வாரத்தின் பெருன்மான்மையான நாட்கள், திங்களன்று தொடங்கும் வாழ்க்கைக்கான ஓட்டம் வெள்ளி அன்று மாலை பெரும் மூச்சுடன் ஓய்கிறது. அடுத்து வரும் இரு விடுமுறை நாட்களுமே ஓய்வில் செலவழிப்பது நம் வழக்கம். அல்லது, கிடைப்பதே இரு நாள் லீவு, இதில் வெளியில் சென்றால் முழு நேரத்தையும் சாலையிலேயே, வாகன நெரிசல்களுடன், புழுதிக் காற்றுடன் கழிக்க வேண்டுமே என்ற அச்சம், வீட்டிலேயே முடக்கி விடுகிறது. இதில், இந்தியாவில் பரபரப்பான தொழில்நிறுவனங்களைக் கொண்ட மும்மையின் நிலமையை சொல்லவா வேண்டும். வாரம் முழுக்க ஓடிஓய்ந்து மனதிற்கு ஆறுதலான, சோர்வை நீக்கும் சுற்றுலாத் தலங்களைத் தேடிக் கொண்டிருப்பவர்கள் வார இறுதி நாட்களில் இந்த மலைத் தொடர்களுக்கெல்லாம் தராளமாக சென்று வரலாம்.
கர்ஜத்
மும்பை நகரத்திலிருந்து 67 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது கர்ஜத் மலைப்பிரதேசம். நகரச்சந்தடியிலிருந்து விலகி சாகசப்பொழுதுபோக்கு மற்றும் சிற்றுலாவில் ஈடுபட விரும்பும் மக்களுக்கு உகந்த இடமாக உள்ளது. கர்ஜத் சுற்றுலாத்தலம் மஹாராஷ்டிரா மாநிலத்தின் அங்கீகரிக்கப்படாத சாகச விளையாட்டுத் தலைநகராகவும் விளங்குகிறது. ரம்மியமான இந்த மலைப் பிரதேசம் பல சாகசப் பொழுதுபோக்கு அம்சங்களை தன்னுள் கொண்டுள்ளது. குறிப்பாக, கர்ஜத் நகரம் மலையேற்றத்துக்கு பிரசித்தமாக அறியப்பட்டுள்ளது. அனுபவம் இல்லாதவர்களுக்கு ஏற்ற பல சுலபமான மலையேற்றப்பாதைகளும், அனுபவசாலிகளுக்கு ஏற்ற கடினப்பாதைகளும் இங்கு ஏராளம் அமைந்துள்ளன. இதடன இணையாக கம்பீரமான சஹயாத்திரி மலைகள், மேற்குத்தொடர்ச்சி மலை மற்றும் போர்காட் மலைகள் காணப்படுகிறது. உல்லாஸ் ஆற்றங்கரையிலுள்ள இந்த கர்ஜத் ரம்மியமான இயற்கை எழிலுடன் கூடிய வளமான தாவரச்செழிப்பு மற்றும் மலைப்பாறைகளுடன் கூடிய நீர்வீழ்ச்சிகளையும் கொண்டிருக்கிறது.
Ramnath Bhat
மாத்தேரான்
இந்தியாவில் உள்ள பிற மலைத் தொடர்களைப் போலவே இந்த மாத்தேரான் மலைவாசத் தலமும் பல மலைக்காட்சிக் கொண்டுள்ளது. இந்த மலைக்காட்சி தளங்களிலிருந்து மயக்க வைக்கும் பள்ளத்தாக்கு காட்சிகளை பயணிகள் கண்டு ரசிக்க முடியும். இங்குள்ள 38 மலைக் காட்சி முனைகளில் பனோரமா பாயிண்ட் எனும் தளம் 360 டிகிரி கோணத்தில் நாலா புறமும் பார்த்து ரசிக்கக்கூடிய விதத்தில் அமைந்துள்ளது. இங்கிருந்து சூரிய உதயம் மற்றும் சூரிய அஸ்தமனம் போன்ற காட்சிகளைக்காணும் அனுபவத்தை வார்த்தைகளால் விவரிக்கவே முடியாது. அந்த அளவுக்கு பரவச சிலிர்ப்பை அக்காட்சிகள் அளிக்கின்றன. மேலும், இங்குள்ள ஹார்ட் பாயிண்ட் எனும் காட்சி தளத்திலிருந்து மும்பை நகரின் பல வண்ண விளக்குகளின் ஜொலிப்பை இரவில் பார்க்க முடிகிறது. பிரபால் கோட்டை எனப்படும் புராதன வரலாற்று கோட்டையை லூயிசா பாயிண்ட் எனும் இடத்திலிருந்து அருமையாக பார்க்கலாம். இதுவும் ஒரு முக்கியமான மலைக்காட்சி தலமாகும். மும்பை, புனே போன்ற பரபரப்பான சந்தடி நிறைந்த பெரு நகரங்களுக்கு வெகு அருகில் அமைந்துள்ளதால் வார இறுதி விடுமுறை நாட்களுக்கான சிற்றுலாத்தலமாக இது புகழ்பெற்றுள்ளது.
