருப்பதி தேவஸ்தானம் உயிரிழந்த பக்தரின் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்கியுள்ளது.
கோவிந்தராஜ சுவாமி கோவிலில் கோபுரம் புதுப்பித்தல் பணி மற்றும் கோவில் விமானத்திற்கு தங்கம் பூசும் பனி ஆகியவை கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக நடந்து வந்த நிலையில் பணிகள் முடிந்து 1 வாரத்திற்கு முன்பு தான் மகா சம்ப்ரோக்ஷணம் நடந்து முடிந்தது என்பது குறிப்பிடத்தக்கது.



Click it and Unblock the Notifications







