ஆதி பரம்பொருளான சிவபெருமானுக்கு இந்தியாவில் எண்ணற்ற ஆலயங்கள் அமைந்துள்ளன. அவற்றில் பாடல் பெற்ற ஸ்தலங்கள், சிவபெருமான் தரிசனம் கொடுத்த கோயில்கள், புராணக்கதைகளும் தொடர்புடைய கோயில்கள், கைலாய மலையில் அமைந்திருக்கும் கோயில்கள் எல்லாம் மிகவும் சிறப்பு வாய்ந்தவை. அந்த வகையில், நாம் இப்போது தெரிந்துக் கொள்ள போவது இந்த உலகிலேயே மிக உயரத்தில் அமைந்திருக்கும் சிவன் கோயிலைப் பற்றி தான்! இந்த கோயில் 12,800 அடி உயரத்தில் அமைந்துள்ளது மக்களே!
சங்கராச்சாரியார் கண்டுபிடித்த திருத்தலம்
உத்தரகாண்டின் புகழ்பெற்ற ஐந்து பஞ்ச கேதார் கோவில்களில் ஒன்றான துங்கநாத் சிவன் கோவில் உலகிலேயே மிகவும் உயரமான இடத்தில் அமைந்திருக்கும் கோவிலாகும். இந்த இடத்தைச் சூழ்ந்திருக்கும் அமைதியும் அழகும் வார்த்தைகளுக்கு அப்பாற்பட்டது. ஆதி சங்கராச்சாரியாரால் கண்டுபிடிக்கப்பட்ட இந்த புனிதஸ்தலத்தை ஒரு முறை பார்த்தாலே போதும், கோடி புண்ணியம் வந்து சேருமாம். கிட்டத்தட்ட 5000 ஆண்டுகள் பழமையான துங்கநாத் சிவன் கோவில் உத்தரகாண்டின் உச்சியில் அமைந்துள்ளது. இது தான் உலகிலேயே மிக உயரமான இடத்தில் அமைந்திருக்கும் சிவன் கோவிலாகும்.
இமயமலையில் குடிகொண்டிருக்கும் சிவபெருமான்
இந்து புராணங்களின் படி, சிவபெருமான் பார்வதி தேவியுடன் கயிலாயத்தில் வசிப்பதாக நம்பப்படுகிறது. இமயமலையை சுற்றியுள்ள சிவன் கோவில்களில் சிவபெருமானின் ஆசை நீக்கமற நிறைந்துள்ளதாக கூறப்படுகிறது. அங்கு சென்று வரும் யாத்ரீகர்களும் எம்பெருமானை உணர்ந்த பின்னரே வீடு திரும்புவதாக கூறுகின்றனர். இமயமலை அடிவாரத்தில் அமைந்துள்ள முக்கிய கோவில்களில் உத்தரகாண்டின் துங்கநாட்டில் அமைந்துள்ள சிவன் கோவிலும் ஒன்றாகும்.
அழகிய இமயமலை சாரலில் அமைந்திருக்கும் துங்கநாத்
உத்தரகாண்ட் மாநிலத்தில் அமைந்துள்ள கர்வால் இமயமலையின் பாதைகள் ஏராளமான மரகத நதிகள், இயற்கை அழகு, பனி மூடிய சிகரங்கள், பச்சை நிற மலைகள் மற்றும் பசுமையான காடுகளைக் கொண்டுள்ளது. துங்கநாத் ட்ரெக்கிங் என்பது மலையேற்றப் பயணிகளுக்கு நம்பமுடியாத அனுபவத்தை வழங்கும் எளிதான மற்றும் அற்புதமான மலையேற்றப் பாதைகளில் ஒன்றாகும். அற்புதமான பாதைகளும் அழகிய காட்சிகளும் கடினமான மலையேற்றத்திற்குப் பிறகு மலையேறுபவர்களுக்கு விருந்தாகவே அமைகிறது.
