ஈரோடு மாவட்டம், நஞ்சை ஊத்துக்குளி அருகில் உள்ள ஊர் காங்கயம்பாளையம். இங்குள்ள காவிரி ஆற்றின் நடுவில் கோவில் கொண்டிருக்கிறார் அருள்மிகு நட்டாற்றீஸ்வரர்.
கயிலையில் நிகழ்ந்த சிவ-பார்வதி திருக்கல்யாணத்தைத் தரிசிப்பதற்காக எல்லோரும் கயிலையில் குவிந்துவிட, உலகின் வடபுலம் தாழ்ந்து தென்புலம் உயர்ந்தது.
அவற்றை சமன்செய்ய அகத்திய முனிவரை தென்புலம் அனுப்பினார் சிவப்பெருமான். வேறு சில அரும் பணிகளையும் அகத்தியரிடம் ஒப்படைத்தார். அப்பணிகள் ஐந்து என்றும், அவற்றில் இரண்டாவது நட்டாற்றீஸ்வரர் திருத்தலத்தை உருவாக்குவது என்றும் புராணங்கள் கூறுகின்றன.

புராணம் அறிவோம்
தனக்கு வழங்கப்பட்ட பணிகளில் முதன்மையானதாக, குடகில் வடக்கு நோக்கி பாய்ந்த காவிரியை, விநாயகரின் அருட் துணையோடு தெற்கு நோக்கி பாயச் செய்தார் அகத்தியர். அப்போது வாதாபி, வில்வலன் ஆகிய அசுரர்கள் இருவர் தந்திரம் செய்து அகத்தியரை அழிக்க முயற்சித்தபோது, அவர்களை அழித்தார்.
அதனால் அவரை பிரம்மஹத்தி தோஷம் பற்றிக் கொண்டது. அந்த தோஷம் நீங்குவதற்காக காவிரியின் நடுவில் அமைந்திருந்த நாபிக்குன்றம் என்ற இந்த ஸ்வேதமலையின் மீது ஏறி, மண்ணால் லிங்கம் அமைத்து 12 நாட்கள் தொடர்ந்து வழிபட்டு விமோசனம் அடைந்தார் அகத்தியர். பணிகளில் தொடர்ச்சியாக மூன்றாவது பணியை மதுரையிலும், நான்காவது பணியை திருப்புல்லாணியிலும், ஐந்தாவது பணியை பொதிகையிலும் அகத்தியர் நிறைவேற்றியதாக புராணங்கள் எடுத்துரைகின்றன.
சிறப்பு என்ன
பிற்காலத்தில், சுந்தர சோழன் இந்த தலத்தில் ஆலயம் எழுப்பி கும்பாபிஷேகம் நடத்தியதாகச் சரித்திர தகவல்கள் எடுத்துரைகின்றன. பாவம் நீக்கும் புண்ணியம்பதியாம் ராமேஸ்வரத்துக்கு இணையான சிறப்பு இந்தத் தலத்துக்கும் உண்டு.
நீர் சூழ்ந்த ராமேஸ்வரம் தீவைப் போன்று, இங்கும் சிவபெருமான் நீர்சூழ்ந்த பகுதியில் கோவில் கொண்டிருக்கிறார். அங்கே சீதை மணலால் லிங்கம் அமைத்தாள். இங்கு அகத்தியர் மண்ணால் லிங்கம் அமைத்தார் என்கின்றனர் பக்தர்கள்.
மற்றொரு சிறப்பும் இத்தலத்துக்கு உண்டு. முருகப்பெருமான், தெற்கு நோக்கிய பிரமச்சாரியாக பக்தர்களை நோக்கி அடியெடுத்து வைக்கும் அருட்கோலத்தில் அருள்வது, வேறெங்கும் காணக்கிடைக்காத தரிசனம் என்கின்றனர்.
இங்கு சிவனார் மேல் தளத்திலும், நல்லநாயகி அம்பாள் கீழ் தளத்திலும் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இருவரும் விவாக கோலத்தில் அருள்வது விசேஷ அம்சம்.
பிரணவ உருவாய்
கீழ் தளத்தில் இருக்கும் பிள்ளையாரைத் தரிசித்துவிட்டு அப்படியே சிவசந்நிதிக்கு வலமாக வந்தால், அந்த பாதை அமைப்பு 'ஓ' வடிவிலும், பிறகு கீழ் தளத்தில் இருக்கும் அம்பாளைத் தரிசித்துவிட்டு முருகன் சந்நிதியை அடைகிறோம் எனில், அந்தப் பாதை அமைப்பானது 'ம்' வடிவிலும் அமைந்துள்ளது என்பதால், இத்தலம் பிரணவ வடிவில் திகழ்கிறது என்கின்றனர்.
எப்போது தரிசிக்கலாம்
நட்டாற்றீஸ்வரர் திருக்கோயிலைச் சுற்றி நான்கு உப கோயில்கள் அமைந்து உள்ளன. சாத்தம்பூர் வள்ளாலீஸ்வரர், காலமங்கலம் மத்யபுரீஸ்வரர், முலசியில் உள்ள முக்கண்ணீஸ்வரர் , கொக்கராயன் பேட்டை (ஏமப்பள்ளி) பிரம்மபுரீஸ்வரர் ஆகிய கோவில் இடம் பெற்றுள்ளன.
இதில் பிரம்மபுரீஸ்வரரை குக்குட நாதேஸ்வரர் என அழைக்கிறார்கள். நட்டாற்றீஸ்வரரைத் தரிசிக்கவரும் பக்தர்கள் இந்தக் கோவில்களையும் தரிசித்து வரம்பெற்று செல்லலாமே...!
சிவபெருமானுக்கு உகந்த ஞாயிறு, திங்கட்கிழமைகளில் இக்கோவிலில் வழிபடுவது விசேஷம். அகத்தியர், இங்கு 12 நாட்கள் வழிபட்டு அருள் பெற்றார் என்பதால், அவரது வழிபாட்டின் நிறைவு நாள் அதாவது 12-ம் நாள் சித்திரை முதல் நாளாம்.
எனவே, அந்த தினம் இங்கு கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. திருமணம் தடைப்பட்டவர்கள், இந்தக் கோவிலுக்கு வந்து அகத்திய மகரிஷி போலவே 12 நாட்கள் தொடர்ந்து நட்டாற்றீஸ்வரரை வழிபட்டால், தடைகள் யாவும் நீங்கி விரைவில் இணையராகுவர்.
கணவன் - மனைவிக்கு இடையேயான பிரச்னைகள் நீங்கவும் இந்தக் கோவிலுக்கு வந்து அம்மையையும், அப்பனையும் மனமுருக வேண்டினால், நட்டாற்றீஸ்வரரின் நல்லருளால், குறிப்பிட்ட தம்பதிகளின் வாழ்வில் பிணக்குகள்,பிரச்னைகள் நீங்கி, தாம்பத்தியம் சிறந்தோங்கும் என்று நம்பிக்கையுடன் ஏராளமானோர் வந்து செல்கின்றனர்.
ஈரோடு மாவட்டத்துக்கு நீங்கள் செல்லும்போது, இந்த நட்டாற்றீஸ்வரரையும் ஒரு முறை தரிசித்து விட்டு வாருங்கள் காவிரி ஆறு ஓடும் அழகியலோடு...!



Click it and Unblock the Notifications





