உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள இந்த சிறு நகரமான ருத்ரபிரயாக் சிவபெருமான் ருத்ரா அவதாரத்தில் வீற்றிருக்கும் ஆன்மீக முக்கியத்துவம் வாய்ந்த நகரமாகும். ஹிந்து புராணிகங்கள் இந்த இடத்தில் நாரத முனிவர் சிவனின் ருத்ரா அவதாரத்தால் அருள்பாலிக்கப்பட்டதாக கூறுகின்றன. ருத்ரபிராயக் மாவட்டமானது சமோலி, பௌரி மற்றும் தேஹ்ரி என்ற மூன்று மாவட்டங்களின் அங்கமாக முன்னர் அமைந்திருந்தது. 1997ம் ஆண்டு செப்டம்பர் 16ம் நாள் இது தனி மாவட்ட அந்தஸ்தை பெற்றது. மந்தாகினி ஆறும் அலக்நந்தா ஆறும் கூடும் இடத்தில் இந்த நகரம் அமைந்திருக்கிறது.
ருத்ரபிரயாக் கோயிலுக்கு அருகிலேயே அமைந்திருக்கும் ஜகதம்பா கோயிலுக்கும் யாத்ரீகர்கள் விஜயம் செய்யலாம். அகஸ்தீஸ்வரர் கோயில் அமைந்துள்ள அகஸ்தியமுனி நகரமும் இந்நகரிற்கு அருகில் உள்ளது. புராணிக ஐதீகங்களின்படி இந்த இடத்தில் அகஸ்திய முனிவர் பல வருடங்கள் தவம் புரிந்ததாக சொல்லப்படுகிறது.
தேவ்ரியா தால் எனும் அழகிய ஏரி ருத்ரபிரயாக் ஸ்தலத்தின் சிறப்பங்கங்களில் ஒன்றாக அமைந்துள்ளது. கடல் மட்டத்திலிருந்து 2438 மீ உயரத்தில் அமைந்துள்ள இந்த ஏரியில் சௌகம்பா மலைத்தொடர்கள் மற்றும் கங்கோத்ரி, பத்ரிநாத், கேதார்நாத், யமுனோத்ரி மற்றும் நீலகண்ட மலைச்சிகரங்களின் பிம்பங்கள் சலனமற்று ஒளிர்வது கண் கொள்ளாக்காட்சியாகும்.
பறவை வேடிக்கை, படகுச்சவாரி மற்றும் தூண்டில் மீன் பிடிப்பு போன்றவை இப்பகுதியில் முக்கியமான சுற்றுலா பொழுதுபோக்கு அம்சங்களாக விளங்குகின்றன. ருத்ரபிரயாக் நகருக்கு அருகில் உள்ள திரியுகிநாராயன் எனும் சிறிய கிராமத்திற்கும் பயணிகள் விஜயம் செய்யலாம்.
இங்கு ஹவன் குண்ட் எனும் அணையா தீபம் எரிந்துகொண்டிருக்கிறது. புராணிக நம்பிக்கைகளின்படி இந்த இடம் ஹிம்வாத் தேசத்தின் தலைநகரமாக திகழ்ந்தாக சொல்லப்படுகிறது. இங்குள்ள ஹவன் குண்ட் முன்பாகத்தான் சிவனும் பார்வதியும் மணம் புரிந்து கொண்டதாக புராணங்கள் கூறுகின்றன.
குப்த்காஷி, உக்கிநாத், வாசுகி தால், ஜக்கோலி மற்றும் துங்கநாத் போன்ற இதர முக்கியமான யாத்திரை ஸ்தலங்களும் ருத்ரபிரயாக் நகருக்கு அருகிலேயே அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
இவை தவிர காளிமடம், கார்த்திக் ஸ்வாமி கோயில், இந்த்ரசானி மன்சா தேவி கோயில், சந்த்ரஷீலா, மா ஹரியாலி தேவி கோயில், கோட்டேஷ்வர் கோயில் மர்றும் மத்மஹேஷ்வர் கோயில் ஆகிய ஆலயங்களுக்கும் பயணிகள் விஜயம் செய்யலாம்.
ருத்ரபிரயாக் விமான மார்க்கம், ரயில் மார்க்கம் மற்றும் சாலை மார்க்கமாக நல்ல போக்குவரத்து இணைப்புகளை கொண்டுள்ளது. கோடைக்காலம் இப்பகுதிக்கு சுற்றுலா மேற்கொள்வதற்கு உகந்த பருவமாக இனிமையான சூழலுடன் காணப்படுகிறது.



Click it and Unblock the Notifications