தமிழ்நாட்டில் மலையேற்றம் செய்ய விரும்புபவர்கள் கண்டிப்பாக நீலகிரியின் சிலிர்ப்பூட்டும் சரிவுகளையும், செங்குத்து பாறைகளையும் தவற விட்டுவிடக்கூடாது. வானை முட்டும் 24 சிகரங்கள் நம் சாகச நெஞ்சத்தை தட்டி எழுப்புவதோடு, நீல மலைகளின் அமைதியும் தனிமையும் நம்மை வேறொரு உலகத்துக்கு கொண்டுசென்றுவிடும்.
அதுமட்டுமல்லாமல் நீலகிரியின் தேயிலை தோட்டங்களும், தேவதாரு காடுகளும், கொத்து கொத்தாக மலர்கள் பூத்துக்குலுங்கும் பசுமை பள்ளத்தாக்குகளும் பயண களைப்பு தெரியாமல் ஊட்டி, குன்னூர், கோத்தகிரி என நம்மை கைப்பிடித்து அழைத்துச்செல்லும்.
வாருங்கள்.. உங்களுக்கான அழகிய டிரெக்கிங் பயணத் திட்டம்
இதோ இப்படிச் செல்லுங்கள்
கோத்தகிரி - கொடநாடு வியூ பாயின்ட் - கேத்தரின் அருவி - எல்க் அருவி
கோத்தகிரி - கொடநாடு
கோத்தா இனமக்கள் அதிகமாக வாழும் கோத்தகிரி பகுதி நீலகிரி மலைகளின் மையத்தில் அமைந்திருக்கிறது. எனவே கோத்தகிரியிலிருந்து கிழக்கு பக்கமாக கொடநாடு வியூ பாயின்ட் மார்க்கமாக மலையேற்றத்தில் ஈடுபடுவது அட்டகாசமான ஆரம்பமாக இருக்கும்.
பள்ளத்தாக்கும் மொய்யாற்றின் அரவணைப்பும்
பள்ளத்தாக்கின் அழகை முழுமையாக கண்டு ரசிக்க முடிவதுடன், மொய்யாறு நதியின் அரவணைப்பில் மிடுக்குடன் காட்சியளிக்கும் தேயிலை தோட்டங்கள் கண்களுக்கு விருந்தாக அமையும். இதுபோக கொடநாடு வியூ பாயின்ட்டுக்கு தென்மேற்காக நடந்து சென்றால் கேத்தரின் அருவி மற்றும் எல்க் அருவியின் பரவசமூட்டும் காட்சியை கண்டு களிக்கலாம்.
கொடநாடு காட்சி முனை:
நீலகிரி மற்றும் ஈரோடு மாவட்டங்களை இரண்டாகப் பிரிக்கும் நதியின் பேரழகை இந்த முனையிலிருந்து கண்டு ரசிக்கலாம்.
தமிழ்நாடு, கர்நாடகம் மாநில எல்லைகளையும் கண்டு களிக்கலாம். கோத்தகிரியில் இருந்து 18 கி.மீ. தொலைவில் உள்ள இந்தப் பகுதியில்தான் கொடநாடு தேயிலைத் தொழிற்ாலை உள்ளது.
உச்சிப் பொழுதில் இந்த முனையில் நின்றபடி பார்த்தால் நீலகிரி மலைத்தொடரின் நீண்டு உயர்ந்த ஒய்யாரத் தோற்றம் முழுமையாகத் தெரியும்.
கேத்தரின் அருவி
கோத்தகிரியில் இருந்து 5 கி.மீ. தொலைவில் மேட்டுப் பாளையம் சாலைக்குச் செல்லும் வழியில் இந்த அருவி உள்ளது. நீலகிரியின் இரண்டாவது அழகிய வனப்பகுதி, இந்த நீர்வீழ்ச்சி இருக்கும் பகுதி என்று பல சுற்றுலாப் பயணிகளால் குறிப்பிட்டப்பட்டுள்ளது.
இப்பகுதி என்றும் பசுமையா இருக்கும். தேயிலைத் தோட்டம் மற்றும் மேட்டுப்பாளையத்தைச் சுற்றியுள்ள பகுதிகளின் அழகைப் பார்த்து ரசிக்கலாம்.
எம்மா உயரம் தெரியுமா?
கோத்தகிரியின் முதன்மையான சுற்றுலா தலமான இது 250 அடி உயரத்திலிருந்து தரையில் வந்து விழுகிறது. இந்த மலை நீலகிரியின் மிக உயரமான மலைகளில் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது.
