திருமணத்தில் உள்ள மணம் என்ற சொல் இன்று நறுமணம் அல்லது வாசனை என்றே அறியப்பட்டாலும், அடிப்படையில் பல்வேறு அர்த்தத்தை கொண்டுள்ள சொல் இது.
அதாவது 'மண்ணுதல்' என்ற சொல்லுக்கு கூடுதல், கழுவுதல், நெருங்குதல், கலத்தல் என்று பல அர்த்தங்கள் தமிழில் உள்ளன.
அதன்படியே கூடுதல் என்ற பொருளில் மணம் என்றும், அதனுடன் சிறப்பை உணர்த்தும் சொல்லான 'திரு' சேர்க்கப்பட்டு திருமணம் என்றும் அழைக்கப்படுகிறது.
இப்படியாக பெயரிலிருந்தே தொடங்கும் கலாச்சார சிறப்புகள் வாய்ந்த தமிழர் திருமணம், பொருத்தம் பார்த்து, மண நாள் குறித்து, மணப்பந்தல் அமைத்து, மங்கல ஒலி முழங்க விமரிசையாக நடந்தேறுகிறது.
இந்த உன்னதமான வைபவம் இன்று நிறைய பேரிடம் ஏக்கமாக இருந்து வருகிறது. இதற்கு ஜாதக தோஷம், வீட்டுச் சூழ்நிலை என்று பல்வேறு காரணிகள் தடையாக உள்ளன.
இப்படிப்பட்ட தடைகளை எல்லாம் நீங்க மக்கள் தெய்வத்தை தவிர எதை நாட முடியும்? அந்த வகையில் நடக்காத திருமணத்தையும் நடத்திவைக்கும் வல்லமை கொண்ட சில தெய்வங்களை பற்றியும், கோயில்கள் குறித்தும் இங்கே காண்போம்.

திருமந்தம்குன்னு கோயில்
கேரளாவின் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள அங்காடிபுரம் எனும் கிராமத்தில் திருமந்தம்குன்னு கோயில் அமைந்துள்ளது. இது கேரளத் தலைநகர் திருவனந்தபுரம், சென்னை மற்றும் பெங்களூரிலிருந்து முறையே 352, 606, 339 கி.மீ தொலைவில் அமையப்பெற்றிருக்கிறது. இந்தக் கோயிலில் உள்ள விநாயகர் சன்னதியில் செவ்வாய், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் 'மாங்கல்ய பூஜை' என்ற பெயரில் சிறப்பு பூஜை செய்யப்படுகிறது. இப்பூஜையில் கலந்துகொள்வோருக்கு விரைவிலேயே மணவாழ்வு கிட்டும் என்று நம்பப்படுகிறது. மேலும் வழக்கமாக விநாயககருக்கு இடது பக்கம் நின்று வணங்கும் பக்தர்கள், இந்தப் பூஜையின்போது நேராக நின்று வணங்கவேண்டும் என்றும் சொல்லப்படுகிறது.
படம் : Rojypala

ஸ்ரீ கல்யாணசுந்தரேஸ்வரர் ஸ்வாமி கோவில்
நாகப்பட்டினம் மாவட்டத்தில் காவிரிக்கரையோரம் உள்ள திருமணஞ்சேரி எனும் அழகிய கிராமத்தில் ஸ்ரீ கல்யாணசுந்தரேஸ்வரர் ஸ்வாமி கோவில் அமைந்திருக்கிறது. திருமணஞ்சேரியில்தான் சிவனும் பார்வதியும் திருமணம் செய்துகொண்டார்கள் என்று புராணம் கூறுகிறது. எனவே திருமணம் நடைபெறாமல் தடைபட்டுவரும் ஏராளமானோர் இந்தக் கோயிலுக்கு வந்து வழிபட்டு செல்கின்றனர். இந்தக் கோயிலில் திருமணம் நடந்தேற வேண்டி சிறப்பு பூஜைகள் செய்யப்படுகின்றன. அப்படி பூஜை நடத்தி திருமணமானவர்கள், மணமான பிறகு தம்பதி சகிதமாக கோயிலுக்கு வந்து மீண்டும் வழிபட வேண்டும் என்பது ஐதீகம்.
படம் : Senthil-kumar

சாஸ்தாம்கோட்டை தரும சாஸ்தா கோயில்
கேரளாவின் கொல்லம் மாவட்டத்தில் உள்ள ஆரியங்காவு எனும் புனித ஸ்தலத்தில் சாஸ்தாம்கோட்டை தரும சாஸ்தா கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயில் பரசுராமரால் நிறுவப்பட்டது என்று நம்பப்படும் 12 முக்கிய ஐயப்பன் கோயில்களில் ஒன்றாகும். ஒரு புராண நம்பிக்கையின்படி சுவாமி ஐயப்பன் ஆரியங்காவு கிராமத்தில் புஷ்கலாதேவி எனும் சௌராஷ்டிர குல மங்கையை மணந்ததாக சொல்லப்படுகிறது. எனவே இத்திருமணத்தை நினைவுகூரும் விதமாக ஆண்டுதோறும் டிசம்பர் மாதத்தில் இங்கு 'திருக்கல்யாணத் திருவிழா' நடத்தப்படுகிறது. இத்திருக்கல்யாணத்தை காண்பவர்களுக்கு விரைவிலேயே திருமணம் நடக்கும் என்ற நம்பிக்கை நிலவுவதால் நாடு முழுமதுமிருந்து திருவிழாவைக் காண எண்ணற்ற பக்தர்கள் வந்து செல்கிறார்கள்.
படம் : Sasthamcotta

திருவிடந்தை நித்ய கல்யாணப்பெருமாள் கோவில்
சென்னையிலிருந்து புதுச்சேரி செல்லும் கிழக்குக் கடற்கரை சாலையில், கோவளம் பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 3 கி.மீ தொலைவில் திருவிடந்தை நித்ய கல்யாணப்பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இத்தலவரலாற்றின்படி மூலவர் நித்ய கல்யாணப்பெருமாளான மகாவிஷ்ணு, தினம் ஒரு பெண்ணாக வருடம் முழுவதும் திருமணம் செய்து வந்ததாகவும், அதன் காரணமாகவே மூலவர் நித்ய கல்யாணப்பெருமாள் என்று அழைக்கப்படுவதாகவும் சொல்லப்படுகிறது. மேலும் திருமணம் விரைவில் நடைபெறவேண்டி ஏராளமானோர் இந்தக் கோயிலுக்கு வந்து செல்கிறார்கள்.
படம் : கி. கார்த்திகேயன்

ஸ்ரீ மஹாதேவர் கோயில்
ஆலப்புழா நகரிலிருந்து 14 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மாராரிக்குளம் என்ற கிராமத்தில் ஸ்ரீ மஹாதேவர் கோயில் அமைந்திருக்கிறது. இந்தியாவிலுள்ள மிகப்பழமையான சிவன் கோயில்களில் மஹாதேவர் கோயிலும் ஒன்று. இந்த இடத்தில் சிவபெருமானை மணக்க வேண்டி பார்வதி தேவி கடுந்தவம் இருந்ததாக புராணம் கூறுகிறது. எனவே கல்யாண முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படும் இந்த கோயிலில் வழிபட்டால் வெகு சீக்கிரத்தில் திருமணமாகாதவர்களுக்கு கல்யாணம் நடக்கும் என்பது நம்பிக்கை.
படம்



Click it and Unblock the Notifications








