இந்தியாவின் வட கோடியில் இருக்கும் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் 22 மாவட்டங்களில், ஒரு முக்கிய மாவட்டமாக பரமுல்லா மாவட்டம் அமைந்திருக்கிறது. மொத்தம் 4190 கிமீ பரப்பளவை கொண்டிருக்கும் இந்த மாவட்டம் 8 டெசில்கள் மற்றும் 16 வட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.
இந்த மாவட்டம் தனது மேற்கு எல்லையை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரோடு பகிர்ந்து கொண்டிருக்கிறது. இந்த மாவட்டத்தின் வடக்கு எல்லையாக குப்வாரா நகரும், தெற்கு எல்லையாக பூச் மற்றும் பட்காம் ஆகிய பகுதிகளும் கிழக்கு எல்லையாக ஸ்ரீநகர் மற்றும் லடாக் ஆகிய பகுதிகளும் அமைந்துள்ளன.
வரலாறு
பரமுல்லா நகரம் நீண்ட வரலாற்றை கொண்டுள்ளது. கிறிஸ்து பிறப்பதற்கு முன் 2306 ஆம் ஆண்டு ராஜ பிம்சினா என்ற அரசரால் இந்த நகர் கட்டப்பட்டது. இந்த பகுதிக்கு முகலாய பேரரசரான அக்பர் வந்து சென்றிருக்கிறார்.
ஜகாங்கீர் மன்னர் இந்த பகுதியின் அழகினால் ஈர்க்கப்பட்டு, அவர் காஷ்மீர் பள்ளத்தாக்கிற்கு செல்லும் வழியில் இந்த பரமுல்லா பகுதியில் தங்கி இருக்கிறார். மேலும் சீனப் பயணியான யுவான்சுவாங்கும் இந்த பரமுல்லா பகுதியை சுற்றிப் பார்த்திருக்கிறார்.
இந்த பரமுல்லா மாவட்டத்தின் பெயரான பரமுல்லா, சமஸ்கிருத வார்த்தைகளான வரா மற்றும் முல் ஆகியவற்றிலிருந்து வருகின்றன. வரா என்றால் கரடி என்று பொருள். முல் என்றால் பல் என்று பொருள். இந்த பெயர் வந்த காரணம் பற்றி காஷ்மீரின் பண்டைய புராணமான நிலமத்புர்னா கீழ்கண்டவாறு கூறுகிறது.
இந்த புராணத்தின்படி ஒரு காலத்தில் காஷ்மீர் ஒரு ஏரியாக இருந்திருக்கிறது. அந்த ஏரிக்கு சதிசரா என்று பெயர் கொடுக்கப்பட்டிருந்தது. இந்த ஏரி ஜலோத்பவா என்ற தீய சக்தியின் கட்டுப்பாட்டில் இருந்தது.
எனவே இந்த தீய சக்தியிலிருந்து காஷ்மீரை விடுவிக்க, இந்து சமய கடவுளான விஷ்ணு பெருமான் ஒரு கரடியாக உருமாறி, அந்த ஏரியை தடுத்து இருந்த மலையை, தன்னுடைய கூரிய பற்களால் குடைந்து அதில் ஒரு பெரிய வழியை உண்டாக்கி அதன் மூலம் இந்த ஏரி நீர் முழுவதையும் வெளியேற செய்தார். அதன் மூலம் அந்த தீய சக்தி வெளியேறிவிட்டது என்று அந்த புராணம் கூறுகிறது.
பரமுல்லாவின் முக்கியச் சுற்றுலாத் தலங்கள்
பரமுல்லா மாவட்டம் இஸ்லாமிய திருத்தலங்களுக்கும், குருத்துவாராக்களுக்கும், கோயில்களுக்கும், மடங்களுக்கும் மற்றும் புண்ணிய தலங்களுக்கும் மிகவும் பரிசித்தி பெற்ற பகுதியாக விளங்குகிறது.
குல்மார்க், அல்பதர் ஏரி, கிலன்மார்க், மகாராணி சிவாலயம், பெரோஸ்போர் மற்றும் நிங்கில் நல்லா, குல்மார்க் பயோஸ்பியர் நீர்த்தேக்கம், சியாரத்தில் இருக்கும் பாபா ரெஷி, மன்ஸ்பால் போன்ற பகுதிகள் பரமுல்லா மாவட்டத்தின் மிக முக்கிய சுற்றுலாத் தலங்களாக உள்ளன.
மேலும் இந்த பரமுல்லா மாவட்டத்தில் இருக்கும் உலர் ஏரி, மனஸ்பல் ஏரி போன்றவற்றை சுற்றுலா பயணிகள் கண்டிப்பாக பார்க்க வேண்டும்.
அதோடு இந்த மாவட்டத்தில் அமைந்திருக்கும் இஸ்லாமிய புனிதத் தலங்களான, டான்க்மார்க்கில் அமைந்திருக்கும் சியாரத் பாபா ரெஷி, சோபோரில் அமைந்திருக்கும் சியாரத் டுஜார், அகமத்போராவில் அமைந்திருக்கும் இமாம்பரா கூம் மற்றும் சியாரத் ஜன்பாஸ் வாலி போன்றவற்றை பார்க்க வேண்டும்.
வாட்லாப்பில் அமைந்திருக்கும் சியாரத் டஸ்டிகீர் சாகிப் மற்றும் சியாரத் பாபா ஷாக்கூர் உதின், பன்டிபோராவில் அமைந்திருக்கும் சியாரத் அகிம் ஷெரிப் போன்ற இடங்கள் மிகவும் முக்கியமான சமயத் தலங்கள் ஆகும்.
இசுலாமிய புனிதத் தலங்கள் மற்றும் இந்து சமய புனிதத் தலங்கள் மட்டுமல்லாது, இந்த பரமுல்லா மாவட்டத்தில் சுற்றுலாப் பயணிகளின் மனங்களை மயக்கும் வகையில் ஏராளமான இயற்கை காட்சிகள் இருக்கின்றன.
இங்கிருக்கும் நீரோடைகள், மலைகள், பள்ளத்தாக்குகள், ஏரிகள், நீரூற்றுகள் மற்றும் நீர்வீழ்ச்சிகள் போன்றவற்றை கண்டு ரசிக்கும் போது, பரமுல்லாவை விட்டு நீங்க மனம் இடம் கொடுக்காது.