கேத்தரின் அருவியின் பூர்வீக பெயர் கெட்டிஹாட ஹல்லா என்பதாகும். இதன் பொருள் டோல் ஆற்று அடிவாரம் என்பதாகும்.
முழு அருவியையும் பார்க்க
கேத்தரின் அருவியை முழுமையாக பார்க்கவேண்டுமானால் டால்பின் மூக்கு என்ற இடத்தில் இருந்து பார்த்தால்தான் தெரியும்.
கேத்தரின் அருவிக்கு நீங்கள் சென்றிருக்கிறீர்களா? உங்களின் அனுபவத்தை எங்களுடன் கீழே கமண்ட பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்.
எல்க் அருவி
எல்க் அருவியும் 8 கி.மீ. தொலைவில் கோத்தகிரியின் அருகில் உள்ளது. இயற்கை அழகு மிகுந்து காணப்படும் இடங்களில் இதுவும் ஒன்று.
மிக அழகான இயற்கையான பகுதிகளின் பின்னணியில் புகைப்படமெடுக்க விரும்புபவர்கள் இந்த இடத்தை தவற விடக்கூடாது. மறக்காமல் கேமரா எடுத்துச் செல்லுங்கள்.
அழகிய நீர்வீழ்ச்சி என்றாலும் அதிக அளவு நீர் விழுவதில்லை. மழைக்காலங்களில் செல்வதே சிறந்ததாக அமையும். அல்லது மழை முடிந்த அந்த காலங்களில் செல்வது சாலச் சிறந்தது.
இதையும் டிரை பண்ணுங்க
ஊட்டி - பார்சன் சிகரம் - முக்கூர்த்தி தேசிய பூங்கா - பைக்காரா அருவி - முதுமலை தேசிய பூங்கா - ஊட்டி
ஊட்டி - பார்சன் சிகரம்
*ஊட்டியின் வடமேற்காக மலையேற்றம் செய்வது பார்சன் பள்ளத்தாக்கின் வசீகரிக்கும் அற்புத தோற்றத்தை நம் கண் முன்னே படம்பிடித்து காட்டும்.
*இந்த சாகச பாதை நம்மை போர்த்திமுண்ட் எனும் நீலகிரியின் அடி ஆழத்தில் இருக்கும் அழகிய சிறு கிராமத்திற்கு அழைத்துச் செல்லும்.
*அங்கு ஒரு இரவு தங்கிப் பாருங்கள் அதன் பருவநிலை தரும் குளிர் ஸ்பரிசம் உங்களுக்கு உங்கள் காதலருடன் இருப்பது போன்ற உணர்வை கொடுக்கும்.
*அதோடு போர்த்திமுண்ட் கிராமத்திற்கு அருகே உள்ள வனவிலங்கு சரணாலயத்தில் சிறுத்தை, யானை, ஆபத்தான தாஹ்ர் ஆடு போன்ற விலங்குகளை கண்டு ரசிக்கலாம்.
பாண்டியர் குன்றுகளிலிருந்து
* அடுத்த நாள் பாண்டியர் குன்றுகளிலிருந்து மலையேற்றத்தை துவங்கினால் பைக்காரா அருவி, முதுமலை தேசிய பூங்கா வழியாக உங்களை மீண்டும் ஊட்டிக்கு அழைத்து வந்து விடும்.
*அப்போது வரும் வழியில் முதுமலை தேசிய பூங்காவில் காணப்படும் எக்கச்சக்கமான சந்தன மரங்கள், தேக்கு மரங்கள், மூங்கில்கள் எல்லாம் நம்முடனேயே பயணிப்பது போல் பயணத்தை இனிமையானதாக ஆக்கும்.
பைக்காரா அருவி
நீலகிரி மாவட்டத்தில் உள்ள முக்கிய சுற்றுலாத் தலங்களில் பைக்காரா அருவியும் ஒன்று ஆகும். ஊட்டி அருகேயுள்ள பைக்காரா என்ற ஊரில் உற்பத்தியாகும் ஆறானது பைக்காரா அருவியாக உருவெடுத்துள்ளது.
எவ்ளோ உயரம் தெரியுமா?
55மீ மற்றும் 61மீ உயரத்திலிருந்து கொட்டும் தொடரருவியாகச் சுற்றுலாப் பயணிகளைக் கவர்கிறது.
