வர வர திருப்பதி என்றாலே அனைவர்க்கும் இந்த கூட்டத்தில் சிக்கிக் கொள்ளாமல் சுவாமி தரிசனம் செய்வது எப்படி என்கிற கவலை எழுந்து விடுகிறது. ஆனால் திருமலை திருப்பதி தேவஸ்தானம் எத்தனை விதமான சிறப்பு தரிசனங்கள் வழங்கினாலும், நம்மை போன்ற சாமானியர்களுக்கும் சலுகைகளை வழங்கி வருகிறது. அதன்படி எந்தவித முன்பதிவும் இல்லாமல், திருமலை ஏழுமலையானை சீக்கிரம் தரிசிப்பது எப்படி? என்று இந்த பதிவில் பார்க்கலாம்!
சென்னை to திருப்பதி ஒரே நாளில் பயணம்
வாழ்வில் எத்தனை முறை சென்றாலும் மீண்டும் மீண்டும் வர தூண்டக் கூடிய இடம் தான் திருமலை திருப்பதி! கலியுகவரதனாக நமக்கு அருள் பாலிக்கும் திருவேங்கடமுடையானை நாம் எத்தனை முறை தரிசித்தாலும் நமக்கு சலிப்பதில்லை. மாறாக அவர் திருமுகத்தை மீண்டும் மீண்டும் காண வேண்டும் என்ற எண்ணம் பார்த்த வந்து விட்ட அடுத்த நொடியிலேயே நம்மைப் பற்றிக் கொள்ளும் என்று அனைவருமே நினைப்பார்கள்! ஆனால் திருப்பதி செல்வதோ சாதாரண வேலை அல்ல! தரிசின டிக்கெட் மற்றும் தங்குமிடம் புக் செய்வது, பஸ் டிக்கெட் புக் செய்வது, அலுவலகத்தில் லீவ் சொல்லுவது என ஏகப்பட்ட குழப்பம் இருக்கும். நீங்கள் உங்களுக்கு விடுமுறை இருக்கும் போது உதாரணத்திற்கு ஞாயிறு அன்று நீங்கள் சென்று வரலாம். இவையனைத்தையும் நாம் முன்கூட்டியே தயார் செய்து அழகாக திட்டமிட்டால் ஒரே நாளில் சாமி தரிசித்துவிட்டு சென்னைக்கு வந்து விடலாம். உங்களின் அனைத்து கேள்விகளுக்கும் இங்கே விடை உள்ளது.

சென்னை டு திருப்பதி ஒரு நாள் பயணத்திட்டம்
முன்னே கூறியது போலவே நீங்கள் உங்களுடைய விடுமுறை நாளில் பயணிக்க போகிறீர்கள்.அங்கு சென்று தான் தரிசன டிக்கெட் வாங்க வேண்டும். ஆதலால், சற்று முன்கூட்டியே திருப்பதியை அடைவது நல்லது, நீங்கள் சென்னையின் எந்த மூலையில் இருந்தாலும் சென்னை CMBT பஸ் ஸ்டாண்ட் மற்றும் மாதவரம் ஆந்திரா பேருந்து நிலையத்தை அணுக வசதி உண்டு. அதன்படி அதிகாலையில் வீட்டில் இருந்து கிளம்பி 2 அல்லது 3 மணிக்கு திருப்பதி பஸ் ஏறுவது போல திட்டமிட்டு கிளம்புங்கள்.
திருப்பதியில் இலவச தரிசன டோக்கன்கள் வழங்குமிடம்
திருப்பதியில், திருமலை வெங்கடேஸ்வரர் கோயிலுக்கு வருகை தரும் பக்தர்களுக்கு கட்டமைக்கப்பட்ட மற்றும் சரியான நேரத்தில் தரிசன அனுபவத்தை எளிதாக்குவதற்காக ஸ்லாட் சர்வ தரிசனம் (SSD) டோக்கன்கள் வழங்கப்படுகின்றன. இந்த டோக்கன்கள் தினமும் அதிகாலை 4:00 மணி முதல் பின்வரும் இடங்களில் விநியோகிக்கப்படுகின்றன. இவற்றை பெற்றுக் கொண்டால் அதிக பட்சம் 2 அல்லது 3 மணி நேரத்தில் சுவாமி தரிசனம் செய்து விடலாம்.
· விஷ்ணுநிவாசம்: திருப்பதி ரயில் நிலையத்திற்கு எதிரே.
· ஸ்ரீனிவாசம் வளாகம்: திருப்பதி பிரதான பேருந்து நிலையத்திற்கு எதிரே.
· பூதேவி வளாகம்: திருப்பதியில் அமைந்துள்ளது.

