பிப்ரவரி மாதத்தில் மதுரைக்கு சுற்றுலா வரும் பயணிகளை கவருவதற்காகவும், மதுரைக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்காகவும் மதுரை சுற்றுலாத்துறை சார்பில் புதிய ஏற்பாடு ஒன்று செய்யப்பட்டுள்ளது.

மதுரை மாவட்ட சுற்றுலாத்துறை சார்பில் அலங்காநல்லூர் கீழக்கரை பகுதியில் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு ஏறு தழுவுதல் அரங்கில் வாரந்தோறும் சுற்றுலா கலைநிகழ்ச்சிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. பிப்ரவரி 01ம் தேதி துவங்கி, பிப்ரவரிக 23ம் தேதி வரை வாரந்தோறும் இலவசமாக இந்த கலை நிகழ்ச்சிகளை கண்டு ரசிக்கலாம். வாரந்தோறும் சனி மற்றும் ஞாயிற்றுகிழமைகளில் இந்த கலை நிகழ்ச்சிகளை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
வார இறுதி நாட்களில் மாலை 4 மணிக்கு துவங்கி, இரவு 8 மணி வரை தொடர்ந்து 4 மணி நேரம் பரதம், கிராமிய பல்சுவை நிகழ்ச்சி, இசைக் கச்சேரி ஆகியவை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது மட்டுமின்றி, சிறப்பு நிகழ்ச்சியாக பிப்ரவரி 11ம் தேதி தைப்பூசத்தை முன்னிட்டு சிறப்பு பக்தி இன்னிசை நிகழ்ச்சி நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதனால் பொது மக்கள், சுற்றுலா பயணிகள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று மகிழ்ச்சி அடையுமாறு மதுரை மாவட்ட சுற்றுலாத்துறை சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ஜல்லிக்கட்டிற்கு பெயர் பெற்ற அலங்காநல்லூர் அருகே கீழக்கரை பகுதியில் கட்டப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு ஏறு தழுவுதல் அரங்கம் 65 ஏக்கரில் தமிழக அரசால் அமைக்கப்பட்டுள்ளது. இருந்தாலும் மக்கள் இதை ஜல்லிக்கட்டு அரங்கம் என்றே அழைக்கிறார்கள். இந்த ஜல்லிக்கட்டு அரங்கில் கால்நடை மருந்தகம், ஒலி ஒளி காட்சிக்கூடம், அருங்காட்சியகம், அதோடு இணைந்த சிறு நூலகம் ஆகியவை உள்ளன. இந்த நூலகம் கால்நடைகளை மையமாகக் கொண்ட கருப் பொருள் அடிப்படையில் அமைக்கப்பட்டுள்ளது,
ஒரே நேரத்தில் 5000 பேர் வரை அமர்ந்து பார்க்கக் கூடிய மூன்றடுக்கு பார்வையாளர்கள் மாடம், அங்கு வரையப்பட்டுள்ள ஜல்லிக்கட்டு ஓவியங்கள் ஆகியவை காண்போரை நிச்சயம் பரவசப்படுத்துவதாக இருக்கும். ஏறுதழுவுதல், கால்நடை வளர்ப்பு, கால்நடை நோய்கள், விலங்குகள் பராமரிப்பு, கால்நடைகளை மையமாகக் கொண்ட இலக்கிய நூல்கள், ஓலைச் சுவடிகள் என கால்நடைகள் தொடர்பாக அரிய நூல்கள் உள்ளிட்ட பல விஷயங்கள் இந்த அரங்கில் சேகரித்து வைக்கப்பட்டுள்ளது.
விலங்கு நல ஆர்வலர்கள், விலங்குகள் வளர்ப்பில் ஆர்வமுடையவர்கள், மாணவர்கள், வரலாற்று ஆர்வலர்கள், தமிழர்களின் பாரம்பரியம், கிராமத்து கலாச்சாரம் பற்றி தெரிந்து கொள்ள நினைப்பவர்கள் அவசியம் வந்து பார்வையிட வேண்டிய இடம் இந்த ஜல்லிக்கட்டு அரங்கம். இந்த அரங்கத்தின் நுழைவு வாயிலில், மாடுபிடி வீரர் ஒருவர் சீறி வரும் ஜல்லிக்கட்டு காளையை அடக்குவது போன்று அமைக்கப்பட்டுள்ள சிலை அனைவரையும் கவருவதாக அமைந்துள்ளது. இதற்கு முன் நின்று செல்ஃபி எடுத்துக் கொள்ள அனைவரும் ஆர்வம் காட்டி வருகிறார்கள். கடந்த ஓராண்டில் மதுரையில் சுற்றி பார்க்க வேண்டிய இடங்களில் ஒன்றாக இந்த ஜல்லிக்கட்டு அரங்கமும் மாறி உள்ளது. குறிப்பாக ஜனவரி மாதத்தில் நடைபெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு பிறகு இந்த அரங்கிற்கு வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
மதுரைக்கு மாணவர்களை கல்வி சுற்றுலா அழைத்து வர வேண்டும், வீட்டு பிள்ளைகளுக்கு தமிழர்களின் கலாச்சாரங்களை தெரிய வைக்க வேண்டும் என்பவர்கள், குடும்பத்துடன் ஒரு கிராமிய சூழலுக்கு சென்று வர வேண்டு என நினைப்பவர்கள் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு அரங்கிற்கு ஒருமுறை வந்து பார்த்து விட்டு செல்லலாம்.
பிப்ரவரி மாத வீக் எண்டில் நீங்களும் மதுரை செல்ல திட்டமிட்டிருந்தால் ஒருமுறை சென்று இந்த அரங்கையும், சுற்றுலாத்துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கலை நிகழ்ச்சிகளை பார்த்து என்ஜாய் செய்து விட்டு வரலாம்.



Click it and Unblock the Notifications






