உலகிலேயே மிகப்பெரிய துறையாக விளங்குவது சுற்றுலாத்துறை என்றால், நீங்கள் நம்பியாக வேண்டும். போக்குவரத்து, தொலைத்தொடர்பு, விருந்தோம்பல் போன்ற துறைகள், பழங்காலத்தில் விரிவு பெற்று இருக்கவில்லை என்பதாலேயே, அன்றிருந்தவர்களில் பெரும்பாலானோர் தாம் பிறந்த ஊரிலேயே தம் வாழ்வை வாழ்ந்தனர்.

ஆனால், இப்போது அப்படியான சூழல் இல்லை. ஒவ்வொரு நாளும் அனைத்து வகையிலும் தினமும் வளர்ச்சி கண்டு வருகிறோம். முந்தைய தலைமுறையை காட்டிலும், இன்றைய இளைய தலைமுறையில் ஒரு பகுதியினர், தேடி, தேடி சிறந்த பகுதிகளுக்குச் சென்று ஊர் சுற்றுவதையே வாடிக்கையாக வைத்துள்ளனர்.
அப்படியிருக்கும் நபர்களுக்கு மட்டுமில்லை, அனைவருக்குமானது இக்கட்டுரை. பருவ காலங்களை மனதில் நிறுத்தி, ஊர் சுற்ற நாம் கற்றுக்கொண்டாலேயே இயற்கையைும், புதிய விதமான இடத்தையும் அனுபவிக்கும் வாய்ப்பை விட்டு விட மாட்டோம் என்றே சொல்லலாம்.

அப்படி, இந்த ஐப்பசி, கார்த்திகை மாதங்களில் ஊர் சுற்ற ஏற்ற இடம் எது என்பதை பார்க்கலாம்? குளிர்காலம் நெருங்கத் தொடங்கிவிட்டது. அதுமட்டுமில்லை விடுமுறையும் நமக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அப்படியிருக்கும் போது, ஒரு ட்ரிப் அடிக்க இதை விட சிறந்த தருணம் கைக்கூடி வர வேண்டுமா? என்ன...
அப்படியிருக்கும் போது குளிர்காலத்தில், தென் இந்தியாவில் இந்த இடங்களை கண்டிப்பாக 'மிஸ்' பண்ண கூடாது. குடும்பத்துடன் அல்லது நண்பர்கள் அல்லது மனதுக்கும் நம் வாழ்வில் ஒன்றாக இருப்பவர் என கருதும் நபர்களுடன், இந்த இடங்கள் சென்று சுற்றுலாவை கொண்டாடி மகிழுங்கள்.
கூர்க்
இந்தியாவின் குட்டி ஸ்காட்லாந்து என்று செல்லமாக அழைப்படும் இடம்தான் கூர்க். கலாசாரத்துக்கு பெயர் போன அழகிய சுற்றுலா தலம். இது, காஃபி எஸ்டேட்டுகளுக்கு புகழ் பெற்றது.
இங்கு வாட்டர் ஃபால்ஸ் உள்ளிட்ட சாகச விளையாட்டுகளுக்கு பஞ்சமே இருக்காது. தாமரா கார்னிவல், மடிகேரி கோட்டை, அபே மற்றும் இருப்பு நீர்வீழ்ச்சி மற்றும் ஹொன்னமனா கெரே ஏரி போன்றவை கட்டாயம் சுற்றிப்பார்க்க வேண்டிய இடங்களாகும்.
வயநாடு
அடுத்து நீங்கள் குளிர்காலத்தில் தவிர்க்கக் கூடாத இடம் கேரளாவின் வயநாடு. திரும்பும் இடமெல்லாம் பச்சை பசேலென இயற்கை சூழ்ந்த காட்சிகள் கண்களுக்கு விருந்தாக இருக்கும். மலைகளின் அழகில் நீங்கள் மெய் மறந்து ரசிப்பீர்கள் உங்கள் இணையருடன். அதிலும் குளிர்காலத்தில் காண்பதற்கே, கண்கொள்ளா காட்சியாக இருக்கும்.
ஊட்டி
குளிர்ந்த காற்று, சில்லென்ற சாரலை ரசிக்க ஊட்டியை விட சிறந்த இடம் வேறென்ன இருக்க முடியும். ஊட்டியை குளிர்காலத்தில் தவிர்க்கவே கூடாத சிறந்த சுற்றுலா தலமாகும். தேயிலை தோட்டங்களை ரசித்தபடி, பல வகையான டீ வகைகளை சுவைக்கலாம். ஓய்வுகான சிறந்த இடங்களில் இது ஒன்றாகும்.

ஆலப்புழா
கேரளாவின் தனித்துவத்துக்கு ஆலப்புழாவும் ஒரு காரணம். தண்ணீர் சூழ்ந்த இயற்கையான நிலப்பரப்பு, கண்கவர் பீச் , படகு சவாரி என, இந்த இடத்துக்கு அழகு சேர்க்கும் இவற்றை காணத் தவறவே கூடாது.
உங்கள் துணையுடன் செல்ல குளிர்காலத்தில் சிறந்த இடமாகும். தரமான டின்னர் டேட்டிங் செய்ய, பட்ஜெட் செலவில் ஆலப்புழாவை விட சிறந்த இடம் இருக்க முடியாது.
கொடைக்கானல்
மலைகளின் அரசி என்று செல்லமாக அழைக்கப்படும் கொடைக்கானலை குளிர்காலத்தில் ரசிப்பதற்கு அவ்வளவு அழகாகவும், சிறந்த திட்டமாக இருக்கும். சில்லென சாரல் காற்றுடன் மலையில் அமர்ந்தபடி இயற்கையை ஒரு கப் சூடான காஃபியுடன் ரசிக்கலாம்.
மேகங்கள் தவழ்ந்து செல்லும் வழியில், உங்களின் பிரியருடன் கை கோர்த்தபடி நடந்து செல்லவும், நிசப்தத்தை உணரவும் தயாராக இருக்கிறீர்கள் என்றால், உடனே கிளம்புங்க...! டிக்கெட் புக் பண்ண...

ஹலோ டிக்கெட் எல்லாம் நாங்க புக் பண்ண மாட்டோம். காரில் போவோம் என, என்னிடம் கலாய்க்க தயாராகுவது தெரியுது. எதில் போனா என்னங்க. என்ஜாய் பண்ணுவதற்கு. ஊர் சுற்று முடிவு பண்ணினா, அதில் பிரதானமாக இருக்க வேண்டியது பாதுகாப்பு. ஊர் சுற்ற இந்த ஐந்து இடங்களுக்கு போக மறக்க வேண்டாம் என்பதை கூறும் நாங்கள், பாதுகாப்பு சுற்றுங்கள் என்பதையும் உங்களுக்கு நினைவூட்டு விரும்புகிறோம்.



Click it and Unblock the Notifications