Udaykumar PR
லோனாவலா
சஹயாத்ரி மலையின் கிரீடம் என்று அழைக்கப்படும் இந்த லோனாவலா, மலையேற்றம், நடைபயணம் போன்றவற்றுக்கு உகந்த இடமாக பிரசித்தி பெற்றுள்ளது. இதைத் தவிர வரலாற்றுப் பின்னணி கொண்ட கோட்டைகள், புராதனக் குகைகள் மற்றும் அமைதியான ஏரிகள் போன்றவை இந்த தலத்தைச்சுற்றிலும் நிறைந்துள்ளன. இங்கு பருவநிலை மிகவும் இனிமையானதாக வருடம் முழுவதுமே பயணிகளை வரவேற்கும் இயல்புடன் விளங்குகிறது. ஒரு புறம் பார்த்தால் தக்காண பீடபூமியும் மறுபுறம் பார்த்தால் அழகிய கொங்கண கடற்கரையும சூழ்ந்திருக்க, ஒரு வண்ண ஓவியம் போல் நம் கண் முன் விரியும் இந்த அற்புத தலத்தை மழைக்காலத்தில் தரிசிக்கும் அனுபவத்திற்கு ஈடு இணை எதுவுமே இல்லை. ஒரு அமைதியான மாலை நேரத்தை நீங்கள் அனுபவிக்க விரும்பினால் லோனாவலா பகுதியிலுள்ள முக்கியமான ஏரிகளும், அணைகளுமான பாவ்னா ஏரி, வலவண் ஏரி, துங்கர்லி அணை மற்றும் துங்கர்லி ஏரி போன்ற இடங்களுக்கு வருகை தரலாம்.
Arjun Singh Kulkarni
இகத்புரி
இகத்புரி புராதனமான தொன்மையான ஆலயங்களுக்கு புகழ் பெற்றுள்ளது. கண்டதேவி கோவில் இங்குள்ள அதிமுக்கியமான கோவிலாகும். மலைகளுக்கெல்லாம் காவல் தெய்வம் என்று அழைக்கப்படும் கண்டதேவி கோவிலில் இருந்து பார்த்தால் அழகிய சமவெளிகளின் பிரமிக்க வைக்கும் காட்சி நம் கண் முன் விரிகிறது. அருகிலுள்ள சஹயாத்ரி மலைத்தொடரில் காணப்படும் பல சிகரங்களின் அழகையும் தரிசிக்க முடிகிறது. மேலும் இங்குள்ள விபாசனா ஆன்மீக மையம் மற்றுமொரு குறிப்பிடத்தக்க அம்சமாக விளங்குகிறது. தியானம் பற்றிய ஒரு சிறப்பு வகுப்பு மற்றும் பயிற்சியை இங்கு வருகை தரும் பார்வையாளர்களுக்கு இந்த மையம் வழங்குகிறது. வரலாறு மற்றும் கட்டிடக்கலை போன்றவற்றில் உங்களுக்கு ஆர்வமிருப்பின் இங்குள்ள திரிங்கல்வாடி கோட்டை நீங்கள் கட்டாயம் பார்த்து மகிழ வேண்டிய வரலாற்று சின்னமாகும். சாகச அபாயங்கள் ஏதுமற்ற பொதுவான பொழுது போக்குகளை விரும்பும் பயணிகளுக்கு நடைபாதை பயணம் மற்றும் வெவ்வேறு இயற்கை எழில் அம்சங்களை ரசிக்கும் ரசனையான அனுபவங்களும் சாகச விரும்பிகளுக்கு மலை ஏற்றம், பரிசல் சவாரி போன்ற துணிகர அனுபவங்களும் இகத்புரியில் காத்திருக்கின்றன.
Jsdevgan
மால்ஷேஜ் காட்
மயக்க வைக்கும் மலைக் காட்சிகளுடன் அமைந்துள்ள இந்த மால்ஷேஜ் காட் மலைப்பிரதேசம் ஆரோக்கியமான இனிமையான பருவநிலையை கொண்டுள்ளது. இந்த சுற்றுலாத் தலத்தில் எண்ணற்ற ஏரிகளும், பாறைகளுடன் காட்சியளிக்கும் மலைகளும் ஏராளமாக நிரம்பியுள்ளன. இயற்கை ரசிகர்களுக்கும் மலையேற்ற விரும்பிகளுக்கும் மிகவும் பிடித்தமான தலமாக இது புகழ்பெற்றுள்ளது. வனம்போன்ற நாட்டுப்புற அழகுடன் காட்சியளிக்கும் இந்த மால்ஷேஜ் காட் பிரதேசத்தில் பல ஆறுகளும் ஓடுவதால் இது மற்ற மலைப் பிரதேசங்களிலிருந்து முற்றிலும் வேறுபட்டு விசேஷமாக திகழ்கிறது. இங்குள்ள பல கோட்டைகள் வரலாற்றுக் காலத்தை தரிசிக்கும் வகையில் காட்சியளிக்கின்றன. மழைக்காலத்தில் நிரம்பி வழியும் நீர்வீழ்ச்சிகளும், சரணாலயத்தில் காணப்படும் பல வகைத் தாவரங்களும் உயிரினங்களும் இப்பிரதேசத்தின் குறிப்பிடத்தக்க அம்சங்களாகும். பறவை ரசிகர்கள் மற்றும் இயற்கை ஆர்வலர்கள் அரிதான புலம்பெயர் பறவைகளை இங்கு பிம்பல்காவ்ன் ஜோகா அணைப்பகுதியில் பார்க்கலாம். இந்த அணையின் பின்னணியில் பளபளக்கும் நீர்த்தேக்கமும் வளமான காட்டுப்பகுதியும் ரம்மியமாக காட்சியளிக்கின்றன.
Rahul0n1ine