தேவஸ்வோம் மியூசியம் என்றழைக்கப்படும் இந்த அருங்காட்சியகம் குருவாயூரப்பன் கோயிலின் கிழக்கு வாசல் அருகே உள்ளது. இங்கு பலவிதமான இசைக்கருவிகள், புராதனப்பொருட்கள், சுவரோவியங்கள், கோயில் பொருட்கள் மற்றும் பாரம்பரியம் சார்ந்த கலைப்பொருட்கள் போன்றவை காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கின்றன.
குருவாயூரப்பனுக்கு காணிக்கையாக அளிக்கப்பட்ட விலைமதிப்பற்ற சில அபூர்வ பொருட்களையும், திருவிழாக்களின்போது யானைகளை அலங்கரிக்க பயன்படுத்தப்படும் ஆபரணப்பொருட்களையும்கூட இங்கு காணலாம்.
மேலும், இந்த தேவஸ்வோம் மியூசியத்தில் பல அபூர்வ புகைப்படங்கள், சிலைகள் மற்றும் பூந்தனம், மேலப்புத்தூர் போன்ற புகழ் பெற்ற கவிஞர்கள் பயன்படுத்திய பொருட்கள் போன்றவையும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. கதகளி மற்றும் கிருஷ்ணாட்டம் போன்ற நடன நிகழ்ச்சிகளுக்கு பயன்படுத்தப்படும் சில விசேஷ ஆபரணங்களும் இங்கு காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கின்றன.
குருவாயூர் வரும்போது முக்கியமான சுற்றுலா அம்சமாக அறியப்படும் இந்த அருங்காட்சியகத்திற்கு மறக்காமல் விஜயம் செய்வது சிறந்தது. கேரள பாரம்பரியம் மற்றும் கலாச்சாரம் பற்றிய சில அற்புதமான தகவல்களை ஒரே இடத்தில் நாம் பெறும் வகையில் இந்த அருங்காட்சியகம் அமைக்கப்பட்டிருக்கிறது.