ஜஹாபனா எனப்படும் இந்த புராதன கோட்டை நகரமைப்பு முகமது பின் துக்ளக் மன்னரால் 1326-27 ம் ஆண்டுகளில் உருவாக்கப்பட்டுள்ளது. டெல்லியின் நான்காவது புராதன நகரமைப்பாக இந்த ஜஹாபனா கருதப்படுகிறது.
மங்கோலியர்களின் தொடர்ந்த தாக்குதலில் இருந்து தப்பிக்கும்விதமாக டெல்லியின் தெற்குப்பகுதியில் இந்த நகரமைப்பு உருவாக்கப்பட்டிருக்கிறது. டெல்லி வெளிவட்டச்சாலை, குதுப் காம்ப்ளக்ஸ், மெஹ்ரௌலி சாலை மற்றும் சிராக் டெல்லி ரோடு போன்றவை இந்த ஜஹாபனா பகுதியை சூழ்ந்துள்ளன.
தற்போது இந்த ஜஹாபனா நகரமைப்பு மற்றும் அதன் கோட்டைகள், மாளிகைகள் போன்றவை சிதிலங்களாகத்தான் காணப்படுகின்றன. டெல்லியிலிருந்து தௌலதாபாதிற்கு தலைநகரை மாற்றி திரும்பவும் டெல்லிக்கு மாற்றிய முகமது பின் துக்ளக் மன்னரின் குழப்ப ஆட்சியே இந்த ஜஹான்பாணாவின் அழிவிற்கு காரணமாக சொல்லப்படுகிறது.
இன்று இடிபாடுகளுடன் காணப்பட்டாலும் இந்த ஜஹாபனா ஒரு சுவாரசியமான வரலாற்றுத்தலமாக, காண வேண்டிய சுற்றுலா அம்சமாக அறியப்படுகிறது. இந்த தலத்தில் காணப்படும் கோட்டையின் மிச்சங்கள் ஒரு காலத்தில் அவை அதிகார பீடமாக விளங்கியிருந்ததற்கான சாட்சியங்களாக வீற்றிருக்கின்றன.
பேஹம்புரி மசூதி, சாதனா கல்லறை வளாகம், லால் கும்பத், சேராய் ஷாஜி மஹால் மற்றும் பிஜய் மண்டல் போன்றவை இந்த ஸ்தலத்தில் எஞ்சியுள்ள வரலாற்றுச்சின்னங்களாகும்.
அக்காலத்தில் இந்த பேஹம்புரி மசூதியானது இப்பகுதியின் மிகப்பெரிய மசூதியாக திகழ்ந்ததாக சொல்லப்படுகிறது. இருப்பினும் தற்போது இதன் பெரும்பாலான மாடங்கள் இடிந்துபோய், பயன்படுத்த முடியாத நிலையில் சிதிலமாக காட்சியளிக்கிறது.
1000 தூண்களுடன் முகமது பின் துக்ளக் மன்னரின் இருப்பிட அரன்மனையாக விளங்கிய பிஜய் மண்டல் அமைப்பும் தற்போது இடிபாடுகளுடன் காட்சியளிக்கிறது.