கோயில் என்பது 'கோ' மற்றும் 'இல்' ஆகிய இரு சொற்கள் சேர்ந்து உருவானது. அதாவது 'கோ' என்றால் இறைவன் (அரசன் என்றும் பொருள்படும்), 'இல்' என்றால் இல்லம்.
எனவே இறைவன் வாழும் இல்லம் என்ற அர்த்தத்தில் கோயில் என்றானது. அதேபோல 'ஆன்மா லயப்படுகின்ற இடம்' என்ற பொருளில் ஆலயம் என்றும் அழைக்கப்படுகிறது.
அந்த வகையில் 1000 ஆண்டுகளுக்கும் மேலாக மக்களின் ஆன்மாவை லயப்படுத்தி கொண்டிருக்கும் கோயில்கள் தமிழகத்தில் நிறைய உள்ளன.
நெல்லையப்பர் ஆலயம், திருநெல்வேலி
திருநெல்வேலியிலுள்ள நெல்லையப்பர் ஆலயமானது, தமிழகத்திலேயே மிகப்பெரிய சிவாலயமாகும். இது பாண்டிய மன்னர்களால் கி.பி. 700 ஆம் ஆண்டில் கட்டப்பட்டது. சிவபெருமானுக்கும், பார்வதி தேவிக்கும் தனித்தனியே கட்டப்பட்ட இரண்டு கோயில்களை உள்ளடக்கிய பிரம்மாண்டமான கோயில் இது. இரண்டு கோயில்களும், 17-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட சங்கிலி மண்டபம் என்னும் மண்டபத்தால் இணைக்கப்பட்டுள்ளன. இக்கோவிலின் கோபுரங்களும் 17-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டவையாகும்.
படம்
தியாகராஜஸ்வாமி திருக்கோயில், திருவாரூர்
சோழ மன்னர்களால் கட்டப்பட்டு தமிழ்நாட்டின் மிகப் பழமையான கோயில்களுள் ஒன்றாக திகழ்ந்து வரும் தியாகராஜஸ்வாமி திருக்கோயில் 1-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது. இக்கோயிலின் மூலஸ்தானத்தை இரண்டாகப் பிரித்து, ஒரு பகுதியை "வன்மிகிநாதர்" என்ற பெயரில் வழங்கப்படும் சிவபெருமானுக்கும், மற்றொரு பகுதியை தியாகராஜருக்கும் அர்ப்பணித்துள்ளனர். வன்மிகிநாதருக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ள பகுதியானது, தியாகராஜருக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ள பகுதியைக் காட்டிலும் பழமை வாய்ந்ததாகும். வன்மிகிநாதரின் சந்நிதியில், வழக்கமான லிங்கத்துக்கு பதிலாக, ஒரு புற்று நிறுவப்பட்டுள்ளது.
படம் : Kasiarunachalam
கைலாசநாதர் கோயில், காஞ்சிபுரம்
காஞ்சிபுரம் கைலாசநாதர் கோயில் 8-ஆம் நூற்றாண்டில் பல்லவ மன்னன் இராஜசிம்மனால் கட்டத் தொடங்கப்பட்டதெனினும், அவனுடைய மகனான 3-ஆம் மகேந்திரவர்மனே கட்டிடப் பணிகளை முடித்ததாக வரலாறு கூறுகிறது. அதன் பின்னர் 14-ஆம் நூற்றாண்டில் விஜயநகர பேரரசின் காலத்தில் சில பகுதிகள் சேர்க்கப்பட்டுள்ளன.
படம் : Sai Subramanian
பிரகதீஸ்வரர் கோயில், தஞ்சாவூர்
தமிழ்நாட்டில் ஆயிரம் ஆண்டுகளுக்கு கட்டப்பட்ட கோயில்கள் எத்தனை இருந்தாலும் தஞ்சை பெரிய கோயிலுக்கு ஈடு இணை ஏதுமில்லை. வட நாடெங்கும் பயணித்து பல வெற்றிகளை சுமந்து வந்த ராஜராஜ சோழன் தான் வழியில் கண்ட பல்வேறு சிற்பக்கலை மரபுகளைச் சேர்ந்த கோயில்களின் தோற்றத்தில் கவரப்பட்டு அவற்றினும் சிறந்த ஒரு உன்னத கலைப்படைப்பை தனது ராஜ்ஜியத்தில் நிர்மாணிக்க விரும்பி மிகுந்த முனைப்புடன் இந்தக் கோயிலை உருவாக்கியிருக்க வேண்டும் என்பது சில வரலாற்று ஆசிரியர்களின் கருத்து. வார்த்தைகளில் விவரிக்க முடியாத நுண்ணிய வடிவமைப்பு, கற்பனா சக்தி, மேலாண்மை துல்லியம், பொறியியல் நுணுக்கங்கள், அப்பழுக்கற்ற ஒழுங்கு, துளியும் பிசகாத கணக்கீடுகள் போன்ற அறிவியல் பூர்வமான நுட்பங்கள் இந்த ஒட்டுமொத்த கோயிலின் உருவாக்கத்தில் நிரம்பியுள்ளன என்றால் அது மிகையில்லை.
