ஹைதராபாத் நகரில் உள்ள இந்த ஸ்பானிஷ் மசூதியானது இந்தியாவிலேயே இதுபோன்று ஒன்றே ஒன்றுதான் எனும் புகழை பெற்றுள்ளது. இது ஐவான் – இ – பேகம்பேட் அல்லது மஸ்ஜித் உத் தௌலா என்று உள்ளூர மக்களால் அழைக்கப்படுகிறது.
பைகா வம்சத்தை சேர்ந்த நவாப்பான சர் இக்பால் உத் தௌலா என்பவர் ஸ்பெயின் நாட்டுக்கு விஜயம் செய்தபோது அங்கு கட்டப்பட்டிருந்த கொர்டோபா கதீட்ரல் பாணி மசூதியை பார்த்து அவற்றின் அழகில் மிகவும் கவரப்பட்டார்.
ஊர் திரும்பிய அவர் அதேபோன்ற ஒரு மசூதியை உருவாக்க விரும்பி 1906ம் ஆண்டில் இந்த ஸ்பானிஷ் மசூதி கட்டுமானத்தை துவங்கியுள்ளார். ஸ்பெயின் நாட்டிலுள்ள கொர்டோபா கதீட்ரல் மசூதியைப்போன்றே இது வடிவமைக்கப்பட்டது.
இருப்பினும் கர்நாடகாவில் உள்ள குல்பர்கா ஜமா மசூதியிலிருந்தும் சில வடிவமைப்பு அம்சங்கள் இதன் உருவாக்கத்தில் சேர்க்கப்பட்டுள்ளன. மூர் வம்ச கட்டிடக்கலை அம்சங்களை கொண்டிருப்பதால் இது மூர் மசூதி என்றும் அழைக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
வெளியிலிருந்து பார்ப்பதற்கு ஒரு கதீட்ரல் தேவாலயம் போன்ற காட்சியளிக்கும் தனித்தன்மை காரணமாக இது உலகளாவிய புகழை பெற்றுள்ளது. கட்டிடக்கலை அம்சத்தில் ஆர்வம் உள்ளவர்கள் அவசியம் தரிசிக்க வேண்டிய அம்சம் இந்த ஸ்பானிஷ் மசூதி என்பதில் சந்தேகமே இல்லை.