அம்மா, அக்கா, தங்கைகள், தம்பிகளுடன் ஒன்றாக கூடி அமர்ந்து போட்டி போட்டுக்கொண்டு கரும்பு கடித்து, முறுக்கு அதிரசம் சுட உதவி செய்து, தோட்டத்துக்குள் போய் காப்புக்கட்ட பூளைப்பூ பறிக்க சென்றது, அப்பாவுடன் கன்றுகளையும் மாடுகளையும் குளிப்பாட்டி, கொம்புகளுக்கு வர்ணம் பூசி, மூன்றாம் நாள் பூப்பறிக்க சென்ற காலமொன்று இருந்தது. பொங்கலுக்காக வருடம் முழுக்க ஏங்கித் தவித்த நாட்கள் அவை. இன்றோ நான்கு சுவர்களுக்குக்குள் கேஸ் அடுப்பில் பொங்கல் வைக்கும் சூழலை நகர வாழ்க்கை உருவாக்கிவிட்டது.
மீண்டும் நாம் இழந்த இனிமையான நாட்களை வாழ்த்து அனுபவிக்க மனம் ஏங்குகிறதா? வாருங்கள் பொங்கல் பண்டிகையை அன்று போல அதன் அழகு குறையாமல் கொண்டாடும் ஐந்து நகரங்களுக்கு சென்று இந்த பொங்கலை கொண்டாடிடுவோம் வாருங்கள். பொங்கலோ! பொங்கல்!
மதுரை:
Photo: Vinoth Chander
அன்றும், இன்றும் என்றும் மண் மனம் மாறாத ஊர் என்றால் அது மல்லிகை பூத்துக்குலுங்கும் மதுரை தான். பொங்கல் பண்டிகைக்கு பத்து நாட்களுக்கு முன்பே விழாக்கோலமாக காட்சி தருகிறது மதுரை நகரம். வீடுகள் எல்லாம் வெள்ளையடித்து, மக்கள் எல்லோரும் புத்தாடை உடுத்தி, கோயில்களில் விஷேச பூஜைகளில் கலந்து கொண்டு கோலாகலமாக பொங்கல் விழா கொண்டாடப்படுகிறது. பொங்கல் நாளின் போது அதிகாலையில் மதுரை நகரமே கரும்பு நெட்டி, வண்ண கோலமிட்டு, தன் வீட்டின் முன் பொங்கல் வைத்து வரும் வருடம் சீரும் சிறப்புமாக அமைய இறைவனை வழிபடுகிறது. ஜல்லிக்கட்டு நடக்கும் பட்சத்தில் மதுரையில் பொங்கல் விழா இன்னும் அமர்க்களமாக நடந்தேறும்.
தஞ்சை:
Photo: Flickr
தமிழ் நாட்டிற்க்கே படியளக்கும் ஊர், எங்கெங்கு காணினும் நிறைந்திருக்கும் பச்சைபசேல் வயல்கள் என நம் வயிர் நிறைத்து உள்ளம் குளிரச் செய்யும் இடம் தான் தஞ்சாவூர். தஞ்சாவூரை பொருத்தமட்டும் தீபாவளி அவ்வளவு சிறப்பாக கொண்டாடப்படுவதில்லை. என்னெனில் தீபாவளி காலம் தான் வயல்களில் விதைக்கும் காலம் என்பதால் நிறைய பணப்புழக்கம் இருக்காது. அதே பொங்கல் சமயத்தில் அறுவடை முடிந்து கையில் பணம் இருக்கும் என்பதால் தீபாவளி பண்டிகையைவிட பொங்கலை வெகு சிறப்பாக கொண்டாடும் வழக்கம் உண்டு. புது மண் பானையில் பொங்கல் வைத்து, தங்களை காட்டிலும் தங்கள் மாடுகளை அழகாய் அலங்கரித்து பாசமாய் பொங்கல் வைத்து கொண்டாடுகின்றனர் தஞ்சை மக்கள்.
பொள்ளாச்சி:
Photo: Sugan Raj Bharathi
மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் கோவை மாவட்டத்தில் அமைந்திருக்கும் பொள்ளாச்சி நகரமும் பொங்கல் பண்டிகையை கொண்டாட உற்சாகத்துடன் தயாராகிறது. பசுமையான வயல்கள், தென்னந்தோப்புகளுடன் வளமான பகுதியான பொள்ளாச்சியில் பொங்கல் பண்டிகை கொண்டாட்டங்களின் சிறப்பம்சமே இங்கு நடக்கும் ரேக்ளா பந்தயம் தான். காளைகளை சிறிய மாட்டு வண்டியில் பூட்டி சீரிப்பாய்வதை பார்க்க சிலிர்ப்பாக இருக்கும். நகரத்தின் இரைச்சலில் இருந்து தப்பித்து அமைதியாக பொங்கல் பண்டிகையை கொண்டாட விரும்புகிறவர்கள் நிச்சயம் பொள்ளாச்சிக்கு சென்று வரலாம்.
திருநெல்வேலி:
Photo: Kamala Lakshminarayanan
நெற்றி நிறைய திருநீர் பூசி, நெல்லையப்பரை வழிபாடு செய்து விட்டு தாமிரபரணி நதிக்கரையில் பொங்கல் வைத்து படித்துறையில் உற்றார் உறவினர்கள் எல்லோருடனும் ஒன்றாக அமர்ந்து பொங்கல் சாப்பிடுவது போன்ற அனுபவத்திற்கு இணை வேறெதுவுமே இல்லை. குற்றாலம், நெல்லையப்பர் கோயில் போன்ற சுற்றுலாத்தலங்களுக்கு குடும்பத்தினருடன் சென்று விட்டு பொங்கலை இனிக்க இன்பம் போங்க கொண்டாடி மகிழ்ந்திடுங்கள்.