கொல்லம் நகரிலிருந்து 30 கி.மீ தூரத்தில் வல்லிக்காவு எனும் இடத்தில் அமைந்துள்ள இந்த அமிர்தபுரி எனும் ஆன்மீக மையம் சமீப காலமாக ஒரு முக்கியமான யாத்திரை ஸ்தலமாக பிரசித்தி பெற்றிருக்கிறது.
இயற்கை எழிலுடன் காட்சியளிக்கும் மீனவக்கிராமமான வல்லிக்காவு மாதா அமிர்தானந்த மாயி அவர்களின் பிறந்த ஸ்தலம் என்பதால் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
இந்த ஆன்மீக யோகியின் தலைமை ஆசிரமம் அமைந்துள்ள வளாகமே அமிர்தபுரி என்றழைக்கப்படுகிறது. தற்போது உலகமெங்கும் அறியப்பட்டுள்ள ஒரு ஆன்மீக கேந்திரமாக இது பிரசித்தி பெற்றுள்ளது.
சர்வதேச அளவில் தற்போது லட்சக்கணக்கான சீடர்களை கொண்டுள்ள ஆன்மீக யோகி மாதா அமிர்தானந்த மாயி அவர்களின் ஆசிரமக்கிளைகள் பல நாடுகளிலும் அமைக்கப்பட்டுள்ளன.
கொல்லம் நகரிலிருந்து படகுவீடுகள் மூலம் இயற்கை எழிலை ரசித்தபடியே பயணிகள் அமிர்தபுரிக்கு வரலாம். கொச்சி மற்றும் திருவனந்தபுரம் போன்ற நகரங்களிலிருந்து அமிர்தபுரிக்கு பேருந்து வசதிகளும் உள்ளன.
மாதா அமிர்தானந்த மாயி அவர்களின் பெயரால் உருவாக்கப்பட்டுள்ள இந்த அமிர்தபுரி நகரம் பல ஏக்கர் பரப்பளவில் பரந்து காணப்படுகிறது. இந்த வளாகத்தில் ஆசிரமம், பல கல்வி மையங்கள், ஆராய்ச்சி மையங்கள், இலவச மருத்துவமனை, தபால் நிலையம், உணவகங்கள், புத்தகநிலையங்கள் மற்றும் பல ஏராளமான வசதிகள் நிறைந்துள்ளன.
விருந்தினர்களுக்கு தங்கும் வசதிகளும் இங்கு செய்து தரப்படுகின்றன. அமைதியும் ஆன்மீகமும் தவழும் இந்த வளாகம் பார்வையாளர்களை வெகுவாக கவர்கிறது.