ஹைதராபாத் நகரத்தில் மீர் ஆலம் குளத்துக்கருகில் அமைந்துள்ள இந்த நேரு ஜுவாலஜிகல் பார்க் ஒரு முக்கியமான சுற்றுலா அம்சமாக பெயர் பெற்றுள்ளது. சொல்லப்போனால் ஹைதராபாத் நகரத்தின் மூன்று முக்கியமான சுற்றுலா அம்சங்களில் இதுவும் ஒன்றாகும்.
1959-ம் ஆண்டில் கட்ட ஆரம்பிக்கப்பட்ட இந்த வனவிலங்கு பூங்கா 1963-ம் ஆண்டில் பொதுமக்களுக்கு திறந்துவிடப்பட்டது. இந்த பூங்காவில் பலவிதமான மிருகங்கள், பறவைகள், ஊர்வன விலங்குகள் பாதுகாக்கப்படுகின்றன.
புலி, சிறுத்தை, ஆசியச்சிங்கம், மலைப்பாம்பு, உராங்குடான் குரங்கு, முதலை, காட்டெருமை, கலை மான், மான் மற்றும் இந்திய காண்டாமிருகம் போன்ற விலங்குகள் இங்கேயே வளர்க்கப்பட்டு இனப்பெருக்கம் செய்விக்கப்படுகின்றன.
இங்குள்ள விலங்குகளுக்கும் பறவைகளுக்கும் இயற்கையான வாழ்விடச்சூழல் கிடைக்கும்படியாக இந்த பூங்கா வடிவமைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. காட்டு விலங்குகள் பற்றி தெரிந்து கொள்வதற்கான கல்விக்கூடம் போன்று அமைந்துள்ளதால் குழந்தைகளோடு சுற்றுலா மேற்கொள்ளும் பயணிகள் தவறாமல் இந்த வனவிலங்கு பூங்காவுக்கு விஜயம் செய்கின்றனர்.
தினசரி இந்த பூங்காவில் யானைச்சவாரி மற்றும் காட்டுச்சுற்றுலா (சஃபாரி) போன்றவை பார்வையாளர்களுக்கு வழங்கப்படுகின்றன. இயற்கை வரலாறு பற்றிய காட்சிப்பொருட்களை கொண்டிருக்கும் ஒரு விசேஷ அருங்காட்சியகமும் இந்த வனவிலங்கு பூங்காவில் உள்ளது.