சிவபெருமானின் உடலும் பஞ்ச கேதார் கோவில்களும் ஒன்று
துங்கநாட்டில் அமைந்துள்ள உலகின் மிக உயரமான சிவன் கோவில் பாண்டவர்களால் கட்டப்பட்டது என்று நம்பப்படுகிறது. மகாபாரத போரில் கௌரவர்களை வதம் செய்த தோஷத்திற்காக சிவபெருமானிடம் மன்னிப்பு வேண்டி வந்த பாண்டவர்களை சந்திக்க விரும்பாத சிவபெருமான் காலை வடிவில் உருமாறினார். அவரது உடலின் ஒவ்வொரு பகுதியுடன் தொடர்புடைய இடங்களே 'பஞ்ச கேதார்' ஆகின. துங்கநாட்டில் கைகள் காணப்பட்டன, கேதர்நாட்டில் அவரது கூம்பு; தலை ருத்ரநாத்திலும், தோப்புளும் வயிறும் மத்தியமஹேஸ்வரிலும், தலைமுடி கல்பேஸ்வரிலும் தோன்றின.
5000 ஆண்டுகள் பழமையான கோவில்
கடல் மட்டத்தில் இருந்து 3,680 மீட்டர் உயரத்தில் வீற்றிருக்கும் இந்த கோயில் சந்தேகத்திற்கு இடமின்றி தரிசிக்கத் தகுதியானது. புகழ்பெற்ற துங்கநாதர் கோயில் குருக்ஷேத்திரப் போருக்குப் பிறகு பாண்டவர்களால் கட்டப்பட்டதாக நம்பப்படுகிறது. 5000 ஆண்டுகள் பழமையான இக்கோயில் சிவபெருமானின் மிக உயரமான கோயிலாகும். மேலும் இக்கோயில் அதன் அமைப்பு மற்றும் அற்புதமான கட்டிடக்கலைக்கு பெயர் பெற்றது.
பகவான் ஸ்ரீ ராமர் தியானம் செய்த கோவில்
வட இந்திய கட்டிடக்கலை பாணியில் இந்த கோயிலின் அடித்தளம் பாண்டவ சகோதரர்களில் மூன்றாவது சகோதரரான அர்ஜுனனால் அமைக்கப்பட்டது. இராவணனைக் கொன்ற பிரம்மஹத்தி சாபத்தில் இருந்து விடுபட ராமர் இக்கோயிலில் தியானம் செய்தார் என்ற ஒரு வரலாறு உள்ளது. மேலும் சிவபெருமான், பார்வதி தேவி மற்றும் மற்ற கடவுள்களின் சிலைகளையும் நாம் இங்கு காணலாம்.
ஆறு மாதம் மட்டுமே திறந்திருக்கும் கோவில்
பொதுவாக குளிர்காலத்தில் கடும் பனிப்பொழிவு காரணமாக கோவில் மூடப்பட்டு, முக்கு கிராமத்திற்கு இறைவன் சிலை நகர்த்தப்பட்டு விடும். பின்பு ஏப்ரல் மாத இறுதியில் இந்த கோயிலின் கதவுகள் பக்தர்களுக்காக திறக்கப்படும். ஆகவே இதற்கு ஏற்றார்போல், நம் பயணத்தை திட்டமிட வேண்டும். பனிப்பொழிவு இருக்கும் காலத்தில் சிவபெருமானின் சிலை முக்கு கிராமத்தில் வைக்கப்பட்டு தரிசனம் மற்றும் பூஜை செய்யப்படுகிறது.
சாய்ந்து கொண்டு வரும் உலகின் மிக உயரமான கோவில்
இந்திய தொல்லியல் துறை (ASI) நடத்திய ஆய்வில் டேராடூனில் உள்ள துங்கநாத் கோயிலில் சாய்ந்து கிடப்பது கண்டுபிடிக்கப்பட்டது. 12,800 அடி உயரத்தில் வடக்கு நோக்கி அமைந்துள்ள இந்த கோயில் ருத்ரபிரயாக் மாவட்டத்தில் உள்ள கர்வால் மலையில் அமைந்துள்ளது. துங்கநாத் சிவன் கோவில் 5-6 டிகிரி சாய்ந்து இருப்பதாக தெரியவந்துள்ளது. கோவில் வளாகத்தில் உள்ள சிறிய கட்டமைப்புகள் 10 டிகிரி சாய்ந்து இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.



Click it and Unblock the Notifications








