ஹைதராபாத் நகரில் உள்ள இந்த சில்குர் பாலாஜி கோயிலை விசா பாலாஜி கோயில் அல்லது விசா தெய்வம் என்று அழைக்கின்றனர். மிகப்புராதனமான இந்த கோயிலில் பாலாஜி கடவுள் அவரது துணைவியரான ஸ்ரீதேவி மற்றும் பூதேவி ஆகியோருடன் தரிசனம் அளிக்கின்றார்.
எந்த விதமான பண காணிக்கைகளையும் ஏற்றுக்கொள்ளாத கோயிலாக இது சர்வதேச அளவில் புகழ் பெற்றுள்ளது. இந்த கோயிலில் காசு உண்டியலோ அல்லது ‘பத்ர தான’ அமைப்புகளோ கிடையாது.
கடவுளுக்கு முன்னால் அனைவரும் சமம் எனும் கருத்தை வலியுறுத்தும் வகையில் இந்த கோயிலில் ‘விஐபி’ தரிசன முறை அல்லது பாதை எதுவுமே பின்பற்றப்படுவதில்லை.
மற்றுமொரு விசேஷ அம்சமாக இந்த கோயிலின் நிர்வாகமும் மத்திய அல்லது மாநில அரசாங்கத்தின் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த புராதனக்கோயிலில் காணப்படும் வேலைப்பாடுகளிலிருந்து இது ஐநூறு ஆண்டுகளுக்கும் மேற்பட்ட பழமையை கொண்டிருக்கலாம் என்பதாக கருதப்படுகிறது. ஒஸ்மான் சாகர் ஏரியின் கரையின்மீது கம்பீரமாக வீற்றுள்ள இந்த கோயில் மெஹ்திப்பட்டணத்திலிருந்து 33 கி.மீ தூரத்தில் உள்ளது. வித்தியாசமான நெறிமுறைகள் ஒழுங்குடன் கடைப்பிடிக்கும் இந்த கோயில் ஏராளமான பக்தர்களையும் பயணிகளையும் ஈர்த்து வருகிறது.