ஜம்மு காஷ்மீர் மாநிலத்திலுள்ள உத்தம்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ள அழகிய மலை வாசஸ்தலம் தான் பாட்னிடாப் என்ற பாட்னி. இந்த இடத்தின் பூர்வீக உண்மை பெயரான 'பாட்டன் டா தலாப்'-ற்கு 'இளவரசிகளின் குளம்' (The Pond of the Princess) என்று பொருள். ஏனெனில் முந்தைய காலங்களில் இளவரசிகள் குளிக்கும் இடமாக இங்கிருக்கும் குளத்தை பயன்படுத்தி வந்திருக்கிறார்கள் என்பது வரலாறு.
இந்த மலைவாசஸ்தலம் கடல் மட்டதிலிருந்து 2024 மீ உயரத்தில் இருக்கும் பீடபூமியில் அமைந்திருக்கிறது. அடர்த்தியான தியோதர் மரங்கள் நிறைந்த கானகங்களுக்கு மத்தியில், மடிந்து செல்லும் மலைகளினூடாக, மூச்சை திணறடிக்கும் கண்கவர் காட்சிகள் மற்றும் சாந்தப்படுத்தும் அமைதி என அனைத்து அம்சங்களும் குடி கொண்டுள்ள அற்புத மலை வாழிடம் பாட்னிடாப்.
இங்கிருக்கும் மூன்று நீரூற்றுகளும் மிகவும் சுத்தமான மற்றும் குளிர்ச்சியான தண்ணீரை அளிக்கவல்லவை. எனவே தான், இந்த நீரூற்றுகள் மருத்துவ குணமிக்கவையாக கருதப்படுகின்றன.
குளிர்காலங்களில் இங்கு நடக்கும் வெளிப்புற விளையாட்டுகளான ஸ்கையிங் (பனிச்சறுக்கு) மற்றும் ட்ரெக்கிங் (மலையேற்றம்) போன்றவற்றை விளையாட தேனீக்கள் கூட்டத்தைப் போல சுற்றுலாப் பயணிகள் வந்து குவிவது வழக்கம்.
பாட்னிடாப் கோல்ப், பாராகிளைடிங், ஏரோ ஸ்போர்ட்ஸ், குதிரை சவாரிகள் மற்றும் புகைப்படம் எடுத்தல் போன்ற பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்களை உங்களுக்கு வழங்கும் அற்புத சுற்றுலா தலமாகும்.
இந்த பிரபலமான சுற்றுலா தலத்தில் நாக் என்ற நாகர் கோவில், புத்தா அமர்நாத் கோவில், பாஹு கோட்டை மற்றும் கோவில், சுத் மஹாதேவ், கௌரிகுந்த், குத் மற்றும் சிவா கார் ஆகிய புனித இடங்களும் அமைந்துள்ளன.
பாட்னிடாப்பில் விமான நிலையம் மற்றும் இரயில் நிலையம் போன்றவை இல்லாவிட்டாலும் சுற்றுலாப் பயணிகள் அருகிலுள்ள ஜம்முவை இந்த வசதிகளுக்காக பயன்படுத்திக் கொள்ளலாம்.
ஜம்மு விமான நிலையம் அல்லது இரயில் நிலையத்திற்கு வரும் சுற்றுலாப் பயணிகள் அங்கிருந்து பாட்னிடாப்பிற்கு இயக்கப்படும் அரசு பேருந்துகளைப் பயன்படுத்தி வந்து செல்ல முடியும்.
வருடம் முழுவதும் வரக்கூடிய பருவநிலை இங்கு நிலவி வந்தாலும் மே, ஜுன் மற்றும் செப்டம்பர், அக்டோபர் மாதங்கள் இங்கு வர மிகவும் ஏற்ற பருவங்களாகும். ஸ்கையிங் மற்றும் ட்ரெக்கிங் போன்ற சாகச விளையாட்டுகளை மேற்கொள்ள டிசம்பர் மற்றும் பிப்ரவரி மாதங்கள் மிகவும் ஏற்றவை.



Click it and Unblock the Notifications