ஹைதராபாத் நகரின் புறநகர்ப்பகுதியான சாங்கி எனும் இடத்தில் இந்த சாங்கி கோயில் அமைந்துள்ளது. மிக உயரமான ராஜ கோபுரத்தை கொண்டுள்ள இந்த கோயில் உள்ளூர் மக்களால் மிக புனிதமான ஆன்மீக திருத்தலமாக பூஜிக்கப்படுகிறது.
வெகு தூரத்திலிருந்தே இந்த கோயில் கோபுரத்தை பார்க்க முடிகிறது. பரமானந்தகிரி எனும் மலையின் உச்சியில் இந்த சாங்கி கோயில் கம்பீரமாக வீற்றிருக்கிறது. இக்கோயிலை தரிசிக்க ஒவ்வொரு வருடமும் ஆயிரக்கணக்கில் பக்தர்கள் வருகை தருகின்றனர்.
ஆன்மீக தரிசனம் மட்டுமல்லாமல் சுற்றியுள்ள பள்ளத்தாக்குகளை பார்த்து ரசிக்கும்படியான இயற்கை தரிசனத்தையும் இந்த கோயில் தலம் வழங்குவதால் ஏராளமான சுற்றுலாப்பயணிகளும் இந்த கோயிலுக்கு வருகை தருகின்றனர்.
இந்த கோயிலின் வடிவமைப்பானது எல்லாவிதத்திலும் தென்னிந்திய கோயில் கட்டுமான மரபை கொண்டுள்ளது. கோயிலின் வாசற்படிக்கட்டுகளில் பிரம்மாண்ட யானைச்சிலைகள் காவல் சக்திகள் போன்று அமைக்கப்பட்டுள்ளன.
வானைத்தொடுவதுபோல் நீண்டு காட்சியளிக்கும் மூன்று கோபுரங்கள் இந்த கோயிலில் நிர்மாணிக்கப்பட்டிருக்கின்றன. வாயுபுத்திரனான ஆஞ்சநேயக்கடவுள் இந்த கோயிலின் உச்சிப்பகுதியில் குடிகொண்டு பக்தர்களுக்கு ஆசி வழங்குகிறார்.