குஜராத் மாநிலத்தின் தென்-மேற்குப் பகுதியில் உள்ள சூரத் அதன் ஜவுளிகள் மற்றும் வைரங்களுக்காக மிகவும் புகழ் பெற்ற நகரமாகும். இவை மட்டுமல்லாமல், இந்நகரம் அதன் வரலாற்று முக்கியத்துவம் மற்றும் பெருமைகளுக்காக மிகவும் புகழ் பெற்று விளங்குகிறது.
சூரத் நகரத்தின் புகழ் மிக்க பழமை!
கி.பி. 990-ம் ஆண்டில் சூரத் நகரத்தின் பெயர் சூரிய கடவுள் என்று பொருள்படும் சூர்யாபூர் என்று இருந்தது. பின்னர் பார்ஸி இனத்தவர்கள் 12-ம் நூற்றாண்டில் இங்கே குடியேறினார்கள்.
குத்புதீன் ஐபெக்-கினால் கைப்பற்றப்படும் வரையிலும் மேற்கு சாளுக்கிய பேரரசின் ஒரு பகுதியாக சூரத் இருந்தது. 1514-ம் ஆண்டு குஜராத் சுல்தானிய அரசின் முக்கிய அதிகாரியாக இருந்த கோபி என்ற பிராமணர், சில வியாபாரிகளை இங்கு தங்கியிருக்கச் செய்ததன் காரணமாக, சூரத் இன்று முக்கியமான வியாபார மையமாக மாறியுள்ளது.
இந்நகரத்தை பாதுகாக்கும் பொருட்டாக, சுல்தானிய அரசு கட்டிய சுவர் இன்றும் சாட்சியாக அங்கங்கே நின்று கொண்டுள்ளது. அக்பர், ஜஹாங்கீர் மற்றும் ஷாஜகான் ஆகிய முகலாய அரசர்களின் ஆட்சிக்காலத்தில், இந்நகரம் முகலாய அரசின் முக்கியமான துறைமுகமாக வளர்ந்து வந்திருக்கிறது.
இந்தியாவின் வணிக தலமாக இருந்த இந்நகரத்தில் தான் காலனிய அரசின் நாணயம் அச்சடிக்கும் நிறுவனமும் உருவாக்கப்பட்டுள்ளது. மெக்காவிற்கு ஹஜ் புனிதப்பயணம் செல்லும் முஸ்லிம்கள் கிளம்பிச் செல்ல ஏற்ற இடமாக சூரத் உள்ளது.
பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தின் போது கிழக்கிந்திய கம்பெனியின் கப்பல்கள் இந்த துறைமுகத்தில் நங்கூரமிட்டு நின்று கொண்டிருந்தன. நல்ல வியாபார மையமாகவும் மற்றும் இந்தியாவிற்குள் வருவதற்கும், செல்வதற்குமான பயண இடை நிறுத்த இடமாகவும் சூரத் இருந்தது.
பிரிட்டிஷார் தங்களுடைய வணிக மையமாக பம்பாயை மாற்றும் வரையிலும் சூரத் மிகவும் சுறுசுறுப்பான நகரமாகவே இருந்து வந்தது. அதன்பின்னர், படிப்படியாக சூரத்தின் புகழ் மங்கி விட்டது.
உலகத்தின் முக்கியமான வைர மற்றும் ஜவுளி விற்பனை மையமாக சூரத் உள்ளது. சூரத் நகரத்தில் தான் உலகத்திலுள்ள வைரங்களில் 92ம% வெட்டப்பட்டு, பாலிஷ் செய்யப்படுகின்றன.
இந்தியாவிலேயே மிகவும் அதிகமான எப்ராய்டரி மிஷின்களை கொண்டுள்ளதால் இந்தியாவின் ‘எம்ப்ராய்டரி தலைநகரம்’ என்றும் இந்நகரம் அழைக்கப்படுகிறது.
உலகம் முழுமையும் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் உலகத்திலேயே அதிவேகமாக வளர்ந்து வரும் நகரங்களில் 4-வது நகரமாக இது குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நகரத்தின் வணிக தொடர்புகள் காரணமாக, குஜராத் மாநிலத்தின் வணிக தலைநகரமாக சூரத் விளங்கி வருகிறது.
வைரங்களுக்காக புகழ் பெற்றிருக்கும் சூரத்!
1901-ம் ஆண்டு, கிழக்கு ஆப்ரிக்காவிலிருந்து வந்து இந்தியாவில் சுயமாக வைர வேலைகள் செய்ய விரும்பிய குஜராத்தி வைர வேலையாட்கள், அந்த தொழில் வெற்றிகரமாக இங்கே நிலை கொண்ட பின்னர், 1970-ம் ஆண்டிலிருந்து அமெரிக்காவிற்கு வைரங்களை ஏற்றுமதி செய்யத் துவங்கிவிட்டனர்.
இன்றைய சூரத், சர்வதேச வைர சந்தையில் தனக்கென ஒரு தனியிடத்தை பெற்றுள்ள நகரமாகவும் மற்றும் அதன் எதிர்காலம் இப்பொழுது இருப்பதை விட பெரிய மற்றும் விலை அதிகமான கற்களை பொருத்ததாகவும் உள்ளது.
