டெல்லி ராஜ் காட் ஸ்தலத்திற்கு நிச்சயம் அறிமுகம் தேவையில்லை. தேசிய முக்கியத்துவம் வாய்ந்த இந்த ஸ்தலத்தில்தான் மஹாத்மா காந்தியின் புனித உடல் 1948ம் ஆண்டு ஜனவரி 31ல் தகனம் செய்யப்பட்டது.
சமீப காலமாக இந்தியாவுக்கு வருகை தரும் வெளிநாட்டு முக்கியஸ்தர்கள் யாவரும் வருகை தந்து அஞ்சலி செலுத்தும் ஒரு புனிதஸ்தலமாக இது விளங்குவதும் குறிப்பிடத்தக்கது.
யமுனை நதிக்கரையில் அமைந்துள்ள மஹாத்மா மார்க் பகுதியில் இந்த ராஜ் காட் ஸ்தலம் அமைந்துள்ளது. டெல்லியின் முக்கிய அடையாளங்களில் ஒன்றாக திகழும் இந்த ஸ்தலத்துக்கு தினமும் ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் வருகை தருகின்றனர்.
இங்கு கருப்பு சலவைக்கல்லால் உருவாக்கப்பட்டுள்ள பீட அமைப்பின் ஒரு முனையின் அணையா தீபம் எரிந்துகொண்டிருக்கிறது. பீடத்தை சுற்றிவருவதற்கான நடைபாதை மற்றும் பசுமையான புல்தரைகள் ஆகியன நினைவுச்சின்னத்தை சுற்றி காணப்படுகின்றன.
‘ஹே ராம்’ என்ற வார்த்தைகள் பொறிக்கப்பட்ட ஒரு கல்வெட்டையும் பார்வையாளர்கள் இங்கு காணலாம். உயிர் பிரிவதற்கு முன் மஹாத்மா இந்த வார்த்தைகளை உச்சரித்ததாக சொல்லப்படுகிறது.
இந்த நினைவுஸ்தலத்திற்கு விஜயம் செய்யும்போது சில முக்கிய மரபுகளும் பார்வையாளர்களால் பின்பற்றப்படுகின்றன. நினைவுச்சின்ன பகுதிக்குள் நுழையும் முன்பே காலணிகளை கழற்றிவிடுவது என்பது மரியாதையின் அடையாளமாக இந்த ஸ்தலத்தில் கடைபிடிக்கப்படுகிறது.
மேலும் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் இங்கு பூஜைகள் நிகழ்த்தப்படுவதோடு காந்திஜியின் பிறந்த தினம் மற்றும் இறந்த தினங்களில் பிரார்த்தனை நிகழ்ச்சிகளும் நடத்தப்படுகின்றன.
ராஜ் காட் ஸ்தலத்திற்கு விஜயம் செய்யும்போது அருகிலேயே அமைந்திருக்கும் ஏனைய முக்கிய தலைவர்களின் நினைவுஸ்தலங்களையும் நீங்கள் இங்கு தரிசிக்கலாம்.
ஜவஹர்லால் நேருவின் நினைவுச்சின்னமான சாந்திவன், லால் பஹதூர் சாஸ்திரியின் நினைவுச்சின்னமான விஜய் காட், இந்திரா காந்தியின் நினைவுச்சின்னமான சக்தி ஸ்தல், கியானி ஜைல் சிங்கின் நினைவுச்சின்னமான எக்தா ஸ்தல் மற்றும் ராஜீவ் காந்தியின் நினைவுச்சின்னமான வீர் பூமி என்பன அவற்றில் குறிப்பிடத்தக்கவை.



Click it and Unblock the Notifications