எப்பொழுதும் பரபரப்பாக பெங்களூர் நகர சூழலில் ஓடிக் கொண்டிருப்பவர்களா நீங்கள்? வார இறுதியில் ஒரு சின்ன பிரேக் எடுத்து இயற்கை அழகு மட்டுமே நிரம்பி இருக்கிற ஒரு அழகான ஸ்பாட்டுக்கு சென்று வந்தால் நன்றாக இருக்கும் அல்லவா! பெங்களூருவில் இருந்து 4 மணி நேர பயண தூரத்தில் அமைந்திருக்கும் நீர்வீழ்ச்சிகளில் குளித்து, காடுகளை ஆராய்ந்து, ட்ரெக்கிங் செய்து சாகசத்தில் ஈடுபட ஒரு சூப்பரான சாய்ஸ் இதோ!
பெங்களூர் to எர்மாய் மற்றும் டிடுபே நீர்வீழ்ச்சி சுற்றுலா
இந்த இடத்திற்கு செல்வது சற்று சிரமமாகத் தான் இருக்கும். ஆனால் நீங்கள் நிச்சயம் அந்த இடத்திற்கு சென்றதும் 'பரவாயில்லை, இந்த சோலைக்கு வருவதற்கு இன்னும் கூட கொஞ்சம் கஷ்டபட்டாலும் தவறில்லை' என்று நினைப்பீர்கள். ஆம! நான் குறிப்பிடுவது அனைத்தும் கர்நாடாகாவில் மறைந்து கிடைக்கும் இயற்கை பொக்கிஷங்களில் ஒன்றான 'எர்மாய் மற்றும் டிடுபே நீர்வீழ்ச்சியைப்' பற்றித்தான்!

ஆர்பரித்து கொட்டும் அழகிய நீர்வீழ்ச்சிகள்
டிடுபே மற்றும் எர்மாய் நீர்வீழ்ச்சிகள் தக்ஷின் கர்நாடகாவில் அமைந்துள்ள இரண்டு மிக அழகான நீர்வீழ்ச்சிகள் ஆகும். மேற்கு தொடர்ச்சி மலையின் பல்லாலராய துர்கா மலைத்தொடரின் அடிவாரத்தில் இந்த நீர்வீழ்ச்சிகள் அமைந்துள்ளன. இது 75 அடி உயரத்தில் இருந்து பாறை நிலப்பரப்பில் கீழே சரியும் பல அடுக்கு நீர்வீழ்ச்சியாகும். சுற்றுலாப் பயணிகள் நீந்தி மகிழவும், குளித்து விளையாடவும் இயற்கையாகவே ஒரு 5 அடி ஆழமுள்ள குளத்தை உருவாக்குகிறது. ஆண்டுதோறும் அழகாக விழுகின்ற இந்த நீர்வீழ்ச்சி பருவ காலத்தில் அதீத அழகு பெறுகிறது எனலாம். பருவமழை சமயத்தில் நீர் வரத்து அதிகமாகி பார்ப்பதற்கே கண்கொள்ளா காட்சியாக இருக்கிறது என்பதே உண்மை.
சாகசங்கள் நிறைந்த வார இறுதி சுற்றுலா'
நீங்கள் ஒரு சாகசப் பிரியர் என்றால் எர்மாய் மற்றும் டிடுபே நீர்வீழ்ச்சிகளுக்கு ட்ரெக்கிங் செய்து செல்லுங்கள். எர்மாய் நீர்வீழ்ச்சி பிரதான சாலையில் அமைந்துள்ள கஜூர் தர்காவிலிருந்து 4 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. நடைபயணம் செய்து மலை அடிவாரத்தை அடைந்திடுங்கள். அங்கிருந்து யாராக இருந்தாலும் 1.5 கிமீ நடந்தால் தான் நீர்வீழ்ச்சியை அடைய முடியும். அடர்ந்த காடுகளுக்கு நடுவே, ஆங்காங்கே ஓடைகளைக் கடந்து கடைசியில் நீங்கள் எர்மாய் நீர்வீழ்ச்சியை அடைவீர்கள்.

பசுமையான அழகால் நம்மை மயக்கும் எர்மாய் நீர்வீழ்ச்சி
அதைக் கண்ட மாத்திரத்திலேயே அதன் அழகில் நீங்கள் மயங்கி போவது உறுதி. இந்த மொத்த ட்ரெக்கிங் கிற்கும் ஆகிற நேரம் வெறும் 3௦ நிமிடங்களே! நீர்வீழ்ச்சியை சுற்றி காட்டு யானைகளை அடிக்கடி பார்ப்பதாக உள்ளூர் மக்கள் சொல்வதால் இங்கே முகாமிட முடியாது. அடர்ந்த காட்டுப் பகுதி என்பதால் அபாயம் அதிகம், ஆதலால் உள்ளூர்வாசிகள் அல்லது அனுபவம் வாய்ந்த மலையேறுபவர்களின் வழிகாட்டுதல் இல்லாமல் ஏற வேண்டாம். இங்கிருந்து 4 கிமீ தூரத்தில் தான் டிடுபே நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது.
ஜில்லென்ற நீரை கொட்டும் டிடுபே நீர்வீழ்ச்சி
எர்மாய் நீர்வீழ்ச்சி பசுமை குன்றாத வனாந்திரம், பூத்துக் குலுங்கும் பூக்கள் நிறைந்த, அழகான சோலை போல காட்சி கொடுக்கிறது. அதே போல டிடுபே நீர்வீழ்ச்சியானது உயரத்தில் இருந்து குளிர்ந்த நீரை நம் மேலே அள்ளி தெளிப்பது ஒரு வித சிலிர்ப்பையும், புத்துணர்ச்சியையும் தருகிறது. இயற்கையாக உருவாகி இருக்கும் குளத்தில் நீந்தி குளிக்க மறக்காதீர்கள்.
நண்பர்களுடன் செல்ல ஏற்ற இடம்
பெங்களூருவில் இருந்து 240 கிமீ தொலைவில் அமைந்துள்ள எர்மாய் நீர்வீழ்ச்சியை நண்பர்களுடன் வாகனத்தில் நீங்கள் லாங் டிரைவிங் மூலம் அடைவது நல்ல அனுபவத்தை கொடுக்கும். நீங்கள் சொந்த வாகனத்தில் திட்டமிடுகிறீர்கள் என்றால், சாலைகள் சரிவர இல்லாத காரணத்தினால் சற்று கூடுதல் கவனத்தோடு இருப்பது அவசியம். வழிகாட்டுவதற்கு சைன்போர்டுகள் இல்லை, சில நேரங்களில் கூகுள் மேப் கூட சரியாக வழி காட்டுவது இல்லை. எனவே, உள்ளூர்வாசிகளிடம் துல்லியமான வழியைக் கேட்பது நல்லது.



Click it and Unblock the Notifications





