17ம் நூற்றாண்டின் கடைசியில் முத்துராஜா என்பவரால் முதலில் மண்ணால் இந்த கோட்டை கட்டப் பட்டிருந்தது. பின்னர் திப்பு சுல்தானால் இது ரகசிய சுரங்க பாதைகளுடன் கல்லால் புத்துருவாக்க செய்யப்பட்டது.
1790 ம் ஆண்டு தொத்தவீர ராஜேந்திரா எனும் அரசர் இந்த கோட்டையை கையகப்படுத்தினார். 1812-14 ம் ஆண்டில் லிங்கராஜேந்திர உடையாரால் இந்த கோட்டையில் திரும்பவும் திருத்தங்கள் செய்யப்பட்டன. இறுதியில் 1824ம் ஆண்டு ஆங்கிலேயர் வசம் இந்த கோட்டை வந்தது.
இந்த கோட்டையில் ராஜா விஜயராஜேந்திராவின் பெயர் எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட ஒரு ஆமை சிற்பமும், ராஜா வீர ராஜாவால் கொல்லப்பட்ட இரண்டு யானைகளின் தத் ரூப சிலைகளும் காணப்படுகின்றன. இக்கோட்டைக்குப்பின் ஒரு வீரம் பொருந்திய கதையும் சொல்லப்படுகிறது.இந்த கோட்டையின் முன்புறத்தில் வீரபத்ரர் கோயில் ஒன்று இருந்துள்ளது அதை இடித்து ஒரு கிறித்துவ தேவாலயத்தை 1855ல் ஆங்கிலேயர் கட்டியுள்ளனர்.
ஐரோப்பிய காத்திக் பாணியில் கட்டப்பட்டுள்ள இந்த செயிண்ட் மார்க் தேவாலயம் வண்ண ஓவியங்கள் தீட்டப்பட்ட ஜன்னல் கண்ணாடிகளை கொண்டுள்ளது. இரண்டு முறை புதுப்பிக்கப்பட்ட இந்த ஆலயம் 1933ல் ஒரு கடிகார கோபுரத்தையும் கமிஷனரின் கார் நிறுத்துவதற்கான விதானத்தையும் பெற்றது. 110 அடி நீள பரப்பில் இரண்டு அடுக்குகளை கொண்டதாக இந்த கோட்டை அமைந்துள்ளது.
இதன் வரலாற்று பின்னணி காரணமாக இந்த கோட்டை ஒரு அருங்காட்சியகமாக மாறி தற்சமயம் இந்திய தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ளது.
இதன் உள்ளே பல வரலாற்று சின்னங்கள் உள்ளன. பீல்டு மார்ஷல் கரியப்பாவுக்கென்று ஒரு பிரத்யேக தனி பகுதியும் உள்ளது. இந்த கோட்டைப்பகுதையை ஒட்டி மாவட்ட சிறை வளாகம், கோட்டே மஹா கணபதி கோயில் மற்றும் மஹாத்மா காந்தி பொது நூலகம் போன்றவை உள்ளன.
இந்த கோட்டே மஹா கணபதி கோயில் கூர்க் பகுதியின் முக்கியமான கோயில்களில் ஒன்றாகும். மடிகேரி தசரா உற்சவத்தின்போது இதற்கு சிறப்பு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.