ஹைதராபாத் நகரத்தின் சகோதர நகரமாக இந்த செகந்தராபாத் நகரம் உருவாக்கப்பட்டுள்ளது. அதாவது, ஹைதராபாத் நகரமும் செகந்தராபாத் நகரமும் ஒட்டியே உள்ள இரட்டை நகரங்களாகும்.
ஆசஃப் ஜாஹி வம்சத்தை சேர்ந்தவரும் ஹைதராபாத் நகரின் மூன்றாவது நிஜாம் மன்னரும் ஆன சிகந்தர் ஜா என்பவரின் பெயரால் இந்த செகந்தராபாத் நகரம் அழைக்கப்படுகிறது.
1806ம் ஆண்டில் நிர்மாணிக்கப்பட்ட இந்நகரம் இந்தியா சுதந்திரம் அடையும் வரை பெரும்பாலும் ஆங்கிலேய அரசின் ராணுவக்கேந்திரமாகவே திகழ்ந்துள்ளது. ஹைதராபாத் நகரின் இரட்டை நகரமாக திகழ்கின்ற போதிலும், இந்த செகந்தராபாத் நகரின் கலாச்சார அடையாளமும் வரலாற்று பின்னணியும் முற்றிலும் மாறுபட்டு காட்சியளிக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
ஹைதராபாத் நகரம் நவாப்கள் வசித்த இடம் என்றால், செகந்தராபாத் நகரம் ஆங்கிலேய ராணுவ அதிகாரிகள் வசித்த இடமாகும். இன்றும் செகந்தராபாத் நகரம் ராணுவ செயல்பாடுகளைக் கொண்ட கன்டோன்மெண்ட் பகுதியாகவே காட்சியளிக்கிறது.
இந்திய ராணுவத்தின் முப்படைகளை சேர்ந்த பல்வேறு அங்கங்கள் இந்நகரத்தில் இயங்குகின்றன. மேலும் இந்த இரண்டு நகரங்களையும் பிரிப்பது அல்லது இணைப்பது போன்று பிரம்மாண்டமான ஹுசைன் சாகர் ஏரி அமைந்துள்ளது.
இருப்பினும் தற்போது செகந்தராபாத் நகரம் தனிப்பட்ட நகராட்சிப்பகுதியாக இல்லாமல் ஹைதராபாத் மாநகரத்தின் அங்கமாகவே நிர்வகிக்கப்படுகிறது. ஹைதராபாத் மற்றும் செகந்தராபாத் இரண்டும் சேர்ந்த இரட்டை நகரம் நாட்டின் ஆறாவது பெரிய மாநகரமாக அறியப்படுகிறது.