Search
  • Follow NativePlanet
Share
» »ஹரிஷ்சந்திரகட் - வரலாற்று கோட்டைக்கு சிலிர்ப்பூட்டும் மலையேற்றம்!

ஹரிஷ்சந்திரகட் - வரலாற்று கோட்டைக்கு சிலிர்ப்பூட்டும் மலையேற்றம்!

By Staff

மகாராஷ்டிராவின் மால்ஷேஜ் காட் ஸ்தலத்தின் முக்கியமான வரலாற்று சின்னமான ஹரிஷ்சந்திரகட் கோட்டை 6-ஆம் நூற்றாண்டில் கலாசூரி பேரசசால் கட்டப்பட்டது.

1424 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள இந்த கோட்டை சாகசப்பயணிகள் விரும்பும் மலையேற்றத்துக்கான ஒரு அற்புதமான வாய்ப்பை தருகிறது.

இந்த அற்புதமான கோட்டையை நோக்கி மேலே ஏறும் பயணமானது சாகச 'த்ரில்' விரும்பிகளுக்கும் இயற்கை ஆர்வலர்களுக்கு மிகவும் பிடித்தமாக இருக்கும்.

இதன் அருகிலுள்ள ஹரிஷ்சந்திரகட் சிகரத்தை பயணிகள் தவறவிட்டுவிடக் கூடாது. இச்சிகரப்பகுதியிலிருந்து ஒரு நாணயத்தை நீங்கள் கீழ் நோக்கி வீசி எறிந்தால் அது புவியீர்ப்பு சக்தியை மீறி மேல் நோக்கி தள்ளப்பட்டு மிதந்து செல்லும் அதிசயத்தை பார்க்கலாம்.

இங்குள்ள புவியியல் அம்சங்களே இப்படி ஒரு அற்புதத்தை நிகழ்த்துகின்றன. அதாவது அரை வட்டப்பாறை அமைப்பும் கீழ் உள்ள பள்ளத்தாக்கில் நிலவும் அதிகபட்ச காற்றழுத்தச்சூழலும் இதற்கு காரணமாக சொல்லப்படுகிறது.

வரலாறு

வரலாறு

ஹரிஷ்சந்திரகட் கோட்டை கலாச்சூரி பேரரசின் காலத்தில் 6-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டுள்ளதாக நம்பப்படுகிறது. இதற்கு ஆதராமாக கோட்டையில் இடைக்கற்கால மனிதர்களின் எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அதோடு மத்ஸ்யபுராணம், அக்னிபுராணம், ஸ்கந்தபுராணம் ஆகிய புராணங்களில் ஹரிஷ்சந்திரகட் கோட்டை பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன. இங்கு 11-ஆம் நூற்றாண்டு காலத்தில் நிறைய குகைகள் குடைந்து உருவாக்கப்பட்டுள்ளன. இந்த குகைகளில் விஷ்ணு பகவானின் விக்ரகங்கள் வைக்கப்பட்டுள்ளன.

படம் : Bajirao

கலாச்சார பிரதிபலிப்பு

கலாச்சார பிரதிபலிப்பு

ஹரிஷ்சந்திரகட் கோட்டையைச் சுற்றி காணப்படும் கட்டிடங்கள் பல்வேறுபட்ட கலாச்சாரங்களை பிரதிபலிப்பதாக உள்ளன. கீரேஷ்வர் கிராமத்தில் உள்ள நகேஷ்வர் கோயில், ஹரிஷ்சந்திரேஷ்வர் கோயில் மற்றும் கேதாரேஷ்வர் குகை ஆகியவற்றில் காணப்படும் சிற்ப வேலைப்பாடுகள் இடைக்காலத்தை சேர்ந்தவை என்பதோடு சைவ மற்றும் ஷக்தா மார்க்கங்களோடு தொடர்புடையவை. இதன் பின்னர் முகாலயர்களின் கட்டுப்பாட்டிற்கு வந்த இந்தக் கோட்டை 1747-ஆம் ஆண்டு மராட்டியர்களால் கைப்பற்றப்பட்டது.