ஸ்வேதாரண்யேஸ்வரர் கோயில், திருவெண்காடு
தமிழ்நாட்டிலுள்ள ஒன்பது நவக்கிரக ஸ்தலங்களுள், இது நான்காவது ஸ்தலமாகும். இந்தக் கோயில் 1000 முதல் 2000 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டதாக நம்பப்படுகிறது. இக்கோயிலில், நவக்கிரகங்களுள் ஒருவரும், பக்தர்களுக்கு அறிவும், செல்வமும் வழங்கக்கூடியவருமான புதன் பகவானுக்கு தனி சந்நிதி அமைத்து வணங்கி வருகின்றனர். இங்கு உள்ள சுவரோவியங்கள் சோழ சாம்ராஜ்யம் மற்றும் விஜயநகர மன்னர்களின் முக்கிய வரலாற்று தகவல்களை அறிந்துகொள்ளும் வண்ணம் தீட்டப்பட்டுள்ளன.
ஸ்ரீ கும்பேஸ்வரர் ஆலயம், கும்பகோணம்
கும்பகோணத்தில் அமைந்துள்ள ஸ்ரீ கும்பேஸ்வரர் ஆலயம் ஒரு சிவாலயமாகும். இக்கோவிலில் தான் ஆண்டுதோறும் மாசிமக விழாவும், 12 ஆண்டுகளுக்கொருமுறை மகாமகப் பெருவிழாவும் கொண்டாடப்படுகின்றன. இக்கோவில் 1300 ஆண்டுகள் பழமையானதென நம்பப்படுகிறது. இடைக்காலச் சோழர்கள் இந்நகரத்தை ஆண்டபொழுதிலிருந்து இக்கோவில் உள்ளது. இக்கோவிலில் சிவபெருமான் ஆதி கும்பேஸ்வரர் என்னும் பெயருடன் வழிபடப்படுகிறார்.
படம்
ஜம்புலிங்கேஸ்வர் கோயில், திருவானைக்காவல்
திருவானைக்காவலில் உள்ள ஜம்புலிங்கேஸ்வர் கோயில் ஆரம்ப கால சோழ மன்னர்களில் ஒருவரான கோச்செங்க சோழ மன்னரால் கட்டப்பட்டதாக நம்பப்படுகிறது. அதோடு சோழர்கள் காலத்தில் எழுதப்பட்ட சில கல்வெட்டுகள் கோவில் சுவர்களில் இன்றும் காணப்படுகின்றன. இக்கோவில் கட்டப்பட்டு 1,800 ஆண்டுகள் ஆனபோதிலும் பராமரிப்பு பணியினால் இன்றும் நல்ல நிலையில் காணப்படுகிறது. ஜம்புகேஸ்வர் கருவறை அடியில் ஒரு நிலத்தடி நீர் ஊற்று கண்டுபிடிக்கப்பட்டது. ஒவ்வொரு முறையும் மீண்டும் மீண்டும் இந்த ஊற்று நீர் ஆதாரத்தை காலி செய்ய முயன்றாலும் அது மறுபடியும் நிரம்பி விடுகிறது!
காமாட்சி அம்மன் கோயில், காஞ்சிபுரம்
காமாட்சி அம்மன் கோயிலின் மூலக் கடவுளான காமாட்சி அம்மன் நின்ற கோலத்திலில்லாமல் அமர்ந்த நிலையில் காட்சியளிப்பது இக்கோயிலின் தனிச்சிறப்பாகும். இங்கு அம்மன், யோக நிலையில் அமர்ந்த வண்ணம், அமைதியும் கருணையும் கொண்டு அருள் பாலிக்கிறார். இந்தக் கோயில் பல்லவ சாம்ராஜ்யத்தின் மன்னர்களால், 6-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டிருக்கலாம் என்று நம்பப்படுகிறது. பார்வதி தேவிக்கு இந்நகரில் கட்டப்பட்டுள்ள ஒரே கோயில் இதுவாகும். இக்கோயில் பல்லவ சாம்ராஜ்யத்தின் மன்னர்களால், 6-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டிருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
ஆண்டாள் கோயில், ஸ்ரீவில்லிப்புத்தூர்
ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோயில் 2000 ஆண்டுகள் பழமையானது. இதன் 11 அடுக்குகள் கொண்ட 193 அடி உயர ராஜகோபுரம் அந்த காலகட்டத்தில் இந்தியாவின் மிகப்பெரிய கோபுரமாக கருததப்பட்டது. இந்தக் கோயிலை பெருமைப்படுத்தும் விதமாக பெருந்தலைவர் காமராஜர் ஆட்சிக்காலத்தில் ஆண்டாள் கோயிலின் கோபுரம் தமிழக அரசின் சின்னமாக அறிவிக்கப்பட்டது.
வைகுந்தப் பெருமாள் கோயில், காஞ்சிபுரம்
வைகுந்தப் பெருமாள் கோயில் பல்லவ மன்னன் நந்திவர்மனால் 7-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாகும். இக்கோயிலில் உள்ள "ஆயிரங்கால் மண்டபத்தை" காண ஆயிரக்கணக்கான பக்தர்களும், பயணிகளும் வந்து செல்கின்றனர். இத்தூண்கள் ஒவ்வொன்றிலும் வேவ்வேறு சிலைகள் செதுக்கப்பட்டு, ஒவ்வொரு தூணும் தனிச்சிறப்புடன் திகழ்கிறது.
படம் : Nsmohan