படகு சவாரி
பைக்காரா ஆற்றின் குறுக்கே ஊட்டி-கூடலூர் சாலையின் அருகே பைக்காரா அணை கட்டப்பட்டுள்ளது. மிகவும் பிரசித்திப்பெற்ற சுற்றுலாப் படகு நிலையம் இதில் அமைந்துள்ளது.
இந்த ரூட்ல போய் பாருங்க
குன்னூர் - லேம்ப் பாறை - லேடி கேன்னிங் சீட் - டால்பின் மூக்கு - துரூக் கோட்டை - குன்னூர்
குன்னூர் - லேம்ப் பாறை - லேடி கேன்னிங் சீட்
லேம்ப் பாறை மற்றும் லேடி கேன்னிங் சீட் வரை அப்படியே ஒரு இயற்கை நடைபயணம் மேற்கொண்டால் மலைகள் வடித்திருக்கும் இயற்கை அழகினையும், பசுமை பள்ளத்தாக்குகளையும் பரிபூரணமாக பார்த்து களிக்கலாம்.
அதோடு லேடி கேன்னிங் சீட் உங்களை டால்பின் மூக்கு காட்சி மேடைக்கு கூட்டிச்செல்லும். நீலகிரியின் பல முக்கிய இடங்களை இங்கிருந்து காணலாம். கோத்தகிரியின் கேத்தரின் அருவியும் அதில் ஒன்று.
ஆனால் மலை உச்சியில் இருக்கும் போது கவனமாக ஒவ்வொரு அடியையும் எடுத்து வைக்க வேண்டும். மேலும் குன்னூர் செல்லும் வழியில் லாஸ் அருவி மற்றும் ஆங்கிலேயர்களுக்கு எதிராக திப்பு சுல்தான் வீரப்போர் புரிந்த துரூக் கோட்டை ஆகியவற்றை காண முடியும்.
ஊட்டி - அவலஞ்சி - எமெரால்ட்
*ஊட்டிக்கு தென்மேற்காக அமைந்துள்ள அவலஞ்சி அணை வழியாக மலையேற்றம் மேற்கொள்வது சுலபமானது என்பதுடன் தூரத்தில் தெரியும் முக்கூர்த்தி தேசிய பூங்கா, பனிச்சரிவு ஏரி மற்றும் அடர்ந்த காடுகள் ஆகியவை கண்களுக்கு விருந்து படைக்கும்.
*மேலும் இப்பகுதியில் இரவில் தங்குவதற்கு வனத்துறை விருந்தினர் இல்லங்களை ஏற்பாடு செய்துகொடுக்கிறது. எனவே இரவு ஓய்வெடுத்துக்கொண்டு அடுத்த நாள் புத்துணர்ச்சியுடன் பயணத்தை துவங்கலாம்.
புத்துணர்ச்சி தரும் காலைப் பொழுது
* காலையில் புகழ்பெற்ற பிக்னிக் ஸ்தலமான மேல் பவானி அணையிலிருந்து மலையேற்றத்தை தொடங்குவது சிறப்பானதாக இருக்கும்.
*இந்த அணையின் வடக்கே ஊட்டியின் உயரமான சிகரங்களில் ஒன்றான கொல்லரிபெட்டா அமைத்துள்ளது. இங்கிருந்து ஊட்டிக்கு திரும்பும் வழியில் அமைந்துள்ள எமெரால்ட் எனும் அழகிய கிராமத்தை நீங்கள் தவற விட்டுவிடக்கூடாது.
எப்போது எப்படி ?
*நீலகிரி மலைகளில் வருடத்தின் எந்த காலத்திலும் மலையேற்றம் மேற்கொள்ளலாம் என்றாலும் பனிக்காலங்களில் மலையேற்றத்தில் ஈடுபடுவது அற்புதமான அனுபவத்தை கொடுக்கும்.
*எனினும் மலையேற்றத்தில் ஈடுபடும் முன் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் கவனம் செலுத்துவது அவசியம். அப்படி உங்களுக்கு பயண வழிகாட்டி யாரேனும் தேவைப்பட்டால் அதை வனத்துறை மூலம் ஏற்பாடு செய்துகொள்ளலாம்.
*மேலும் ஊட்டி, குன்னூர் மற்றும் கோத்தகிரி பகுதிகளில் தங்குவதற்கு விருந்துனர் இல்லங்களும் கிடைக்கும். எனவே இப்போதே சிலிர்ப்பூட்டும் நீலகிரி மலையேற்றத்துக்கு தயாராகுங்கள்!