குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை தமிழ்நாட்டிலுள்ள சங்க நிலப்பரப்புகளின் ஐந்து பிரிவுகளில் குறிஞ்சி என்பது குறிஞ்சி மலர்கள் ஏராளமாகப் பூக்கும் மலைப் பகுதிகளைக் குறிக்கிறது. ஊட்டி மலைத்தொடரில் சுமார் 33 வகையான குறிஞ்சி மலர்கள் உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். அதன்படி இந்த ஆண்டு குறிஞ்சி மலர் பூத்து குலுங்கி, ஊட்டி மலைத்தொடரை மேலும் அழகாக்கி உள்ளது.
பல்வேறு இடங்களில் காணப்படும் குறிஞ்சி மலர் தோட்டங்கள்
12 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் குறிஞ்சி மலர்கள் தென்னிந்தியாவில் மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள சோலா காடுகளில் ஏராளமாக உள்ளன. ஊட்டி, ஏற்காடு மலைகள், கொடைக்கானல், கேரளாவின் சில பகுதிகள், கர்நாடாகாவின் சில பகுதிகளில் நாம் குறிஞ்சி மலர்களின் தோட்டங்கள் உள்ளன. ஒவ்வொரு பனிரெண்டு ஆண்டுக்கு ஒரு முறையும் இந்த தோட்டங்கள் யாவும் ஊதா நிற கம்பளியால் போர்த்தப்படுகின்றன.
பூத்துக்குலுங்கும் கேரளாவும் கர்நாடகாவும்
கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் உள்ள கல்லிப்பாரா மலைகள், சிக்மகளூரின் சந்திரத்ரோணா மலைகள் உள்ளிட்ட சில மேற்குத்தொடர்ச்சி மலைகளில் ஸ்ட்ரோபிலாந்தஸ் குந்தியானா எனப்படும் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் அரிய வகை குறிஞ்சி மலர்கள் பூத்துள்ளது. இந்த ஊதா நிற பூக்கள் கம்பளியால் போர்த்தப்பட்டிருக்கும் மலைகளைக் கண்டு களிக்க கேரளா சுற்றுலாக் கழகமும், கர்நாடக சுற்றுலாக் கழகமும் சிறப்பு டூர் பேக்கேஜ்களை அறிமுகப்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டில் குறிஞ்சி மலர்கள்
சுற்றுலாப் பயணிகள் மற்றும் உள்ளூர்வாசிகளுக்கு இது ஒரு மகிழ்ச்சியான செய்தி. ஊட்டியில் உள்ள தொட்டபெட்டா மலைச்சரிவின் மேற்குப் பகுதி இப்போது அழகிய நீலக்குறிஞ்சி மலர்களின் கம்பளத்தால் போற்றப்பட்டு உள்ளது. ஊதா நிற மலர்களால் சூழப்பட்ட மலைப்பகுதிகளை ரசிக்க ஏராளமான சுற்றுலா பயணிகள் ஊட்டி நோக்கி படையெடுக்க தொடங்கியுள்ளனர்.
நான்காண்டு இடைவெளியில் மலர்ந்த நீலக்குறிஞ்சி மலர்கள்
2018 ஆம் ஆண்டு கடைசியாக கொடைக்கானல், ஊட்டி, ஏற்காடு ஆகிய பகுதிகளில் நீலக்குறிஞ்சி மலர்கள் பூத்து குலுங்கின. ஆனால் இப்போது, வெறும் நான்காண்டு வித்தியாசத்தில் மீண்டும் நீலக்குறிஞ்சி மலர்கள் பூத்துள்ளன, இது சற்று குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் 3, 7, 12, 17 மற்றும் 36 ஆண்டுகள் கால இடைவெளிகளில் பூக்கும் குறிஞ்சி மலர்கள் உண்டு என விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். இந்த பூக்கள் எவ்வகையை சார்ந்தவை என்று தெரியவில்லை, இயற்கை அன்னை பல மர்மங்களை தன்னுள் அடக்கியவள். நம்மால் அவளை ரசிப்பதை தாண்டி வேறு என்ன செய்ய முடியும்?