இந்தியா ஒரு வளர்ந்து வரும் நாடாக தகவல் தொழில்நுட்பம், மருத்துவம், கட்டமைப்பு, கல்வி, அறிவியல் என பல்வேறு துறைகளில் சாதித்து வருகிறது. அதில் ஒரு சிறு மைல் கல்லாக இப்போது ஒரு விஷயம் சேர்ந்துள்ளது. ஆம்! உலகிலேயே மிக நீளமான ரயில்வே பிளாட்பாரம் இந்தியாவில் தான் உள்ளதாம். இந்திய இரயில்வேயின் தென்மேற்கு இரயில்வே (SWR) மண்டலத்தின் ஹூப்பள்ளி, ஸ்ரீ சித்தாரூத சுவாமிஜி நிலையம் உலகின் மிக நீளமான ரயில் நடைமேடையைக் (1507 மீ) கொண்டுள்ளதால் கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்று சாதனை படைத்துள்ளது. அதனைப் பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள் இதோ!

20 கோடி ரூபாயில் உருவான உலகின் மிக நீளமான பிளாட்பாரம்
உலகின் மிக நீளமான ரயில் நடைமேடை கொண்டதாக கர்நாடகாவின் ஹூப்பள்ளி ரயில் நிலையம் கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது. 1,507 மீட்டர் நீளம் கொண்ட இந்த மேடையை பிரதமர் நரேந்திர மோடி மார்ச் 12 ஆம் தேதி திறந்து வைத்தார். சுமார் 20 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட இந்த நடைமேடையானது, ஹூப்பள்ளி யார்டை மறுவடிவமைக்கும் ஒரு பகுதியாக சீரமைக்கப்பட்டது. மின்னணு இன்டர்லாக்கிங் மூலம் யார்டு மறுவடிவமைப்பும் இந்த ரயில் நிலையத்தில் செய்யப்பட்டது என்பது குறிப்பிடதக்கது.

அதிக அளவில் மக்கள் பயணம் செய்யும் ரயில் பாதை
ஹூப்பள்ளி ஸ்ரீ சித்தாரூட ஸ்வாமிஜி ரயில் நிலையம், கர்நாடகாவின் முக்கியமான ரயில் ஜங்க்ஷன்களில் ஒன்றாகும். வட கர்நாடகா பகுதியில் அமைந்துள்ள ஹூப்பள்ளி வர்த்தகத்தின் முக்கிய மையமாக உள்ளது. இந்த நிலையம் பெங்களூரு (தாவணகெரே பக்கம்), ஹோசப்பேட்டை (கடக் பக்கம்) மற்றும் வாஸ்கோ-ட-காமா/பெலகாவி (லோண்டா பக்கம்) ஆகிய ரயில் பாதைகளை இணைக்கும் சந்திப்பில் அமைந்துள்ளதால் அதிகப்படியான மக்கள் இந்த பாதையில் பயணம் செய்கின்றனர்.
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ஹுப்பள்ளி - பிரதமர் உரை
21 ஆம் நூற்றாண்டு இந்தியா தனது நகரங்களை நவீனமயமாக்குவதன் மூலம் முன்னேறி வருவதாகவும், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ஹுப்பள்ளி-தர்வாட் இணைக்கப்பட்டுள்ளதாகவும், இது இரு பகுதிகளையும் புதிய உயரத்திற்கு கொண்டு செல்லும் என்றும் பிரதமர் கூறினார். ஹோசப்பேட்டை - ஹூப்பள்ளி - தினைகாட் பகுதியின் மின்மயமாக்கலுக்கான மற்றொரு அடிக்கல்லை நாட்டிய அவர், இந்த முயற்சிகள் பிராந்தியத்தின் பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்கவும் அதே நேரத்தில் சுற்றுலாவை மேம்படுத்தவும் உதவும் என்று குறிப்பிட்டார்.

520 கோடி ரூபாய் செலவில் எதிர்காலத் திட்டம்
ஹோசப்பேட்டை - ஹூப்பள்ளி - தினைகாட் ரயில் பாதையை (245 RKM) மின்மயமாக்கலுக்காக சுமார் 520 கோடி ரூபாய் செலவிடப்படும் என்று அறிக்கைகள் தெரிவிக்கின்றன. சுகாதாரம், செயல்பாடு, பாதுகாப்பான பொது இடங்களை உருவாக்கி, நகரத்தை எதிர்கால நகர மையமாக மாற்றுவதன் மூலம் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதே இதன் குறிக்கோளாகும்.

ஆண்டுக்கு 2,50,000 கிலோ லிட்டர் டீசல் மிச்சம்
இந்த பாதை விஜயநகர், கொப்பல், கடக், தார்வாட், உத்தர கன்னடா மற்றும் பெலகாவி மாவட்டங்கள் வழியாக செல்கிறது. இது எஃகு ஆலை மற்றும் அனல் மின் நிலையத்தை மோர்முகாவ் துறைமுகத்துடன் இணைக்கும் கர்நாடகாவின் முக்கிய நிலக்கரி பாதையாகும். இரட்டைக் கோடு பாதையின் மின்மயமாக்கல் பாதையை கார்பன் நடுநிலையாக்கும், இது பூஜ்ஜிய மாசுபாட்டிற்கு வழிவகுக்கும். அது மட்டுமில்லாமல் ஆண்டுக்கு சுமார் 250 கோடி ரூபாயும் மேலும் ஆண்டுக்கு 2,50,000 கிலோ லிட்டர் டீசலும் மிச்சப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஹூப்பள்ளி ரயில் நிலைய மறுவடிமைப்பின் சிறப்பம்சங்கள்
1. ஒற்றைக் கோடுகளால் முன்பு சில சிக்கல்கள் இருந்தன, ஆனால் இப்போது புதிய கட்டுமானம் இந்த சிக்கல்களைத் தவிர்க்க உதவியது.
2. ஏற்கனவே 5 ரயில் நடைமேடைகள் இருந்தன, அதனுடன் 3 புதியவை சேர்க்கப்பட்டுள்ளன.
3. தற்போதுள்ள 8 தளங்களில், எட்டாவது தளம் உலகிலேயே மிக நீளமானது. இந்த தளம் எண். 8 கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தது.
4. 8 ஆவது பிளாட்ஃபார்ம் ஆனது 1507 மீட்டர் நீளம் கொண்ட உலகின் மிக நீளமான ரயில்வே பிளாட்பாரம் என்ற அங்கீகாரத்தைப் பெற்றது.



Click it and Unblock the Notifications





