ஹயாத் பக்ஷ் பாக் அல்லது உயிர்ச்சக்தி தரும் தோட்டப்பூங்கா என்றழைக்கப்படும் இந்த மிகப்பெரிய தோட்டப்பூங்காவானது செங்கோட்டை வளாகத்துக்குள்ளேயே அமைந்துள்ளது.
மேற்காசிய தோட்டப்பூங்காக்கள் மீது தீராத மோகம் கொண்டிருந்த முகலாய மன்னர்களால் இந்த அற்புதமான தோட்டப்பூங்கா நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இதில் நீர்த்தடாகங்கள், மாட மண்டப அமைப்புகள், நீர்ப்பாதைகள் மற்றும் நீரூற்றுகள் போன்றவை அமைக்கப்பட்டு சதுரம் சதுரமான தொகுதிகளாக மொத்த தோட்டப்பூங்காவும் பிரிக்கப்பட்டுள்ளது. வரலாற்றுக்குறிப்புகளின்படி இந்த தோட்டத்தில் நீலம், வெள்ளை மற்றும் ஊதா நிற பூச்செடிகள் மட்டுமே வளர்க்கப்பட்டதாக சொல்லப்படுகிறது.
இந்த தோட்டப்பூங்காவின் வடகிழக்கு மூலையில் ஷா புர்ஜ் எனும் கோபுர அமைப்பு காணப்படுகிறது. இந்த கோபுரத்தின் குமிழ் மாட அமைப்பு 1857 ம் ஆண்டு வெடித்த சிப்பாய் கலகத்தின் போது அகற்றப்பட்டுள்ளது.
இந்த கோபுரத்தை போலவே மற்றொரு கோபுர அமைப்பு ஆஸாத் புர்ஜ் என்ற பெயரில் செங்கோட்டையின் தென்கிழக்கு மூலையில் அமைந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
ஹயாத் பக்ஷ் பாக் தோட்டப்பூங்காவின் இருபுறமும் வெள்ளை சலைவைக்கற்களால் அமைக்கப்பட்ட சவான் மற்றும் படோன் என்று அழைக்கப்படும் மாட மண்டபங்கள் உள்ளன.
ஹிந்து காலண்டரில் மழைக்காலத்தை குறிக்கும் இரண்டு மாதங்களின் பெயர்களே இந்த மாட மண்டபங்களுக்கு இடப்பட்டுள்ளன. சவான் மாடத்தின் இருபுறமும் மெழுகுவர்த்திகளை ஏற்றி வைப்பதற்கான அமைப்புகள் காணப்படுகின்றன. இவை மாடத்தின் அழகுக்கு இன்னும் மெருகூட்டுகின்றன.
மோதி மஹால், ஹீரா மஹால் மற்றும் ஜாஃபர் மஹால் போன்ற மாளிகைகளும் இந்த ஹயாத் பக்ஷ் பாக் வளாகத்தின் அங்கங்களாக வீற்றுள்ளன. இருப்பினும் சிப்பாய் கலகத்தின்போது மோதி மஹால் பகுதி சேதமடைந்துள்ளது.
நக்கார் கானா, திவான்-இ-ஆம், திவான்-இ-காஸ், ரங் மஹால், காஸ் மஹால் மற்றும் மும்தாஜ் மஹால் போன்றவை இந்த செங்கோட்டை ஸ்தலத்தில் பார்க்க வேண்டிய இதர அம்சங்களாக அமைந்துள்ளன.