எப்பொழுதும் இயந்திரம் போல சுழன்று கொண்டிருக்கும் பெங்களூரு நகரம் பார்ட்டிகள், ஹோட்டல்கள், ஷாப்பிங் மால்கள், பல்வேறு கலை நிகழ்ச்சிகள், பூங்காக்கள் என அங்கு வசிக்கும் மக்களுக்கு பொழுதுபோக்கை வாரி இரைக்கிறது. நகருக்குள் இயற்கை சார்ந்த இடங்களுக்கு கொஞ்சம் அலைய வேண்டி இருக்கிறது. ஆனால் பறவைகளைக் கண்டு மகிழ, படகு சவாரி செய்ய, குழந்தைகள் மற்றும் குடும்பத்தினருடன் ஒரு நாள் பிக்னிக் போக பெங்களூரு நகரத்திற்கு உள்ளேயே ஒரு இடம் இருக்கிறது - அது தான் மடிவாளா ஏரி! ஆம் மடிவாளா ஏரியை சுற்றியிருக்கும் அமைதியான சூழலில் நீங்கள் அமர்ந்து பறவைகளை ரசிக்கலாம், படகு சவாரி செய்யலாம். அதனைப் பற்றிய முழு விவரங்களும் இதோ!
ஏரிகளின் நகரம் பெங்களூரு
ஏரிகளின் நகரம் என்று பிரபலமாக அறியப்பட்ட பெங்களூருவின் பல நீர்நிலைகள் காலபோக்கில் மறைந்துவிட்டன. ஆனால் அவற்றில் விதி விலக்காக இருப்பது NH7 ஓசூர் சாலைக்கும் பன்னர்கட்டா பிரதான சாலைக்கும் இடையே அமைந்துள்ள மடிவாளா ஏரி. ஒரே நாளில் சோழர்களால் கட்டப்பட்ட, மடிவாளா ஏரி இன்றளவும் இயற்கை மாறா சூழலுடன் பெங்களூரு நகரில் ஒரு பிரபலமான பிக்னிக் ஸ்பாட் ஆக உள்ளது. இந்த ஏரி BTM ஏரி என்றும் அழைக்கப்படுகிறது.
சோழர்கள் எழுப்பிய ஏரி
500 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டதாக நம்பப்படும் இந்த ஏரி தென்னிந்தியாவையே மிக கம்பீரமாக ஆண்ட சோழர்களால் ஒரே இரவில் உருவாக்கப்பட்டதாம். கட்டிய நாட்களில் இருந்து இன்றளவும் இது மிக பிரபலமான ஏரியாக உள்ளது. பெங்களூருவின் மிக முக்கிய நீர்நிலைகளில் ஒன்றான மடிவாளா ஏரி அதன் இயற்கை சூழல் காரணமாக செழிப்பான பறவைகளின் தாயகமாக உள்ளது. இது இயற்கை ஆர்வலர்கள், பறவை விரும்பிகள் மற்றும் ஒரு நாள் பிக்னிக் செய்ய விரும்புபவர்கள் அனைவர்க்கும் இது ஒரு சரியான சாய்ஸ் ஆக இருக்கும்.
அரிய பறவைகளைக் காணலாம்
பல்வேறு வகையான புலம் பெயர்ந்த பறவைகளை நீங்கள் இங்கே கண்டு மகிழலாம். இந்த அழகிய ஏரிக்கு நடுவே ஒரு சிறு தீவு இருக்கிறது, அந்த இடம் தான் அனைத்து பறவைகளுக்கும் மிகவும் விருப்பமான இடமாகும். குளிர்காலத்தில் பல்வேறு வகையான புலம்பெயர்ந்த பறவைகள் இந்த தீவில் குவிகின்றன. ஸ்பாட்-பில்ட் பெலிகன்கள் ஏரியில் காணப்படும் மிகவும் பிரபலமான பறவைகள் ஆகும். எக்ரெட்ஸ், நீண்ட கால்கள் கொண்ட ஊதா சதுப்பு கோழி, மிதக்கும் பெலிகன், பிளாக் கைட், இந்திய ராபின், வெள்ளை மார்பக கிங்ஃபிஷர், சன் பர்ட்ஸ் ஆகிய பறவைகளையும் நீங்கள் இங்கே காணலாம்.
உற்சாகமான படகு சவாரி
ஏரியின் முக்கிய அம்சங்களில் ஒன்று படகு சவாரி செய்வது. படகில் மீது அமர்ந்து பரந்த ஏரியில் பயணம் செய்வது மறக்கமுடியாத அனுபவமாக இருக்கும். ஏரியின் படகு கிளப்பில் இருந்து படகுகளை வாடகைக்கு எடுக்கலாம். படகுகள் 30 நிமிடங்கள் மற்றும் 1 மணிநேரத்திற்கு வாடகைக்கு கிடைக்கும். நீங்களாகவே கூட படகோட்டி செல்லும் வசதியும் இங்கு உண்டு. நிச்சயம் இது ஒரு சிலிர்ப்பான அனுபவமாக இருக்கும் தானே பயணிகளே!
எப்படி அடைவது?
மடிவாலா ஏரியை நகரின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் எளிதில் அடையலாம். நீங்கள் பெங்களூருக்கு வந்தவுடன், ஏரியை அடைய வண்டிகள் அல்லது ஆட்டோக்கள் போன்ற உள்ளூர் போக்குவரத்தைப் பெறலாம். இது BTM லேஅவுட், 2வது கட்டம், 29 வது பிரதான சாலையில் அமைந்துள்ளது. ஏரிக்கு செல்லும்போது உங்கள் தொலைநோக்கியை எடுத்துச் செல்ல மறக்காதீர்கள்.
பறவைகளை உற்று பார்த்து மகிழ இது உதவியாக இருக்கும். அமைதியான ஏரியின் கரையில் நிதானமாக உலா வாருங்கள். குழந்தைகளுடன் சென்றால் நீங்கள் உணவு, தண்ணீர், தின்பண்டம் போன்றவற்றை எடுத்துக் கொண்டு ஒரு பிக்னிக் போல சென்று வரலாம்.