ரயில் பயணங்கள் என்றாலே பலருக்கு மறக்க முடியாத அனுபவங்களை மனதில் பதித்து விடும். அதிலும், இயற்கையின் எழிலோடு இணைந்து செல்லும் சில வழித்தடங்கள் புதுவித அனுபவத்தையும், மறக்கமுடியாத நினைவுகளையும் தரும். அதுபோன்று இந்திய ரயில்வே வழித்தடங்களில் மிகச் சிறந்த பல வழித்தடங்கள் உள்ளன. அவற்றில் சில, வாழ்நாளில் ஒரு முறையேனும் பயணித்து ரசிக்க வேண்டிய வழித்தடங்கள் எது என பார்க்கலாம் வாங்க.
வாஸ்கோடகாமா- லோண்டா
நாட்டின் முக்கிய சுற்றுலாத் தலமாக திகழும் கோவாவின் தலைநகரான வாஸ்கோடகாமா மற்றும் லோண்டா சந்திப்புக்கு இடையிலான ரயில் வழித்தடம் நிச்சயம் ஒரு முறை செல்ல வேண்டிய ரயில் பயணமாக இருக்கும். ஆர்ப்பரித்து விழும் அருவிகள், அடர்ந்த வனக் காடுகள் என ஒரு த்ரில் அனுபவத்தை நிச்சயம் இப்பாதை வழங்கும்.
ஜம்மு- உதம்பூர்
காஷ்மீர் பள்ளத்தாக்கில் சாலை, ரயில்வே என எந்தவொரு கட்டுமான திட்டங்களையும் செயல்படுத்துவது பொறியியல் துறைக்கு சவாலான காரியமாகவே உள்ளது. அதன் நில அமைப்பு அப்படி. இந்த நிலையில், உலகின் அழகான பள்ளத்தாக்கு பகுதியாக புகழபெற்ற காஷ்மீரில் ஜம்மு- உதம்பூர் இடையிலான 53 கிலோ மீட்டர் தூரம் கொண்ட ரயில்வே பாதையும் இயற்கை எழிலை ரசித்துக் கொண்டே பயணம் செய்யும் வாய்ப்பை அளிக்கிறது.
Amareshwara Sainadh
ஜம்மு- காஸிகுண்ட்
ஜம்முவில் இருந்து காஸிகுண்ட் இடையிலான வழித்தடத்தில் வீசூம் தென்றலை ரசித்தபடியே ரயிலில் பயணிக்க தனி வரமே வேண்டும். ஜம்முவில் எந்த அளவிற்கு சுற்றுலாத் தலங்கள் பிரசிதிபெற்றுள்ளதோ அதற்கு ஈடாக இந்த ரயில் பயணமும் முக்கிய பங்கு வகிக்கிறது என்றார் மிகையாகாது. குளிர்காலங்களில் முழுவதும் எங்கு காணினும் வெண் போர்வையாக பரந்து கிடக்கும் பனிப் படலங்களை கண்டு ரசித்துக் கொண்டே செல்லலாம்.
PP Yoonus
ரத்னகிரி- மங்களூர்
வியக்க வைக்கும் இயற்கை அழகை கண்டு ரசித்துக் கொண்டே செல்வதற்கான மற்றொரு வழித்தடம் ரத்னகிரியில் இருந்து மங்களூர் இடையிலான ரயில் வழித்தடம். கொங்கன் ரயில் மண்டலத்தில் இருக்கும் இந்த ரயில் வழித்தடம் ஏராளமான ஆறுகள் மற்றும் நீர்ப்பகுதிகளை கடந்து சென்று நம் கண்களையும், மனதையும் ஈரப்படுத்தும்.
பதான்கோட்- ஜோகிந்தர்நகர்
இமாச்சலப் பிரதேசம் கங்ரா பள்ளாத்தாக்கு பகுதியில் உள்ள ஜோகிந்தர் நகரையும், பஞ்சாப் மாநிலம் பதான் கோட்டையும் இணைக்கும் 165 கிலோ மீட்டர் தூரம் கொண்ட இந்த ரயில் வழித்தடம் கணவாய்கள், சுரங்கப் பாதைகள், ஆறுகள் என ஓர் இயற்கை அழகில் குளிப்பது போன்ற உணர்வை ஏற்படுத்தும்.
