டெல்லி நகரத்தில் உள்ள ஒரு புராதனமான கோட்டையே இந்த துக்ளக்காபாத் கோட்டையாகும். தற்போது சிதிலமடைந்து காட்சியளிக்கும் இது துக்ளக் ராஜவம்சத்தை நிறுவிய கியாஸுதீன் துக்ளக் என்ற மன்னரால் 1321ம் ஆண்டில் கட்டப்பட்டிருக்கிறது.
இந்த கோட்டையின் நிர்மாணத்திற்குபின் ஒரு சுவராசியமான பின்னணி சொல்லப்படுகிறது. காஸி மாலிக் என்பவர் (இவரே பின்னாளில் கியாஸுதீன் துக்ளக் என்று தன்னை பிரகடனப்படுத்திக்கொண்டார்) கில்ஜி வம்ச அரசர்களின் கீழ் ஒரு வரிவசூல் பிரதிநிதியாக இருந்துள்ளார்.
இவரிடம் கில்ஜி வம்ச மன்னர்கள் ‘நீயே மன்னனாகி ஒரு கோட்டையை கட்டிக்கொள்’ என்று கேலி பேசியுள்ளனர். இதனை உண்மையிலேயே செயல்படுத்திக்காட்ட வேண்டும் என்று மனதில் வரித்துக்கொண்ட காஸி மாலிக் 1321ம் ஆண்டு கில்ஜி வம்ச மன்னர்களை வென்று துரத்திவிட்டு கியாஸுதீன் துக்ளக் என்ற பெயருடன் டெல்லியில் துக்ளக் வம்சத்தை துவங்கி வைத்துள்ளார். தனது கனவாக இருந்த ஒரு அற்புதக்கோட்டையை கட்டும் பணியையும் அவர் அப்போதே துவங்கியுள்ளார்.
எனினும் கில்ஜி எதிர்பார்த்த அளவுக்கு இந்த கோட்டையை கட்டி முடிக்கமுடியவில்லை. ஒரு யோகியின் சாபத்தை பெற்றதனால்தான் கோட்டையை கியாஸுதீன் துக்ளக் மன்னரால் முடிக்க முடியாமல் போயிற்றும் என்று சொல்லப்படுகிறது.
இருந்தும் டெல்லி மாநகரத்திலுள்ள மிகப்பெரிய கோட்டைகளுள் ஒன்றாகவே இந்த துக்ளக்காபாத் கோட்டை புகழ் பெற்றுள்ளது. இந்த கோட்டை வளாகத்தில் மசூதிகள், அரண்மனைகள், கோபுரங்கள், மாளிகைகள் மற்றும் தடாகங்கள் போன்றவை காணப்படுகின்றன.
மன்னரின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் விதமாகவும் இந்த கோட்டை நிர்மாணிக்கப்பட்டிருக்கிறது. துக்ளக்காபாத் கோட்டையின் சுற்றுச்சுவர்கள் இந்தியாவிலுள்ள மற்ற எந்த கோட்டையைக்காட்டிலும் பெரியதாக அமைக்கபட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
துக்ளக்காபாத் எனும் இந்த கோட்டைநகரம் டெல்லியின் மூன்றாவது நகரமாக கருதப்படுகிறது. இதன் உள்ளே அமைக்கப்பட்டிருந்த சாலைகள் மற்றும் தெருக்களின் வடிவமைப்பை இன்றும் காணலாம். குதுப் காம்ப்ளக்ஸ் எனப்படும் மற்றொரு புராதன சுற்றுலாஸ்தலத்திற்கு அருகிலேயே இந்த துக்ளக்காபாத் கோட்டையும் அமைந்துள்ளது.