திருச்சி மற்றும் அதனை சுற்றிலும் கோவில்கள், அணை, காவிரி ஆறு இதை தவிர பார்ப்பதற்கு வேறு என்ன இருக்கிறது? அதுவும் குழந்தைகளுடன் சென்று ஜாலியாக என்ஜாய் செய்து விட்டு வர இடங்கள் எதுவுமே இல்லையா என கேட்பவரா நீங்கள் ? உங்களை போன்றவர்களை குதூகலிக்க வைப்பதற்காகவே திருச்சியில் புதிதாக பறவைகள் பூங்கா துவங்கப்பட்டுள்ளது. இந்த பறவைகள் பூங்காவில் என்னென்ன அம்சங்கள் உள்ளன என்று இங்கே தெரிந்து கொள்ளலாம்.

கோயில் நகரமான திருச்சியில் குடமுருட்டி படித்துறையின் அருகே ரூ.20 கோடி செலவில் 60 ஆயிரம் சதுர அடியில் ஒரு பிரம்மாண்ட பறவைகள் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. இந்த பூங்காவை தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் சமீபத்தில் திறந்து வைத்தார். இந்தப் பூங்கா பொதுமக்கள் பார்வைக்காக திறக்கப்பட்டு பொதுமக்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்தப் பூங்காவின் நுழைவு வாயிலில் அமைக்கப்பட்டுள்ள நீரூற்று, போட்டோக்கள் மற்றும் செல்ஃபிகள் எடுக்க சிறந்த இடமாக. அதிநவீனத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தப் பறவைகள் பூங்காவில் பல்வேறு விதமான பறவைகள்,அதிக அளவிலான புறாக்கள், கோழி வகைகள் மற்றும் வாத்துக்கள் ஆகியவை உள்ளன. இங்கு முயல்களும் அதிக அளவில் வளர்க்கப்பட்டு, பராமரிக்கப்பட்டு வருகிறது.

இங்கு 50க்கும் மேற்பட்ட மீன் வகைகளுடன் கூடிய மீன்கள் அருங்காட்சியமும் அமைக்கப்பட்டுள்ளது. முற்றிலும் குளிரூட்டப்பட்ட இந்த மீன் அருங்காட்சியகத்தில் சிறிய மீன்கள் முதல் ஐந்து கிலோ எடையுடைய பெரிய மீன்கள் வரை நீந்தி திரிவது கடலின் அடியில் சென்று பார்ப்பதை போன்று ரியலாக காட்சியளிக்கிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ரசிக்கும்படியாகவும் உள்ளது.
அடுத்ததாக பறவைகள் அடைக்கப்பட்ட 3 அடி கூண்டுக்குள் மக்கள் சென்று பார்வையிட்டு அங்குள்ள பறவைகளுக்கு உணவாக சூரியகாந்தி விதைகளை கொடுப்பதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இங்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட பலவகையான வண்ண வண்ண பறவைகள் பறந்து வந்து பார்வையிட செல்வோரின் தோள்களிலும் கைகளிலும் அமர்ந்து விளையாடுவது,பார்வையாளர்களுக்கு ஒரு த்ரிலிங்கான அனுபவத்தை தருவதாக உள்ளது. அங்குள்ள பறவைகள் பார்வையாளர்கள் தரும் சூரியகாந்தி விதைகளை கொத்தி சாப்பிடுவது மிகவும் ஆனந்தமாகவும், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மிகவும் ரசிக்கும் படியாக உள்ளது.
மேலும், இங்கு குழந்தைகள் விளையாடி மகிழ பல விளையாட்டு சாதனங்களும் உள்ளன. பெரியவர்களுக்கு நாற்காலி மசாஜ், மீன் மசாஜ் போன்றவைகளும் உள்ளன. மீன்கள் விடப்பட்ட தண்ணீர் தொட்டியில் கால்களை வைத்து மீன்கள் காலை கடிக்கும் பொழுது மசாஜ் செய்வது போன்று இருக்கும்.
இங்கு 7 அடி திரையரங்கமும் அமைக்கப்பட்டுள்ளது.2 அனிமேஷன் திரைப்படங்கள் காட்சிப்படுத்தப்படுகின்றன. 40 பேர் ஒரே நேரத்தில் அமரக்கூடிய இந்த அரங்கத்தில் 120 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இந்த அனிமேஷன் திரைப்படங்களை அதற்கு உண்டான சிறப்பு கண்ணாடிகளை அணிந்து கொண்டு பார்ப்பது குழந்தைகள் ரசிக்கும்படியாகவும் வித்தியாசமான உணர்வையும் தருகிறது. இங்கு கேன்டீன் வசதியும் செய்யப்பட்டுள்ளது. இதில் குழந்தைகளுக்கு பிடித்தமான நொறுக்கு தீனிகள் முதல் குளிர்பானங்கள், பழ ரசங்கள் போன்றவைகளும் உள்ளன.
பூங்கா கட்டணம்:
பூங்காவில் நுழைவு கட்டணமாக பெரியவர்களுக்கு 200 ரூபாயும், சிறியவர்களுக்கு 150 ரூபாயும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 90 சென்டிமீட்டர் உயரத்திற்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கு அனுமதி இலவசம். இந்த பறவைகள் பூங்கா முழுக்க வெளிநாட்டு பறவைகள், கோழிகள், புறாக்கள் வாத்துக்கள் மட்டுமே உள்ளன. உள்ளூர் பாரம்பரிய பறவைகளான கிளிகள் குயில்கள், பாம்புகள் போன்றவை இல்லை.
செயல்படும் நேரம்:
காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே பூங்கா செயல்படும் நேரமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பறவைகளின் எண்ணிக்கை குறிப்பிட்ட அளவை தாண்டினால் பொதுமக்களுக்கு விற்பனை செய்வதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பொதுமக்களும் இப்பூங்காவிற்கு பறவைகளை வழங்கலாம். இங்கு வரும் பறவைகள் முறையாக கண்காணிக்கப்பட்டு, பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்ட பிறகே பூங்காவிற்குள் அந்த பறவைகள் இடப்படுகின்றன.
பொழுதுபோக்கு அம்சங்கள் குறைவாக உள்ள திருச்சி மாநகர் போன்ற பெரிய நகரங்களில் இது போன்ற பறவைகள் பூங்காக்கள் பொழுது போக்கிற்கும் விடுமுறை நாட்களில் குழந்தைகளுடன் ஜாலியாக என்ஜாய் செய்ததற்கும் ஒரு சிறந்த இடமாகும்.



Click it and Unblock the Notifications