திருமலை தங்குமிடம் புக்கிங்
டிக்கெட் கிடைத்துவிட்டால் போதுமானது என்று தயவுசெய்து நினைக்க வேண்டாம். உங்களுடன் வயதானவர்கள், பெண்கள் அல்லது குழந்தைகள் வருகிறார்கள் என்றால் சற்று ஓய்வெடுக்க தனி அறை இருந்தால் அல்லது குளித்து ரெடியாக தனி அறை இருந்தால் நன்றாக இருந்து இருக்குமே என்று நினைத்தால் திருமலை பேருந்து நிலையத்திற்கு எதிரே அமைந்துள்ள CRO ஆபிசில் வரிசையில் நின்று ரூம் பெற்றுக் கொள்ளலாம். உங்களுடைய வசதிக்கு ஏற்றார்போல் ரூ. 100 அல்லது ரூ. 1000 அறைகளை காஷன் டெபாசிட் செய்து புக் செய்து விடுங்கள்.ஆனால் ரூ. 1000 அறையானது கோவிலுக்கு சற்று பக்கத்தில் உள்ளது. செல்வதற்கு வசதியாக இருக்கும். உங்களுக்கு நடப்பது பிடிக்குமென்றால் ரூ. 100 அறையே புக் செய்யலாம். தவறொன்றும் இல்லை.
ஏழுமலையான் தரிசனத்திற்கு தயாராகுங்கள்
உங்கள் டிக்கெட்டில் பொறிக்கப்பட்டுள்ள நேரத்திற்கு ஏற்றார்போல சரியாக SSD கவுண்டரில் இருக்கும்படி செல்லுங்கள். அடுத்த இரண்டு மணி நேரத்தில் எம்பெருமானான திருவேங்கடமுடையானின் தரிசனம் உங்களுக்கு கிட்டும். கோவிலில் சற்று அமர்ந்து மனதார வேண்டிக்கொண்டு பின்னர் திருமலையானின் பிரசாதமான லட்டைப் பெற்றுக்கொண்டு, மதிய உணவு அருந்திவிட்டு ரூமுக்கு செல்லுங்கள்.

திருச்சானூரில் தாயார் தரிசனம்
ரூமில் சற்று களைப்பாறிவிட்டு மதியம் அல்லது மாலை போல் நீங்கள் திருமலையில் இருந்து கிளம்பலாம். கீழே உள்ள பஸ் ஸ்டாண்டிலோ அல்லது திருச்சானூரிலோ உங்களுடைய லக்கேஜூகளை லாக்கரில் வைத்துவிட்டு தாயாரின் தரிசனத்திற்கு செல்லலாம். நீங்கள் ரூ. 100 டிக்கெட்டில் சென்றால் விரைவில் அம்பாளை தரிசிக்கலாம். எப்படியும் அடுத்த ஒரு மணி நேரத்தில் தாயாரின் தரிசினம் கிடைத்து விடும். பின்னர், மாலை 6 மணிக்கு நீங்கள் சென்னை பஸ் பிடித்தாலும் இரவு 9 மணிக்கெல்லாம் சென்னையை அடைந்து விடுவீர்கள். இந்த ஒரு நாள் ட்ரிப் உங்களுக்கு உபயோகமாக இருக்குமல்லவா? உடனே திருமலைக்குச் செல்ல திட்டமிடுங்கள்!



Click it and Unblock the Notifications






