குருத்வாரா பங்க்ளா சாஹீப் எனும் சீக்கிய திருக்கோயில் டெல்லி மாநகரத்தில் உள்ள முக்கியமான சீக்கிய புனிதத்தலங்களில் ஒன்றாக விளங்குகிறது. கன்னாட் பிளேஸ் பகுதியில் அமைந்திருக்கும் இது ஒரு தங்க குமிழ் கோபுரத்தை கொண்டதாக காட்சியளிக்கிறது.
சீக்கியர்களின் எட்டாவது மதகுருவான ‘ குரு ஹர் கிரிஷன்’ என்பவரோடு இது நெருங்கிய தொடர்பை கொண்டுள்ளது. இந்த குருத்வராவில் சீக்கிய இனத்தார் புனிதமாக கருதும் சரோவர் எனும் தீர்த்தக்குளமும் இடம் பெற்றுள்ளது. இந்த தீர்த்தக்குளத்தின் நீரானது அம்ரித்(புனித நீர்) என்று அழைக்கப்படுகிறது.
முற்காலத்தில் இந்த குருத்வாரா வளாகமானது 17ம் நூற்றாண்டில் ஆம்பேர் பகுதியை ஆண்ட ராஜா ஜய் சிங் வசித்த அரண்மனை மாளிகையாக இருந்துள்ளது. அப்போது இம்மாளிகை ஜய்சிங்புரா அரண்மனை என்ற பெயரால் அழைக்கப்பட்டிருக்கிறது.
சிக்கியர்களின் எட்டாவது மதகுருவான குரு ஹர் கிரிஷன் 1664ம் ஆண்டு டெல்லி பகுதிக்கு விஜயம் செய்தபோது இம்மாளிகையில் தங்கியிருந்ததாக சொல்லப்படுகிறது.
அச்சமயம் இப்பகுதியில் அம்மை மற்றும் காலரா போன்ற உயிர்கொல்லி நோய்கள் பரவலாக மக்களை பாதித்திருந்தன. எனவே நோயால் பாதிக்கப்பட்டோர்க்கு இம்மாளிகை வளாகத்தில் இருந்த நன்னீர் கிணற்றிலிருந்து நீரை எடுத்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்த சீக்கிய குரு வழங்கியிருக்கிறார்.
நாளடைவில் துரதிர்ஷ்டவசமாக சீக்கிய குருவும் நோயால் பாதிக்கப்பட்டு 1664ம் ஆண்டில் இந்த ஸ்தலத்திலேயே இறந்துள்ளார். பின்னர் ராஜா ஜய் சிங் அந்த கிணற்றை சுற்றி ஒரு பெரிய குளத்தை உருவாக்கினார்.
அந்தக்குளமே தற்போது சீக்கிய இனத்தாரால் புனிதமான தீர்த்தக்குளமாக அறியப்படுகிறது. உலகில் எங்கெங்கோ வசிக்கும் சீக்கிய மக்கள் இந்த குளத்து நீரை எடுத்து சென்று பூஜைப்பொருளாக பாதுகாக்கின்றனர். இந்த புனித தீர்த்தக்குளத்தின் நீர் மருத்துவ குணங்கள் நிறைந்ததாக இன்று வரை நம்பப்படுகிறது.
குருத்வாரா பங்க்ளா சாஹீப் கோயிலில் ஒரு சரோவர், ஒரு மடப்பள்ளி, ஒரு கலைப்பொருள் காட்சிக்கூடம், ஒரு பள்ளி, பாபா பாகேல் சிங் மியூசியம், ஒரு மருத்துவமனை மற்றும் ஒரு நூலகம் ஆகியவை இடம் பெற்றுள்ளன. ஒரு கோயிலில் சமூகத்துக்கு பயன்படும் நல்ல விஷயங்கள் என்னென்ன இடம் பெற வேண்டும் என்பதற்கு இந்த அம்சங்கள் ஒரு நல்ல உதாரணம்.