இந்திய அரசும் மாநில அரசுகளும் இதுவரை 247 வனவிலங்கு சரணாலயங்கள் மற்றும் 55 தேசியப் பூங்காக்களை உருவாக்கி அழிந்து வரும் எத்தனையோ விலங்கினங்களையும், பறவை மற்றும் ஊர்வன வகைகளையும் பாதுகாத்து வருகின்றன.
தமிழகத்தில் தற்போது 5 தேசியப் பூங்காக்கள், 3 புலிகள் சரணாலயங்கள், 4 யானை சரணாலயங்கள், 3 பல்லுயிர் பெருக்கத் தளங்கள், 13 பறவை சரணாலயங்கள் ஆகியவை செயல்பட்டு வருகின்றன.
இவற்றில் சில முக்கியமான மற்றும் பிரசித்திபெற்ற சரணாலயங்கள் மற்றும் தேசியப் பூங்காக்கள் சிலவற்றை பற்றி காண்போம்.

சென்னை முதலைக் காப்பகம் அறக்கட்டளை
மாமல்லபுரத்திலிருந்து 14 கி.மீ தூரத்தில் அமைந்துள்ள இந்த முதலைப்பண்ணை, இந்திய மற்றும் ஆப்பிரிக்க முதலைகளை பாதுகாப்பான சூழலில் வளர்த்து இனப்பெருக்கம் செய்விக்கும் நோக்கத்துடன் துவங்கப்பட்டதாகும். இன்று 5000-த்துக்கும் மேற்பட்ட முதலைகள் இங்கு பாதுகாக்கப்படுகின்றன. இங்கு வருகை தரும் பார்வையாளர்கள் பாதுகாப்பான தொலைவிலிருந்து இந்த முதலைகள் இயற்கை சூழலில் திறந்த வெளி குளங்களில் வசிப்பதை பார்த்து ரசிக்கலாம். இந்தியாவிலேயே மிகப்பெரிய முதலைப்பண்ணையான இது 3.2 ஹெக்டேர் பரப்பளவில் பரந்து காணப்படுகிறது. இந்த வளாகத்திலுள்ள முதலை பாதுகாப்பு மையத்தில் இனப்பெருக்க செய்விக்கப்படும் முதலைகள் சம்பல் மற்றும் மஹாநதி போன்ற ஆறுகளில் விடப்படுகின்றன. மேலும் இந்த பண்ணையில் இருளர் இனத்தவர் பாம்பு விஷம் சேகரிப்பது குறித்த காட்சி விளக்கங்களை பார்வையாளர்களுக்கு அளிக்கின்றனர்.
படம் : Adam63

முக்கூர்த்தி தேசியப் பூங்கா
தமிழ்நாட்டின் மாநில விலங்கான, அழிந்து வரும் இனமான வரையாட்டினை பாதுக்காப்பதற்காக முக்கூர்த்தி தேசியப் பூங்கா உருவாக்கப்பட்டுள்ளது. இது நீலகிரி மேட்டுநிலத்தின் தென்கிழக்கு மூலையில் அமைந்துள்ள ஒரு பாதுகாக்கப்பட்ட பகுதியாகும். இங்கு வரையாடு மட்டுமின்றி வங்காளப் புலி, ஆசிய யானை போன்ற பல அழியும் தருவாயில் உள்ள விலங்குகளும் வாழ்ந்து வருகின்றன.
படம் : N. A. Naseer

அறிஞர் அண்ணா விலங்கியல் பூங்கா, வண்டலூர்
இந்தியாவின் முதல் உயிரியல் பூங்காவாக அறியப்படும் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா சென்னைக்கு தெற்கே 30 கீ.மீ தொலைவில் உள்ள வண்டலூரில் அமைந்துள்ளது. இங்கு 170-க்கும் மேற்பட்ட பாலுட்டிகள், பறவைகள் மற்றும் ஊர்வன வகைகள் வசித்து வருகின்றன.
படம் : VikiUNITED

தெப்பக்காடு யானை முகாம், முதுமலை
1972-ஆம் ஆண்டு நிறுவப்பட்ட தெப்பக்காடு யானை முகாமில் தினந்தோறும் ஒரு ஜோடி யானைகள் விநாயகருக்கு பூஜை செய்வது சுற்றுலாப் பயணிகளிடையே மிகவும் பிரசித்தம். இங்கு காலையிலும், மாலையிலும் யானைச் சவாரிகள் பயணிகளுக்காக ஏற்பாடு செய்யப்படுகின்றன. அதுபோக மாலை நேரங்களில், யானைகள் உணவு அருந்தும் சமயம் அவற்றை பார்வையிட பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள்.
படம் : PP Yoonus

