கேரளாவின் வயநாடு மாவட்டத்தில் அமைந்திருக்கும் வரலாற்று சிறப்பு வாய்ந்த நகரமான சுல்தான் பத்தேரி, முந்தைய காலங்களில் கணபதிவடம் என்ற பெயரில் பிரபலமாக அறியப்பட்டு வந்தது. இந்த தொன்மையான நகரத்துக்கு ஒருமுறை மைசூரின் திப்பு சுல்தான் படையெடுத்து வந்தபோது ஜைன கோயிலில் தன்னுடைய பீரங்கி படையை நிறுத்தியிருந்தார். இதன் காரணமாகவே இந்த நகரம் அன்றிலிருந்து சுல்தான் பத்தேரி (பீரங்கி படை) என்ற பெயரில் அழைக்கப்பட்டு வருகிறது.
சுல்தான் பத்தேரி நகரம் அதன் சரித்திர சிறப்புகளை தாண்டி பிரம்மாண்ட மலைக்குன்றுகளால் சூழப்பட்டிருக்கும் பேரழகை நாட்பூராவும் ரசித்துக் கொண்டிருக்கலாம். அதோடு கேரளா-கர்நாடகா எல்லையில் அமைந்திருப்பதால் சுல்தான் பத்தேரி நகருக்கு இரு மாநிலங்களிலிருந்தும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் அடிக்கடி வந்து செல்கின்றனர். இதனால் விவாசயத்தை போலவே சுல்தான் பத்தேரி நகரத்தின் பொருளாதார முன்னேற்றத்தில் சுற்றுலாத் துறையின் பங்களிப்பும் முக்கியமானதாக கருத்தப்படுகிறது.
வயநாடு மாவட்டத்தின் முக்கிய நகரங்களில் ஒன்றான சுல்தான் பத்தேரி கலாச்சார மையமாகவும் திகழ்ந்து வருகிறது. அதிலும் குறிப்பாக திப்பு சுல்தானின் படையெடுப்புக்கு பின்னர் இந்த நகர மக்களின் வாழ்கை முறையும், கலாச்சாரமும் பல்வேறு மாறுதல்களை அடைந்து விட்டன.
மேலும் திப்பு சுல்தான் இந்த நகரத்தில் கோட்டை ஒன்ற கட்டியதாகவும் சொல்லப்படுகிறது. ஆனால் அதன் சிதைவுகள் ஏதும் சுல்தான் பத்தேரியில் இதுவரை கண்டறியப்படவில்லை.
சுல்தான் பத்தேரியில் உள்ள தோட்டங்களில் மிளகு, கிராம்பு, ஏலக்காய் போன்ற நறுமணப் பொருட்கள் அதிக அளவில் பயிரிடப்பட்டிருக்கின்றன. இதன் காரணமாக எப்போதும் நறுமணம் கமழும் நகரமாக சுல்தான் பத்தேரி திகழ்ந்து வருகிறது.
சுல்தான் பத்தேரி நகரம் கேரளா-கர்நாடகா மாநிலங்களின் எல்லையில் அமைந்திருக்கிறது. எனவே இந்த நகரை பெங்களூர், மைசூர், கோழிக்கோடு, கண்ணூர் உள்ளிட்ட கேரள-கர்நாடக நகரங்களிலிருந்து சாலை மூலமாக சுலபமாக அடைந்து விடலாம்.



Click it and Unblock the Notifications