காசு பிரம்மானந்த ரெட்டி நேஷனல் பார்க் அல்லது சுருக்கமாக கே.பி. ஆர் நேஷனல் பார்க் என்று அழைக்கப்படும் இந்த வனப்பூங்கா ஹைதராபாத் நகரின் சொகுசுப்பிரதேசமான ஜுபிலி ஹில்ஸ் பகுதியில் உள்ளது.
நிஜாம் இளவரசர் முகர்ரம் ஜாவுக்கு சொந்தமான சிரான் அரண்மனை இந்த பூங்கா வளாகத்துக்குள்ளேயே அமைந்துள்ளது. கான்கிரீட் காட்டுக்குள் ஒரு நிஜக்காடு என்று இந்த கே.பி. ஆர் பூங்கா வர்ணிக்கப்படுகிறது.
அரண்மனைப்பகுதியை உள்ளடக்கிய இந்த வனப்பகுதிக்கு 1998ம் ஆண்டில் தேசியப்பூங்கா அந்தஸ்து வழங்கப்பட்டது. அப்போது இப்பகுதியின் பெயரும் மாற்றி அமைக்கப்பட்டது.
சிரான் பேலஸ் என்ற அரண்மனையின் பெயர் மற்றும் மாறாமல் அப்படியே வழங்கிவருகிறது. காலை மற்றும் மாலை நேரங்களில் உடற்பயிற்சிக்காக அதிக மக்கள் இந்த பூங்காவுக்கு வருகை தருவதால் இந்த நேரங்களில் கூட்டம் அதிகமாக இருப்பதை காணலாம்.
ஆரோக்கியத்திற்காக நடைப்பயிற்சி மற்றும் ஓட்டநடை போன்ற உடற்பயிற்சிகளில் பலர் ஈடுபட்டிருப்பதை இங்கு பார்க்க முடியும். பலவிதமான பறவைகள் மற்றும் வண்ணத்துப்பூச்சிகளையும் இந்த பூங்காவில் பயணிகள் பார்த்து ரசிக்கலாம்.
காட்டுப்பூனை, மயில், எறும்புத்திண்ணி மற்றும் இந்தியப் புனுகுப்பூனை போன்ற உயிரினங்கள் இங்கு வசிக்கின்றன. இங்கு வசிக்கும் மிருகங்கள் மற்றும் பறவைகளின் குடிநீர் தேவைக்காக பல சிறிய குளங்களும் இந்த பூங்காவில் வெட்டப்பட்டுள்ளன.
அதுமட்டுமல்லாமல் இந்த பூங்காவில் வசிக்கும் மிருகங்களுக்கும் பறவைகளுக்கும் பார்வையாளர்கள் உணவளிப்பது தடை செய்யப்பட்டுள்ளது.