கிண்டி தேசியப் பூங்கா, சென்னை
இந்தியாவின் 8-வது சிறிய தேசிய பூங்காவாக கிண்டி தேசியப் பூங்கா அறியப்படுகிறது. அதோடு ஒரு மாநகரின் எல்லைக்குள்ளேயே அமைந்திருக்கும் அரிய வகை தேசியப் பூங்காக்களில் இதுவும் ஒன்று. இங்கு புள்ளி மான், கலைமான், நரி, கீரி போன்ற விலங்குகள் அதிகளவில் காணப்படுபவையாகும். இவைதவிர 100-க்கும் மேற்பட்ட பறவையினங்களையும் இந்தப் பூங்காவில் நீங்கள் கண்டு ரசிக்கலாம்.
படம் : Sudharsun Jayaraj

முண்டந்துறை களக்காடு புலிகள் காப்பகம், அம்பாசமுத்திரம்
800 சதுர கி.மீ. பரப்பளவு கொண்ட முண்டந்துறை களக்காடு புலிகள் காப்பகம், 1988-ல் தேசிய புலிகள் காப்பகம் என்ற அந்தஸ்தை பெற்றது. இங்கு புலிகளைத் தவிர சிறுத்தைகள், நரிகள், கழுதைப் புலிகள், காட்டுப் பூனைகள், பலவகைப்பட்ட குரங்குகள் மற்றும் மான்களையும் கண்டு ரசிக்கலாம். இவைதவிர ஊர்வன, நீர்நில உயிரினங்கள் மற்றும் பல பறவைகளும் இந்த சரணாலயத்தில் வசித்து வருகின்றன. அதுமட்டுமின்றி சரணாலயத்தில் ஈர்க்கப்படும் மற்றறொரு விஷயம் மலைகளில் மற்றும் காட்டுப் பாதையில் நடை பயணம் செய்ய 24 விதமான பாதைகள் இங்கு அமைந்துள்ளன.

இந்திரா காந்தி வனவிலங்கு சரணாலயம் மற்றும் தேசிய பூங்கா, ஆனைமலை
இந்திரா காந்தி வனவிலங்கு சரணாலயம் பல வகையான காட்டு விலங்கினங்கள் மற்றும் செடியினங்களைக் கொண்டது. இங்கு சிறுத்தைகள், மான்கள், புலிகள், யானைகள், புனுகுப் பூனைகள், காட்டெருதுகள், கரடிகள், தேவாங்குகள், முள்ளம்பன்றிகள், ஓநாய்கள், எறும்புத்திண்ணிகள் உள்ளிட்ட விலங்குகள் வாழ்ந்து வருகின்றன. அதுமட்டுமல்லாமல் சிவப்பு மரப் பறவை, புள்ளிப் புறா, மீசையுடன் கூடிய புல்புல், கறுப்புத் தலை ஓரியோல், ராக்கெட் வால் கரிச்சான் போன்ற பறவைகளையும் நீங்கள் இங்கு கண்டு ரசிக்கலாம். இவைதவிர இப்பூங்காவினுள் அமைந்துள்ள அமராவதி ஏரியில் எண்ணற்ற முதலைகள் காணப்படுகின்றன.
படம் : Manvendra Bhangui

வல்லநாடு மான் சரணாலயம், தூத்துக்குடி
வல்லநாடு மான் சரணாலயம் திருநெல்வேலி-தூத்துக்குடி பாதைக்கு இடையே, தூத்துகுடியிலிருந்து 35 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. இந்த காப்பகம் மிகவும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருக்கும் வெளிமான் இனத்தைக் காப்பதற்காக அமைக்கப்பட்டதாகும். எனவே இங்கு மான்களை பாதுகாப்பதற்காக இந்தப் பகுதி முழுவதும் வனத்துறையால் வேலி அடைத்து பாதுகாப்பு செய்யப்பட்டுள்ளது. இங்கு வெளிமான்களை தவிர புள்ளிமான், குட்டை வால் குரங்கு, காட்டுப் பூனை, கீரி, எறும்புத்திண்ணி, வைப்பர் உள்ளிட்ட விலங்கினங்களையும் கண்டு ரசிக்கலாம்.

சின்னார் வனவிலங்கு சரணாலயம், பொள்ளாச்சி
பொள்ளாச்சியிலிருந்து சுமார் 65 கி.மீ. தொலைவில் உள்ள சின்னார் வனவிலங்கு சரணாலயத்தில் சிறுத்தைகள், புள்ளிமான்கள், காட்டெருமைகள், புலிகள், யானைகள், தொப்பித்தலை குரங்குகள், நீலகிரி வரையாடுகள், ஹனுமான் குரங்குகள், தலை நரைத்த ராட்சத அணில்கள், உள்ளிட்ட 34 வகையான பாலுட்டிகள் வசித்து வருகின்றன. மேலும் அரிய வகையான தலை நரைத்த ராட்சத அணில்கள், தூவானம் நீர்வீழ்ச்சி, மற்றும் முழு சரணாலயத்தையும் பார்க்கக்கூடிய வகையில் அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கோபுரம் ஆகியவை சுற்றுலாப் பயணிகளின் கவனம் ஈர்க்கும் அம்சங்களாகும்.
படம் : N. A. Naseer



Click it and Unblock the Notifications