படம் : Bajirao

கேதாரேஷ்வர் குகை

கேதாரேஷ்வர் குகை

ஹரிஷ்சந்திரேஷ்வர் கோயிலுக்கு வலது புறமாக சென்றால் கேதாரேஷ்வர் குகை என்ற மிகப்பெரிய குகையை அடையலாம். இங்கு முழுவதுமாக நீரால் சூழப்பட்ட பெரிய சிவலங்கம் ஒன்று அமைந்திருக்கிறது. 5 அடி உயரமுள்ள இந்த லிங்கத்தை சுற்றி இடுப்பளவு நீர் சூழ்ந்துள்ளது. அதோடு இந்த நீர் மிகவும் குளிர்ச்சியாக இருப்பதால் இதை கடந்து லிங்கத்தை அடைவது சற்று கடினமானது. அதுமட்டுமல்லாமல் மிகப்பெரிய நீர் பிரவாகமே இங்கு ஓடும் என்பதால் மழைக்காலத்தில் இந்தக் குகையை அடைவது முடியாத காரியம். மேலும் சிவலிங்கத்தை சுற்றி நான்கு தூண்கள் அமையப்பெற்றுள்ளன. இந்தத் தூண்கள் சத்ய யுகம், த்ரேத யுகம், த்வாபர யுகம், கலியுகம் ஆகிய நான்கு யுகங்களை குறிப்பதாக சொல்லப்படுகிறது. ஒவ்வொரு யுகம் முடிவடையும் போதும் ஒவ்வொரு தூணாக இடிந்து விழும். அதன்படி தற்போது 3 தூண்கள் இடிந்துவிட்ட நிலையில் கலியுகத்தின் முடிவில் நான்காவது தூணும் இடிந்துவிடும் என்று நம்பப்படுகிறது. அந்த நாளில் இந்த உலகமும் அழிந்துவிடும் என்று ஒரு நம்பிக்கை நிலவுகிறது.


படம் : rohit gowaikar

தாராமதி சிகரம்

தாராமதி சிகரம்

ஹரிஷ்சந்திரகட் கோட்டையின் உயரமான பகுதியாக 1429 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள தாராமதி சிகரம் அறியப்படுகிறது. இந்தச் சிகரத்திலிருந்து அழகிய நானேகாட் மலைப்பகுதியையும், முர்பாத் அருகே உள்ள கோட்டைகளையும் பரிபூரணமாக கண்டு ரசிக்கலாம். அதுமட்டுமல்லாமல் தெற்கில் பீமாஷங்கர் அருகேயுள்ள சித்தாகட் வரையும், வடக்கில் கசரா பகுதியிலுள்ள உயரமான சிகரங்களான நாப்தா இரட்டைச் சிகரங்கள், கோடிஷெப் (865 மீட்டர்), அஜோபா (1375 மீட்டர்), குலாங் கோட்டை (1471 மீட்டர்) சிகரங்களையும் பார்த்து ரசிக்க முடியும்.

படம் : Ssriram mt

ஹரிஷ்சந்திரேஷ்வர் கோயில்

ஹரிஷ்சந்திரேஷ்வர் கோயில்

பழங்கால இந்தியாவின் சிற்ப வேலைப்பாடுகளுக்கு ஹரிஷ்சந்திரேஷ்வர் கோயில் மிகச் சிறந்த எடுத்துக்காட்டு. இக்கோயிலின் உச்சி பல வடஇந்திய கோயில்களை போலவே காணப்படுவதுடன், புத்த கயா கோயிலை ஒத்த உருவ அமைப்பை ஹரிஷ்சந்திரேஷ்வர் கோயில் கொண்டுள்ளது. அதோடு ஒரே ஒரு பாறையை குடைந்து இந்தக் கோயில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தக் கோயிலைச் சுற்றி நிறைய கல்லறைகளும், 3 குகைகளும், தொன்மையான குளங்களும் காணப்படுகின்றன. இதில் ஒரு குளத்திலிருந்து மங்கள் கங்கா என்ற நதி உற்பத்தியாகிறது. மேலும் காசிதீர்த்தா என்ற மற்றொரு கோயில் ஹரிஷ்சந்திரேஷ்வர் கோயிலிலிருந்து சற்று தூரத்தில் அமைந்துள்ளது.

