ஹுக்ளி அல்லது ஹுக்ளி சுச்சுரா என்று அழைக்கப்படும் இந்த நகரம் இந்தியாவில் கதம்பமான வெளிநாட்டு கலாச்சார அம்சங்களுடன் காட்சியளிக்கும் நகரங்களில் ஒன்றாகும். போர்த்துகீசிய, டச்சு மற்றும் ஆங்கிலேய கலாச்சாரங்களின் தாக்கங்கள் இந்த நகரில் கலந்துள்ளன. முகலாய சாம்ராஜ்யம் வீழ்ச்சியடையத்தொடங்கியபோது கொல்கத்தா, ஹல்தியா மற்றும் ஹுக்ளீ ஆகிய இடங்களில்தான் ஆங்கிலேயர்கள் வந்திறங்கி தங்களது ஆக்கிரமிப்புகளை துவங்கினர் என்பது குறிப்பிட வேண்டிய ஒன்றாகும்.
ஆற்றங்கரை நகரம்!
தற்போது ஹுக்ளி நகரம் ஒரு செழிப்பான ஆற்றங்கரை துறைமுகமாக புகழ் பெற்றுள்ளது. கொல்கத்தா நகரத்திலிருந்து ஒரு சில கிலோ மீட்டர் தூரத்தில் இந்த நகரம் அமைந்திருக்கிறது.
ஹுக்ளியிலிருந்து ஆற்றுவழி பயணிகள் படகுப்போக்குவரத்து மூலமாக வடக்கு 24 பர்க்கானாக்களை சென்றடையலாம். ஹுக்ளி நகரம் முழுதுமே பாகீரதி ஆற்றின் கரையிலேயே அமைந்திருக்கிறது. ஹுக்ளி எனும் பெயர் ஹுக்ளி ஆற்றை குறிப்பிடுவதாகவும் பரவலாக அறியப்படுகிறது.
ஹுக்ளி மற்றும் சுற்றியுள்ள சுற்றுலாத்தலங்கள்
காலப்போக்கில் இந்த ஹுக்ளி நகரம் கொல்கத்தா நகரத்தின் நீட்சியாகவும் புறநகர்ப்பகுதியாகவும் மாறியுள்ளது. கொல்கத்தாவுக்கு விஜயம் செய்யும் பயணிகள் ஒரு நாள் பயணமாக இந்த ஹுக்ளி நகரத்திற்கு விஜயம் செய்யலாம்.
கொல்கத்தாவின் இதர சுற்றுலாத்தலங்களுக்கு செல்லும் தூரத்தில்தான் இந்த ஹுக்ளியும் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. பண்டேல் சர்ச் மற்றும் ஹூக்ளி இமாம்பாரா ஆகியவை ஹுக்ளியில் பார்க்க வேண்டிய அம்சங்களாகும்.
ஹுக்ளியின் நவீன அடையாளம்!
ஹுக்ளி நகர மக்கள் பெருநகர் கலாச்சார நவீன நாகரிகத்தை அடிப்படையாக கொண்ட பழக்க வழக்கங்களுடன் காணப்படுகின்றனர். இங்குள்ள சின்சுரா என்.எஸ். ரோடு எனும் இடத்தில் நவீன பிராண்டுகளின் ஷோரூம்கள், டெக்னாலஜி தொடர்பான பொருட்களுக்கான கடைகள் மற்றும் உணவகங்கள் போன்றவை அமைந்துள்ளன.
ஹுக்ளியில் கிடைக்கும் சுவையான கடல் உணவு வகைகள் பயணிகள் அவசியம் ருசிபார்க்க வேண்டியவையாகும்.
திருவிழாக்கள் மற்றும் கொண்டாட்டங்கள்!
ஹுக்ளி நகர மக்கள் திருவிழாக்கள் மற்றும் பண்டிகைகளை மிகுந்த ஆர்வத்துடன் கோலாகலமாக கொண்டாடுகின்றனர். துர்க்கா பூஜா, தீபாவளி மற்றும் துசேரா ஆகியவை இந்நகரத்தில் கொண்டாடப்படும் முக்கியமான திருவிழாக்களாகும். இந்த திருவிழாக்காலங்களில் ஒட்டுமொத்த நகரமும் வண்ணமயமாக அலங்கரிக்கப்பட்டு ஜொலிக்கிறது.