புவியியல்
சூரத் நகரத்தின் வடக்கில் கோசாம்பா, தெற்கில் பிலிமோரா, கிழக்கில் தபதி நதி மற்றும் மேற்கில் காம்பே வளைகுடா ஆகியவை உள்ளன. சூரத் மாவட்டத்தின் வடக்கில் பாருச் மற்றும் நர்மதா மாவட்டங்களும், தெற்கில் நவ்சாரி மற்றும் டாங் மாவட்டங்களும் உள்ளன. காந்திநகர், சூரத் நகரத்திலிருந்து 284 கிமீ தொலைவில் உள்ளது.
மக்கள்
குஜராத்தி, சிந்தி, இந்தி, மார்வாடி, மராத்தி, தெலுங்கு மற்றும் ஒரியா ஆகிய மொழிகள் சூரத்தில் பரவலாக பேசப்பட்டு வரும் மொழிகளாகும். சூரத்தின் மக்கள்தொகையில் 70%-பேர் இங்கு வந்து குடியேறியவர்களாவர்.
இன்னமும் இந்நகரம் ஜெயின் மற்றும் பார்ஸி இனத்தவரின் மையமான நகரமாக உள்ளது. சூரத்தின் பூர்வகுடி மக்கள் சூர்திஸ் என்றழைக்கப்படுகிறார்கள்.
தனித்தன்மையான பழக்கவழக்கங்கள் மற்றும் உச்சரிப்புகள் ஆகியவற்றால் சூர்திஸ் இனத்தவர் மற்ற இனத்தவர்களிடமிருந்து வேறுபட்டு காணப்படுகிறார்கள். சூர்திஸ் இனத்தவர் விளையாட்டுத்தனம் மிக்கவர்களாகவும் மற்றும் உணவை விரும்பிகளாகவும் இருக்கிறார்கள்.
கலாச்சாரமும், திருவிழாக்களும்!
இனிப்பான கறி உணவுகளுடன் சேர்த்து தயாரிக்கப்படும் நல்ல காரமான சூர்தி உணவுகள் குஜராத் முழுமையும் புகழ் பெற்று விளங்குகின்றன.
காரி என்ற சிறப்பான இனிப்பு உணவும், லோச்சோ, உன்தியு, ராசாவாலா காமன் மற்றும் சூர்தி சைனீஜ் ஆகிய உணவுகளும் சூர்தி உணவு வகைகளில் புகழ் பெற்று விளங்கும் உணவுகளாகும். குஜராத்தில் அசைவ உணவு கலாச்சாரம் நிலவும் நகரமாக சூரத் விளங்குகிறது.
சூரத் நகரத்தில் எல்லாவிதமாக பண்டிகைகளும் நல்ல பரவசத்துடன் கொண்டாடப்பட்டு வருகின்றன். நவராத்திரி, தீபாவளி, விநாயகர் சதுர்த்தி மற்றும் 'மகர சங்கராந்தி'யின் போது நடக்கும் பட்டம் பறக்க விடப்படும் விழா ஆகியவை சூரத்தின் மிகவும் புகழ் பெற்ற பண்டிகைகளாகும்.
அக்டோபர் மாதத்தின் பௌர்ணமி நாளான 'ஷரத் பூர்ணிமா'விற்கு அடுத்த நாளில் சூர்திகளால் கொண்டாடப்படும் சான்டி பட்வோ-வும் சூரத்தின் முக்கியமான பண்டிகையாகும். இந்நாளில், சூர்திகள் காரி இனிப்பையும் மற்றும் பிற சூர்தி பதார்த்தங்களையும் வாங்கி மகிழ்ந்திடுவார்கள்.
சூரத் நகரத்தின் ஆர்வமூட்டக் கூடிய இடங்கள்!
பார்ஸி அகியாரி, மார்ஜான் ஷாமி ரோஸா, சிந்தாமணி ஜெயின் கோவில், வீர் நர்மத் சரஸ்வதி மந்திர், கோபி தலாவ் மற்றும் நவ் சா'இட் மசூதி, ரன்டேர் மற்றும் ஜாமா மசூதி, நவ்சாரி, பிலிமோரா, உத்வாடா, சூரத் கேஸில் ஆகியவை சூரத் நகரில் பார்வையிட வேண்டிய சில முக்கிய சுற்றுலா தலங்களாகும்.
நர்கோல், தண்டி, டூமாஸ், சுவாலி மற்றும் திட்ஹால் ஆகிய முக்கியமான கடற்கரைகளும் இந்நகரத்தில் உள்ளன. பல்வேறு விதமான மகிழ்ச்சியான அனுபவங்களை தரும் நகரமாக சூரத் உள்ளது.
பருவநிலை
சூரத் நகரத்தில் மிதவெப்ப சவானா பருவநிலை நிலவி வருகிறது. இந்நகரத்தின் பருவநிலையை மிகவும் பாதிக்கும் காரணியாக அரபிக்கடல் உள்ளது. ஜுன் மாதத்தின் பின் பகுதியிலிருந்து, செப்டம்பர் மாதம் முடியும் வரை சூரத்தில் கனமழை பெய்யும். ஏப்ரல் மற்றும் மே மாதங்கள் மிகவும் வெப்பமான மாதங்களாக உள்ளன.
அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் கடும் வெப்பம் மீண்டும் சூரத் நகரத்தை ஆக்கிரமித்திடும். டிசம்பர் மாதத்தில் தொடங்கும் குளிர்காலம் பிப்ரவரி மாதத்தின் பின்பகுதி வரையிலும் நீடித்திருக்கும்.
போக்குவரத்து தொடர்புகள்
இந்நகரத்தில் SMSS பேருந்து சேவைகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த பேருந்துகள் CNG எரிபொருள் மற்றும் LCD திரைகளை உடையதாகவும் உள்ளன.