படம் : rohit gowaikar

சப்ததீர்த்த புஷ்கர்ணி

சப்ததீர்த்த புஷ்கர்ணி

சப்ததீர்த்த புஷ்கர்ணி என்பது அற்புதமாக வெட்டப்பட்டு உருவாகப்பட்டுள்ள குளத்தை குறிக்கிறது. இந்தக் குளத்தின் நீர் 7 ஆண்டுகளுக்கு முன்னால் பருகத்தக்க வகையில் இருந்தது. அனால் தற்போது இது பிளாஸ்டிக் கழிவுகளாலும், மற்ற குப்பைகளாலும் மாசடைந்து போய்விட்டதால் குளிப்பதற்கு கூட ஏற்றதாக இல்லை. எனினும் கோடை காலத்திலும் குளிர்ச்சியாக காணப்படும் இதன் நீரின் காரணமாக குளத்துக்கு அருகில் நிற்கும்போது குளிர் சாதன இருப்பதை போன்ற உணர்வை தரும். மேலும் இந்தக் குளக்கரையில் காணப்படும் கோயில் போன்ற அமைப்பில் முன்பு விஷ்ணு சிலைகள் சில இருந்தன. அவை சமீபமாக ஹரிஷ்சந்திரேஷ்வர் கோயிலுக்கு அருகேயுள்ள குகைகளில் மாற்றப்பட்டுள்ளன.

படம் : Bajirao

கொங்கன் கடா

கொங்கன் கடா

ஹரிஷ்சந்திரகட் கோட்டையின் சுவாரசியமான பகுதியாக கொங்கன் கடா என்ற செங்குத்துப்பாறை திகழ்கிறது. இந்த செங்குத்துப்பாறை நாகப்பாம்பு படமெடுத்தாடுவது போலவும் தோற்றமளிப்பதுடன் இதன் உச்சியில் இருந்து சுற்றுப்புறங்களை ரசிப்பதும், சூரிய அஸ்த்தமனத்தை கண்டுகளிப்பதும் சிறந்த அனுபவமாக இருக்கும். இங்கு பள்ளத்தாக்கில் மூடுபனி இருக்கும் சமயத்தில் வானவில்லை கண்டு ரசிக்க முடியும். அதுமட்டுமல்லாமல் பள்ளத்தாக்குகளில் மேகம் உறிஞ்சப்பட்டு 50 அடி உயரத்திற்கு அவை வெடித்துச்சிதறும் அற்புத காட்சி உங்களை கிறங்கடித்துவிடும்.

படம் : Cj.samson

ஹரிஷ்சந்திரகட் கோட்டையின் குகைகள்

ஹரிஷ்சந்திரகட் கோட்டையின் குகைகள்

ஹரிஷ்சந்திரகட் கோட்டையை சுற்றி இந்தக் குகைகள் அமைந்திருக்கின்றன. இவற்றில் பெரும்பாலானவை தாராமதி சிகரத்தின் அடியிலும், ஒரு சில குகைகள் கோட்டையை விட்டு சற்று விலகி காடுகளிலும் அமையப்பெற்றுள்ளன. இவைத்தவிர 30 அடி ஆழம் கொண்ட இயற்கை குகை ஒன்று கோட்டைக்கு வடமேற்கு திசையில் கொங்கன் கடா என்ற செங்குத்துப்பாறைக்கு வலப்பக்கத்தில் இருக்கிறது. அதேநேரத்தில் பல குகைகள் இன்னும் கண்டுபிடிக்கப்படாமலே உள்ளன.

படம் : Bajirao

எப்படி அடைவது?

எப்படி அடைவது?

ஹரிஷ்சந்திரகட் கோட்டை மகாராஷ்டிராவின் தானே மற்றும் புனே நகரங்களின் எல்லையில் அமைந்திருக்கிறது.

1) தானேவிலிருந்து : தானே மாவட்டத்தில் உள்ள கல்யான் நகரிலிருந்து நாகருக்கு பேருந்து மூலம் செல்லவேண்டும். அதன் பிறகு கூபி பத்தாவில் இறங்கி அங்கிருந்து கீரேஷ்வர் கிராமத்தை பேருந்து அல்லது வாடகை கார்கள் மூலம் அடையலாம். அப்படி கீரேஷ்வர் கிராமத்தை அடைந்த பிறகு டிரெக்கிங் மூலம் ஹரிஷ்சந்திரகட் கோட்டையை சென்றடைய முடியும்.

2) புனேவிலிருந்து : புனேவின் சிவாஜிநகர் பேருந்து நிலையத்திலிருந்து தினமும் கீரேஷ்வர் கிராமத்துக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

படம் : Ssriram mt

More News

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+