கோடை இன்னும் ஆரம்பிக்கவில்லை, குளிரும் சற்று குறைந்து விட்டது. பெரிதாக வெயில், குளிர், மழை எதுவும் இல்லை, இந்த நேரம் தான் தமிழ்நாட்டில் உள்ள பல சுற்றுலாத் தலங்களுக்கு சென்று வருவதற்கான சரியான நேரம். ஏனென்றால் கோடை ஆரம்பித்தால் அந்த இடங்களில் எல்லாம் வெயிலின் தாக்கம் சற்று கூடுதலாகவே இருக்கும். அதில் மாட்டிக் கொள்ளாமல் தமிழ்நாட்டின் இந்த அழகிய சுற்றுலாத் தலங்களை கோடை வெயில் வருவதற்கு முன்னரே இந்த மாதத்திலேயே பார்த்து விட்டு வரலாமே! உங்கள் நண்பர்கள் அல்லது குடும்பம் அல்லது பெற்றோர்களுடன் சீக்கிரம் ஒரு ட்ரிப் பிளான் பண்ணி கீழ்க்கண்ட இடங்களுக்கு சென்று விட்டு வாருங்கள்!

சிவகங்கை
பாரம்பரியத்திற்கு பெயர் போன சிவகங்கை மாவட்டம், மதுரையிலிருந்து 48 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. பழங்கால திராவிட கலைக்கு சான்றாக நிற்கும் பல கோவில்கள், பல அரியவகை உயிரினங்களைக் கொண்ட சரணாலயங்கள், உலகமே பார்த்து வியக்கும் செட்டிநாட்டு அரண்மனைகள் என சிவகங்கை மாவட்டம் ஒரு அற்புத சுற்றுலாத் தலமாக திகழ்கிறது.
வேட்டங்குடி பறவைகள் சரணாலயம், பிள்ளையார்பட்டி கோவில், கானாடுகாத்தான், செட்டிநாடு அரண்மனைகள், ஆத்தாங்குடி, ஆயிரம் ஜன்னல் வீடு மற்றும் கவியரசு கண்ணதாசன் மணிமண்டபம் அகியவற்றை இங்கே கட்டாயம் பார்வையிட வேண்டும்.

காஞ்சிபுரம்
"ஆயிரம் கோவில்களைக் கொண்ட பொன்னான நகரம்" என்று அழைக்கப்படும் காஞ்சிபுரம் கலாச்சாரம் மற்றும் தத்துவ மையமாக உலகம் பல்வேறு பகுதிகளிலிருந்தும் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கிறது. திராவிட கட்டிடக்கலையின் உண்மையான மகத்துவத்தை உணர ஒவ்வொருவரும் காஞ்சிபுரத்திற்கு கட்டாயம் வருகை தர வேண்டும்.
சிவபெருமானின் மனைவியான காமாக்ஷியின் உறைவிடமான காஞ்சி காமாட்சி கோயில், பல்லவர் காலத்துக் கோயில்களான ஏகாம்பரேஸ்வரர் கோயில், வரதராஜர் கோயில், கைலாசநாதர் கோயில் உட்பட பல கோயில்களுக்கு நீங்கள் சென்று வரலாம். முக்கியமாக காஞ்சி பட்டு சேலைகளை வாங்க மறக்காதீர்கள்.

கரூர்
வரலாற்றுச் சிறப்பு மிக்க தலங்களின் தாயகமாக விளங்கும் கரூர் அமராவதி ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவிற்கு வீட்டு உபயோகப் பொருட்களை ஏற்றுமதி செய்வதால் கரூர் ஜவுளி ஏற்றுமதி மையமாக அறியப்படுகிறது. பொன்னனியாறு அணை, அருள்மிகு கல்யாண பசுபதேஸ்வரர் திருக்கோயில், வெண்ணைமலை, திருமுக்கூடலூர், மாயனூர் அணைக்கட்டு, அருள்மிகு கல்யாண வெங்கடரமண சுவாமி திருக்கோயில் மற்றும் பல சுற்றுலாத் தலங்கள் கரூரின் சிறப்பம்சமாகும்.

