சோம்வார்பேட் தாலுக்காவில் அமைந்துள்ள இந்த புஷ்பகிரி காட்டுயிர் சரணாலயம் உலகின் மிக முக்கியமான பறவைகள் சரணாலயமாக கருதப்படுகிறது. அழிந்து வரும் பல அரிய பறவை இனங்கள் இங்கு காணப்படுகின்றன.
சிரிக்கும் குருவி, கருங்குருவி, ஆரஞ்சு குருவி நீலகிரி குருவி போன்ற ‘ஃப்ளைகாட்ச்சர்’(flycatcher) என்ற வகைப் பிரிவில் அடங்கும் குருவிகள் இங்கு காணப்படுகின்றன.
கடமக்கள் ரிசர்வ் வனப்பகுதி இதன் ஒரு அங்கமாக உள்ளது. அதன் வடபகுதியில் மற்றொரு ரிசர்வ் வனப்பகுதியான பிஸ்லே ரிசர்வ் வனப்பகுதியும் மேற்குப்பகுதியில் குக்கே சுப்ரமண்யா கோயிலும் அமைந்துள்ளது.
இந்த காட்டுயிர் சரணாலயத்தின் உயரம் 160 மீட்டரிலிருந்து 1712 மீட்டர் வரை காணப்படுகிறது. புஷ்பகிரி மலை இங்குள்ள மிக உயரமான சிகரமாகும்.மேலும் குமாரபர்வத் என்ற மற்றொரு சிகரத்தையும் இந்த காட்டுயிர் சரணாலயம் உள்ளடக்கியுள்ளது.
செங்குத்தான மலை அமைப்புகளும் அருவிகளும் சதுப்பு நிலங்களும் கொண்டதாக இந்த காட்டுயிர் சரணாலயம் விளங்குகிறது. இந்த சரணாலயத்தின் 70 சதவிகித பகுதி கர்நாடக மாநிலத்தின் முக்கியமான வெப்ப மண்டலக்காடுகளில் ஒன்றாக உள்ளது.
பசுமை மாறா மரங்கள், மிதவகை பசுமை மாறா மரங்கள், மற்றும் பரந்த புல்வெளி பிரதேசங்கள் போன்றவற்றை இந்த பிரதேசம் உள்ளடக்கியுள்ளது. பலவிதமான காட்டு விலங்குகள் இந்த சரணாலயத்தில் காணப்படுகின்றன.
காட்டு நாய், மரப்பூனை, இந்திய ராட்சத அணில், இந்திய காட்டு முயல், புள்ளி மான், சாம்பார் மான், குரைக்கும் மான், இந்திய காட்டெருமை, காட்டு பன்றி, ராட்சத பறக்கும் அணில் போன்றவை இங்கு வாழும் சில விலங்கினங்களாகும்.
இது தவிர நீலகிரி மரப்புறா, நீலச்சிறகு காட்டுக்கிளி, பழுப்புத்தலை புல்புல், மலபார் பழுப்பு கொம்பு மூக்கன் குருவி, வெண்ணிற வயிறுடன் காணப்படும் நீலக்குருவி மற்றும் மிகச்சிறிய சூரிய குருவி போன்ற பறவை இனங்கள் இந்த சரணாலயத்தில் வசிக்கின்றன.
ஊர்வன வகைப்பிரிவில் கோப்ரா எனப்படும் இந்திய நாகப்பாம்பு, இந்தியன் மலைப்பாம்பு, சாரைப்பாம்பு, தண்ணீர்பாம்பு, ராஜ நாகம், மூங்கில் பச்சை பாம்பு போன்றவை இந்த சரணாலயத்தில் காணபடுகின்றன.