'இந்தியாவின் சிலிக்கான் பள்ளத்தாக்கு' என்றழைக்கப்படும் பெங்களூருவில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வரும் நிலையில், கர்நாடக அரசுடன் இணைந்து, ஒரு நிபுணர் குழு, நகரின் போக்குவரத்து பிரச்சனைகளை தீர்க்க சாத்தியமான வழியை முன்மொழிந்துள்ளது. அதன்படி போக்குவரத்து நெரிசலைக் குறைக்க பெங்களூருவில் 'நெரிசல் வரியைக்' கொண்டுவர குழு முன்மொழிந்துள்ளது. பொதுமக்களிடம் ஈட்டப்படும் வரி பணத்தினால் புதிய சாலைகள் அமைக்க இந்த முயற்சி எடுக்கப்பட்டுள்ளதை அறிந்த பொதுமக்கள் ஆச்சர்யமடைந்துள்ளனர்.
நெரிசல் வரி என்றால் என்ன?
நெரிசல் வரி என்பது ஒரு நகரத்தின் சில பகுதிகளுக்குள் நுழையும்போது, குறிப்பாக நெரிசலான நேரங்களில் ஓட்டுநர்கள் செலுத்த வேண்டிய கட்டணம் போன்றது. இந்த கட்டணம் குறிப்பிட்ட பகுதிகளில் போக்குவரத்து நெரிசலை குறைக்க உதவும். பீக் ஹவர்ஸில் பெங்களூருக்குள் நுழையும் அனைத்து விலக்கு இல்லாத வாகனங்களுக்கும் நெரிசல் வரி விதிக்கப்படவுள்ளது.

நெரிசல் வரியால் ஏற்படும் பலன்
இந்த மூலோபாயம் போக்குவரத்து நெரிசலைக் கையாள்வதிலும், காற்று மாசுபாட்டைக் குறைப்பதிலும், பசுமைக்குடில் வாயு வெளியேற்றத்தைக் குறைப்பதிலும் வெற்றியைக் பதிவு செய்துள்ளது. கூடுதலாக, இது தனியார் வாகனங்களுக்கு பதிலாக பொது போக்குவரத்தை பயன்படுத்த மக்களை ஊக்குவிக்கிறது.
உள்கட்டமைப்பை மேம்படுத்த முயற்சி
பேருந்துகள், கார்கள் மற்றும் டெலிவரி வாகனங்களின் பயண நேரத்தை மேம்படுத்துவதே நெரிசல் வரியை விதித்ததன் பின்னணியில் உள்ளது. நாளொன்றுக்கு 12 மில்லியன் வாகனங்கள் பெங்களூருவிற்குள் நுழைவதாக மதிப்பிடப்பட்ட நிலையில், நெரிசல் வரியை அறிமுகப்படுத்துவது நகரத்திற்கு குறிப்பிடத்தக்க வருவாயை ஈட்டக்கூடும், இந்த வருவாயை நகரின் போக்குவரத்து உள்கட்டமைப்பை மேம்படுத்த மீண்டும் முதலீடு செய்யலாம் என்று அறிக்கை கூறுகிறது.
எந்தெந்த இடங்களில் நெரிசல் வரி விதிக்கப்படும்?
1. பெல்லாரி சாலை
2. தும்குரு சாலை
3. மாகடி சாலை
4. மைசூர் சாலை
5. கனகபுரா சாலை
6. பன்னர்கட்டா சாலை
7. ஓசூர் சாலை
8. பழைய மெட்ராஸ் சாலை
9. பழைய விமான நிலைய சாலை
எப்படி வரி வசூலிக்கப்படலாம்
நெரிசல் வரியை வசூலிக்க FASTag அமைப்பு பயன்படுத்தப்படலாம். அதிகாரிகள் பரபரப்பான பகுதிகளுக்கு முக்கியமான நுழைவுப் புள்ளிகளில் சோதனைச் சாவடிகளை அமைக்கலாம் மற்றும் வாகனங்கள் கடந்து செல்லும் போது அவற்றைப் படம் எடுக்க கேமராக்களைப் பயன்படுத்தலாம். பின்னர், போக்குவரத்து நெரிசல் வரியை வாகன உரிமையாளர்களிடம் இருந்து வசூலிக்கலாம் என்று கூறப்படுகிறது.
விமர்சிக்கும் பொது மக்கள்
சிங்கப்பூர், லண்டன் மற்றும் ஸ்டாக்ஹோம் போன்ற உலகின் பிற நகரங்களில் விதிக்கப்பட்டுள்ள இந்த வரிக்கு சில இணையவாசிகள் ஆதரவாக இருந்தாலும், பல பெங்களூருவாசிகள் இந்த திட்டத்தை விமர்சித்து வருகின்றனர், சரியான சாலைகள் மற்றும் அடிப்படை வசதிகளை வழங்க அரசாங்கம் முதலில் செயல்பட வேண்டும் என்று சுட்டிக்காட்டுகின்றனர். குடிமக்கள் மீது நெரிசல் வரி விதிக்கும் முன் ஒரு நல்ல பொது போக்குவரத்து நெட்வொர்க்கை அரசாங்கள் உருவாக்க வேண்டும் என்று கருத்து தெரிவித்து வருகின்றனர்.
நிபுணர்கள் கூறுவது என்ன?
நகரின் போக்குவரத்துப் பிரச்சினைகளைத் தீர்க்க இது ஒரு நம்பிக்கைக்குரிய வழியாக நிபுணர்களால் பார்க்கப்படுகிறது. ஆனால் பெங்களூரு மக்கள் இதனால் வருத்தத்தில் உள்ளனர். நகரத்தில் நெரிசல் தவிர்க்க முடியாதது என்று அவர்கள் நம்புகிறார்கள். மோசமான பொது போக்குவரத்து, கார்பூலிங்கிற்கு எதிரான கொள்கைகள், தோண்டப்பட்ட சாலைகள் மற்றும் பிற உள்கட்டமைப்பு சிக்கல்கள் இதற்குக் காரணம் என்று கூருகிறார்கள்.



Click it and Unblock the Notifications





