சுமார் 150 ஆண்டுகளாக நடந்து கொண்டிருக்கும் காவிரி நதிநீர் பிரச்சினைக்கு ஒரு முடிவு கிடையாதா என்று நீங்கள் யோசிக்கலாம். ஆனால் உண்மையில் கிடையாது தான்! சரி இதனால் பாதிக்கப்படுபவர்கள் விவசாயிகள் மட்டும் தானா? இல்லை நம்மை போன்ற பொதுமக்களும் பல இன்னல்களுக்கு ஆளாகுகின்றனர். தமிழகத்திலிருந்து பெங்களூரு செல்லும் மக்களும், அங்கிருந்து இங்கு வருபவர்களும் பல பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது! இந்த நேரத்தில் என்ன செய்து நாம் சிக்கலில் இருந்து தப்ப வேண்டும் என்று பார்ப்போம்!
உத்தரவிட்ட காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையம்
கர்நாடகாவில் இந்த ஆண்டு பருவமழை கர்நாடகாவின் தண்ணீர் தேவையை தீர்க்க போதுமானதாக இல்லை. அதனால் தமிழகத்திற்கு இந்த ஆண்டு தண்ணீர் திறந்து விட முடியாது என்று கர்நாடக அரசு கூறியுள்ளது. ஆனால், வறட்சி கால பங்கீட்டு முறைப்படி தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட வேண்டும் என காவிரி நீர் மேலாண்மை ஆணையம் கர்நாடகத்திற்கு உத்தரவிட்டுள்ளது.

செப்டம்பர் 26ஆம் தேதி பெங்களூருவில் பந்த்
தமிழகத்திற்கு தண்ணீர் திறப்பதை எதிர்த்து கர்நாடகாவில் பல்வேறு அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றன. கன்னட விவசாயிகள், தொழிற்சங்கங்கள், 100க்கும் மேற்பட்ட அமைப்புகள் ஒன்று திரண்டு செப்டம்பர் 26ஆம் தேதி பெங்களூரு நகரம் உட்பட கர்நாடகா முழுவதும் பந்த் செய்ய திட்டமிட்டுள்ளது.
தமிழர்கள் வசிக்கும் ஏரியாவில் போலீசார் குவிப்பு
பெங்களூருவில் எண்ணற்ற தமிழ் மக்கள் வசித்து வருகின்றனர். இவற்றில் வேலை செய்பவர்கள், கல்லூரி மாணவர்கள், குடும்பங்கள் ஆகியவை அடங்கும். தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிட உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால், பெங்களூருவில் தமிழ் பேசும் மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் கர்நாடக போலீஸார் பாதுகாப்புப் பணிகளை தீவிரப்படுத்தி உள்ளனர். இது ஒரு பாதுகாப்பு முன்னச்செரிக்கையே தவிர தமிழ் மக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்று போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
இரு மாநில எல்லைகளிலும் நிலவும் பதற்றம்
தமிழகத்தின் ஈரோடு, தருமபுரி, நீலகிரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்கள் கர்நாடகாவுடன் எல்லையை பகிர்ந்து கொள்கின்றன. ஆனால், 90 சதவீதத்திற்கும் அதிகமான போக்குவரத்து கிருஷ்ணகிரி மாவட்டத்தின் ஓசூர் வழியையே சார்ந்து இருக்கிறது. தினசரி ஓசூர், கிருஷ்ணகிரியிலிருந்து பெங்களூருவிற்கும், பெங்களூருவிலிருந்து ஓசூர் மற்றும் கிருஷ்ணகிரிக்கும் வேலை நிமித்தமாக ஆயிரக்கணக்கான மக்கள் பயணிக்கின்றனர். காவிரி நதிநீர் பிரச்சினை காரணமாக இரு மாநில எல்லைகளிலும் பதற்றம் நிலவி வருவதால் மக்கள் சற்று குழப்பத்திற்கு ஆளாகியுள்ளனர்.
தமிழக வாகனங்களில் செல்ல வேண்டாம்
செப்டம்பர் 26ஆம் தேதி பெங்களூருவில் முழு பந்த் நடைபெறவுள்ளது. பள்ளி, கல்லூரிகள், அலுவலகங்கள் இயங்காது எனவும் ஓலா, ஊபர் போன்ற கேப்கள் இயங்காது, பேருந்துகளும் இயங்காது என்று திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நீங்கள் பெங்களூருவிற்கு தமிழகத்தில் பதிவு செய்யப்பட்ட வாகனங்களை (TN registered vehicles) எடுத்துக் கொண்டு பெங்களூரு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது.
ரயில் சேவையை பயன்படுத்துவது நல்லது
தமிழக கர்நாடக எல்லையில் பதற்றம் நிலவுவதால் உங்கள் சொந்த வாகனங்களில் பந்த் அன்று பெங்களூரு செல்ல வேண்டாம். நீங்கள் முன்கூட்டியே, ரயிலில் சென்று விடுவது நல்லது. அல்ல, உங்களுக்கு வேலை இருந்தால் வீட்டில் இருந்து பணிபுரியும் தேர்வை உங்களது அலுவலகத்தில் கேட்டு வாங்கிக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறது. பதற்றம் சற்று அடங்கியவுடன் நீங்கள் வழக்கம் போல தமிழக வாகனங்களில் பெங்களூரு செல்லலாம்.



Click it and Unblock the Notifications