ஊட்டி மலை ரயில்
110 ஆண்டுகளுக்கும் மேலாக சேவை அளித்து வரும் ஊட்டி மலை ரயில் தனது பயணத்தின் மூலம் பல லட்சம் மக்களின் கண்களுக்கு அன்றாடம் விருந்தளித்து வந்துள்ளது, தற்போதும் வருகிறது. தென் இந்தியாவுக்கு சுற்றுலா வருபவர்களின் தாகத்தை தீர்ப்பதில் இந்த ரயிலுக்கு முக்கிய பங்கு உண்டு. அடுத்த முறை எங்க ஊருக்கு வரவங்க தவறாம இந்த ரயிலுல ஒருமுறை பயணிச்சு பாருங்க. சொர்க்கம் எப்படி இருக்கும்னு கண்கூடாக தெரியும்.
கல்கா- சிம்லா மலை ரயில்
ஊட்டி மலை ரயில் போன்றே கல்காவில் இருந்து சிம்லா இடையிலான மலை ரயிலும் வட இந்திய சுற்றுலா செல்வோரை கவர்ந்திலுப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. ரயில் பயணத்தின்போது கொட்டும், பனிக் கட்டி மழையும், நடுங்க வைக்கும் குளிரும், அதள பாதாளத்திலிருந்து எழுந்த கோபுரத்தில் கட்டிய பாலத்தில் யூ டர்ன் போட்டு செல்லும் ரயிலின் அழகும் கண்களுக்கு விருந்துதான். ஹனிமூனுக்கு இடம்தேடுற புது ஜோடியா இருந்தா, சிம்லா போக திட்டமிட்டா மறக்காம இந்த ரயிலிலும் பயணிச்சு பாருங்க. 102 குகை இருட்டும், 800-க்கும் மேற்பட்ட பாலங்களும் செம ஜாலியான ரொமான்ட்டின் ப்ளேஸ்தான்.
கவுகாத்தி - சில்சார்
அசாமின் ஹப்லாங் பள்ளத்தாக்கை கடக்கும் கவுகாத்தி- சில்ச்சார் ரயில் பாதை இயற்கை அழகை ரசிப்பதற்கான ஏற்ற வழித்தடம். சமவெளிகள், தேயிலைத் தோட்டங்கள் என பசுமை தாயகமாக இப்பாதை திகழ்கிறது.
சிலிகுரி- அலிபுர்துவார்
சிக்கிம்- பூடானை இணைக்கும் சிலிகுரி- அலுபுர்துவார் இடையிலான ரயில் பாதையும் பயணம் செய்ய வேண்டிய இந்திய ரயில் தடங்களில் ஒன்று. வனவிலங்கு சரணாலயங்கள், அடர்ந்த பசுமை வனப் பகுதிகள், தேயிலைத் தோட்டங்களைக் கடந்து செல்லும் இந்த ரயில் பாதையும் பலருக்கு மறக்க முடியாத அனுபவத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
ஹாசன்- மங்களூர்
கர்நாடக மாநிலம், ஹாசன்- மங்களூர் இடையிலான ரயில் வழித்தடம் ரயில் பயணிகளை உற்சாகப்படுத்தும். வயல் வெளிகள், அடர்ந்த வனப்பகுதி மற்றும் சக்லேஷ்பூர்- சுப்ரமண்யா ரயில் நிலையங்களுக்கு இடையில் மேற்கு தொடர்ச்சி மலையில் அமைக்கப்பட்டுள்ள 57 குகைகள் மற்றும் நீர்வீழ்ச்சிகளை கடந்து ரசித்தபடியே ஜாலியா பயணிக்கலாம்.
ஜெய்ப்பூர்- ஜெய்சால்மர்
ராஜஸ்தான் பாலைவனத்தில் அமைந்திருக்கும் ஜெய்சால்மர் நகர் ஒட்டக சவாரிக்கு பெயர் போனது. ஜெய்சால்மருக்கும், ஜெய்ப்பூருக்கும் இடையில் இருக்கும் ரயில் வழித்தடம் தார் பாலை வனத்தை கடந்து வருகிறது. வறட்சியான பாலைவனக் காட்டில் பயணம் செய்தாலும் அந்த ஒவ்வொரு நிமிடத்திலும் புதுபுது காட்சிகளை கண்டு ரசிக்கலாம்.