புதுக்கோட்டை
வரலாற்றுக்கு முந்தைய மனிதனின் குடியேற்றங்கள், பெருங்கற்கால கல்லறைகள் மற்றும் பாறைகளால் வெட்டப்பட்ட குகை நினைவுச்சின்னங்கள் ஆகியவற்றின் சான்றுகள் புதுக்கோட்டையின் அற்புதமான சுற்றுலாத் தலங்கள் ஆகும். கோவில்கள், குகை ஓவியங்கள், கோட்டைகள், அரண்மனைகளுடன் வளமான கலாச்சார பாரம்பரியத்தை கொண்டுள்ள புதுக்கோட்டை மாவட்டம் தமிழ்நாட்டில் அதிகம் பிரபலம் ஆகாத சுற்றுலாத்தலம் என்று தான் சொல்ல வேண்டும்.
சித்தன்னவாசல், கட்டுபவ பள்ளிவாசல், குன்னந்தர்கோயில், திருமயம் கோட்டை, விராலிமலை, ஆவுடையார் கோயில், விராலிமலை சரணாலயம் ஆகியவை இங்கே நீங்கள் கட்டாயம் பார்த்து ரசிக்க வேண்டிய சுற்றுலாத் தலங்களாகும்.

நாமக்கல்
வளமான கலாச்சாரம் மற்றும் வரலாற்றுடன் ஆசீர்வதிக்கப்பட்டுள்ள நாமக்கல் மாவட்டத்தில் ஏராளமான கோவில்கள் மற்றும் இயற்கை வரலாற்று இடங்கள் கொட்டிக் கிடக்கின்றன. ஆதிகுலம், பல்லவர்கள், விஜயநகரப் பேரரசு மற்றும் ஹொய்சாலர்கள் போன்ற வம்சங்களின் கட்டிடக்கலை பிரதிபலிப்புகளை நாம் இங்கே கண்டு ரசிக்கலாம். புகழ்பெற்ற கொல்லி மலைகள், சித்தர் குகைகள், தாதாகிரி முருகன் கோவில், நைனா மலை, சேலூர் வியூபாயின்ட், துர்கம் கோட்டை, நாமக்கல் பாறை கோட்டை ஆகியவை இங்கே நீங்கள் பார்க்க வேண்டிய சுற்றுலாத் தலங்களாகும்.

விழுப்புரம்
பாண்டிச்சேரி மற்றும் கடலூருக்கு இடையே அமைந்திருக்கும் விழுப்புரம் மாவட்டத்தில் பல அழகிய சுற்றுலாத் தலங்கள் உள்ளன. உலகப்புகழ்பெற்ற ஆரோவில் புதுவைக்கு அருகில் அமைந்திருந்தாலும் உண்மையில் விழுப்புரம் மாவட்டத்தின் கீழ் தான் வருகிறது. அதே போல மங்கள புத்த விஹார், மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி கோவில், செஞ்சி கோட்டை, சிங்கவரம் பெருமாள் கோவில், மண்டகப்பட்டு, மயிலம் முருகன் கோவில், திருவக்கரை வக்ரகாளியம்மன் கோவில், மரக்காணம் கடற்கரை, திருவெண்ணைநல்லூர் கிருபாபுரீஸ்வரர் கோயில் ஆகியவை விழுப்புரம் மாவட்டத்தில் அமைந்துள்ள அற்புதமான சுற்றுலாத் தலங்களாகும்.

வேலூர்
வேலூர் நகரின் மையத்தில் அமைந்துள்ள அற்புதமான கோட்டையின் காரணமாக 'கோட்டை நகரம்' என்று செல்லப்பெயர் கொண்டு அழைக்கப்படும் வேலூர் கலாச்சார பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் பல சுற்றுலாத் தலங்களைக் கொண்டுள்ளன. ASI மியூசியம், ஸ்ரீபுரம் தங்கக் கோவில், பெரியார் பூங்கா, வேலூர் கோட்டை, பழமதி மலைகள், திப்பு கோட்டை, கைகல் நீர்வீழ்ச்சி, ஏலகிரி, புங்கனாறு ஏரி ஆகியவை வேலூர் மாவட்டத்தின் முதன்மையான சுற்றுலாத் தலங்களாகும்.
மேற்கூறப்பட சுற்றுலாத் தலங்கள் அனைத்திற்கும் நீங்கள் வருடத்தின் எல்லா நாட்களிலும் செல்லலாம் என்றாலும் கூட, வரும் கோடை வெயிலில் சிக்கி கொள்ளாமல் ஒரு ட்ரிப் அடித்து விட்டு வர ஏற்ற இடங்களாகும் பயணிகளே!



Click it and Unblock the Notifications








