ஹைதராபாத் நகரத்திற்கு அருகில் உள்ள வனஸ்தலி எனும் இடத்தில் இந்த மஹாவீர் ஹரிணா வனஸ்தலி நேஷனல் பார்க் எனும் தேசியப்பூங்கா அமைந்துள்ளது. விஜயவாடா சாலை வழியாக இந்த தேசியப்பூங்காவை சென்றடையலாம்.
இது ஒரு மான்கள் பாதுகாப்பு வனச்சரகமாக அறியப்படுகிறது என்ற போதிலும் இங்கு இதர உயிரினங்களையும் பார்வையாளர்கள் பார்க்கலாம். வரலாற்றுக்காலத்தில் இந்த வனப்பகுதியானது நிஜாம் மன்னர்கள் வேட்டைக்கு பயன்படுத்திய கானகமாக விளங்கியுள்ளது.
சுதந்திரத்திற்கு பிறகே இது தேசியப்பூங்காவாக மாற்றப்பட்டுள்ளது. வேட்டைப்பகுதியாக விளங்கிய இந்த கானகத்தின் உயிரினங்களையும் தாவரவகைகளையும் பாதுகாகாக்கும் நோக்கத்துடன் தேசியப்பூங்காவாக மாற்றப்பட்டுள்ளது.
மான்கள் தவிர கருப்புமான் மற்றும் முள்ளம்பன்றிகளும் அதிகமாக இந்த பூங்காவில் வசிக்கின்றன. மேலும் நீர்ப்பறவைகளான கொக்கு, மீன்கொத்தி, நீர்க்காகம், நாரை போன்றவையும் இங்கு அதிக அளவில் வசிக்கின்றன.
சுற்றுலாப்பயணிகள் ஹைதராபாத்திலிருந்து பேருந்துகள் மற்றும் தனியார் டாக்சிகள் மூலமாக எளிதில் இந்த தேசியப்பூங்காவுக்கு செல்லலாம். பூங்காவை சுற்றிப்பார்ப்பதற்காக வழிகாட்டிகளுடன் கூடிய சிறு காட்டுச்சுற்றுலாப்பயணங்கள் வனத்துறையால் ஏற்பாடு செய்து தரப்படுகின்றன. காட்டு விலங்குகளை பார்த்து ரசிப்பதற்காக ஒரு உயரமான கோபுரம் ஒன்றும் இந்த பூங்காவில் அமைக்கப்பட்டுள்ளது.